குண்டு வெடிப்புகளும் தீவிரவாதத் தாக்குதல்களும் தொடர்கதையாகிவிட்ட இன்றைய நிலை மிக மிக கவலைக்கிடமானது. இது எந்த விதத்திலும் நம்மைப் போன்ற வளரும் நாட்டிற்கு அதுவும் சீனா போன்ற மிகப் பெரிய சக்தியோடு போட்டியிடும் நாட்டிற்கு நல்லதல்ல.
கடந்த வாரம் தான் அமெரிக்காவின் உளவுத் துறை 2030ல் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப் பெரிய சக்திகளாக உருவெடுக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இத்தகைய தீவிரவாதத் தாக்குதல் பல்வேறு ஊகங்களுக்கு இடம் கொடுக்கிறது.
தாக்கப்பட்ட இடம் பொது மக்கள் கூடும் இடம் அல்ல. வெளி நாட்டினரும், உயர் வர்க்கத்தினரும் உலாவும் இடம்.
மும்பையின் முக்கியச் சின்னங்களாகத் திகழ்கின்ற இடங்கள். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமாபாத்தில் ஒரு ஹோட்டல் தகர்க்கப் பட்டது நினைவிருக்கலாம்.
இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் 'பாரதம் தன்னையே காத்துக் கொள்ளத் தெரியவில்லை' என்ற அவப் பெயர் ஏற்படக் காரணமாகிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர தரம் வாய்ந்த வல்லுனர்கள் இருந்தால் மட்டும் போதாது. மலிவான விலை இருந்தால் மட்டும் போதாது. பாதுகாப்பும் நிம்மதியும் வேண்டும்.
இது தான் இன்றைய முக்கியமான தேவை. இதற்கு எத்தகைய ஏற்பாடுகளையும், செக்யூரிடி செக் முதலிய சிறு சிறு சிரமங்களையும் ஏற்றுக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் அருமையாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மும்பை காவல்துறையினருக்கும், கமாண்டோக்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுகளும் உரித்தாகும்.
ஆகவே, இந்தியர் அனைவருக்கும் தேவையானது - 'பாதுகாப்பான பாரதம் - வலிமையான பாரதம்'
ஜெய் ஹிந்த்.