இந்தியாவில் மூன்று தேசிய விடுமுறை நாட்கள்!!!. காந்தியடிகள் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம். சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடியேற்றி, மிட்டாய் வினியோகித்து, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து, டிவியில் சிறப்புப் பட்டிமன்றம், திரைப்படங்கள் பார்த்து கொண்டாடி மகிழ்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் வரை இவ்விரண்டு தினங்களிலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அவ்வாறு இல்லை.
சரி குடியரசு தினத்தின் வரலாற்றை சற்று சுவையாகப் பார்ப்போமா?
முதன் முதலில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள் தொடங்கி இந்திய சுதந்திரப் போரின் கடைசி கட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரை அனைவரும் இன்றைய இந்தியக் குடியரசுக்கு வித்திட்டவர்கள் எனக் கூறலாம்.
ஆரம்பத்தில் கம்பெனி மூலம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார், 1857ம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு, கம்பெனியால் இவ்வளவு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியாது என்று முடிவு செய்து, 1858ல் இந்திய அரசுச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார்கள். அன்று முதல் இந்தியா பிரிட்டிஷ் அரசின் பகுதியானது. லண்டனில் ஒரு 'செகரட்டிரி ஆஃப் ஸ்டேட்' பொறுப்பு வகிக்க இந்தியாவில் 'கவர்னர் ஜெனரல்' ஆட்சி செய்தார்.
இதற்குப் பிறகு இடையில் சிற்சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மின்டோ - மார்லி, மாண்டேகு-செம்ச்ஃபோர்டு ஆகியவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், அடிப்படையில் இந்திய அரசுச் சட்டம் 'ட்ராகோனியன் லா' அதாவது அடக்குமுறை அம்சங்கள் நிறைந்திருந்தது. மக்களுக்கான ஆட்சிமுறையாக இல்லாமல் மன்னருக்கான ஆட்சிமுறையாகவே இருந்து வந்தது.
பிறகு 1935ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் சற்று தளர்த்தப்பட்ட அம்சங்களோடு வெளிவந்தது. இதுதான் நமது அரசியல் சட்டத்திற்குத் தந்தை என்று கூறலாம். இதற்கு முன் 1932ல் வந்த 'கம்யூனல் அவார்ட்' என்ற ஒரு சட்டம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி வாக்குரிமை என்ற நிலையை ஏற்படுத்தி பிரிவினைக்கு நிரந்தர வழி வகுத்தது.
இடையில் வலுத்த சுதந்திரப் போரும், பிரிவினைப் போரும், இரண்டாம் உலகப் போரும் இது வேலைக்காகாது என்ற எண்ணத்தை ப்ரிட்டிஷாருக்கு ஏற்படுத்தி நமக்கு சுதந்திரம் வழங்கும் முடிவுக்குத் தள்ளின.
1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள், இந்தியா 'ப்ரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்தும் அதன் தலைமையிலிருந்தும் முழுமையாக விடுதலையடைகிறது' என்றும் 'பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியாவிலுள்ள பழங்குடிப் பகுதிகளினுடனான உறவும் ரத்தாகிறது' என்றும் பறைசாற்றியது, இந்திய விடுதலைச் சட்டம் 1947.
ஆக இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து 1947ல் விடுதலையடைந்தாலும் அவர்களது சட்டம் (இந்திய அரசுச் சட்டம் 1935 மற்றும் இந்திய விடுதலைச் சட்டம் 1947) ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்தியா ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் நமக்கு நாமே வழங்கிக் கொள்ள வேண்டிய அரசியல் சட்டம் தேவை என்ற கருத்து அதற்கு முன்னரே உருவாகியிருந்தது. 1922ல் மகாத்மா காந்தியவர்கள் 'இந்தியாவின் அரசியல் நிலையை நிர்ணயம் செய்ய இந்தியர்களுக்குத்தான் உரிமையிருக்கிறது' என்று கூறினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரையில் 'அரசியலமைப்புச் சட்டம் வெறும் சட்டம் மட்டுமல்ல, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அறைகூவல், சத்தியம், உறுதிப்பாடு' என்றார்.
இதுவரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் கையில் இருந்த 'ரிலே' இப்போது அரசியல் சட்ட வல்லுனர்களின் கைக்கு மாறியது.
இதனடிப்படையில் அமைந்திட்ட இந்திய அரசியல் சட்டசபை டாக்டர் அம்பேத்கார் தலைமையில் சீரும் சிறப்புமாக ஒரு சிறந்த அரசியல் சட்ட முன் வடிவைக் கொண்டு வந்தது. 1935ம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது இந்திய அரசியல் சட்டம். இதன் வரலாறும் மிகப் பெரியதும் சுவையானதும் கூட. ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டதற்கான காரணம், ஸ்லம்டாக் மில்லியனரில் அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட அனுபவம் போன்றது.
இவ்வாறு ஏற்பட்ட அரசியல் சட்டம் 26 நவம்பர் 1949ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து அதாவது 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டது.
ஆக ஜனவரி 26 1950 முதல் நாம் ஆட்சி செய்வது இந்த இந்திய அரசியல் சட்டப் படிதான். இந்த இந்திய அரசியல் சட்டம் "மக்களுக்காக மக்களால்" இயற்றப்பட்டது. ஆகவே முழுமையான சுதந்திர மக்களாட்சி மலர்ந்தது ஜனவரி 26 1950ல்தான்.
ஜனவரி 26ல் இந்தியா என்னும் அரசியல் பிரிவில் குடியரசு மலர்ந்த நாள். ஆகஸ்டு 15ல் நாம் சுதந்திரம் பெற்றோம். யார் அரசாள்பவர் என்பதில் குழப்பம் நீடித்தது. அந்தக் குழப்பமெல்லாம் மறைந்து, அரசியல் சட்டமியற்றப்பட்டு அது ஏற்கப்பட்ட நாள் இது. இந்திய மக்கள் சுதந்திரமடைந்தது மட்டுமன்றி சுயமாக அரசாளத் தொடங்கினர். எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற நிலை ஏற்பட்டது. இதன் மூலம் இந்திய சுதந்திரப் போருக்கான முழுமையான முடிவு ஏற்பட்டது.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். இந்தக் குடியரசின் பலன் முழுமையாகப் பெற முயல்வோம்.