Monday, April 12, 2010

எனக்குப் பிடித்த நடிகையர் 10/10 - பார்ட் 1























பிரிக்க முடியாததும், சேர்ந்தே இருப்பதுமாகிய தமிழும் திரையுலகமும் நம்மை என்றும் காப்பதாக!

"லாங்க் லாங்க் அகோ, சோ லாங்க் அகோ, நோ படி கேன் சே ஹவ் லாங்க் அகோ" என்ற ஆங்கிலப் பழமொழி(?!)க்கேற்ப என்றோ ஒரு காலத்தில் என்னை இந்தத் தொடருக்கு அழைத்த மாமனிதர் வாழ்க வளர்க!!

ஆனால் ஒன்று. என்னைப் போன்றவர்களிடம் உங்களுக்குப் பிடித்த பத்து நடிகைகளைப் பட்டியலிடுங்கள் என்று கேட்டால், என்ன செய்வது. இது நிச்சயமாக மாட்டிவிடும் வேலைதானே. பட்டியலில் இல்லாதவர்களிடம் திட்டு வாங்குவது நானா இவர்களா? பட்டியலில் இருப்பவர்களிடம் கூட எனக்கு ஏன் முதலிடம் தரவில்லை என்ற கேள்விக்கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறதே, இதைப் பற்றியாவது சற்று சிந்தித்தார்களா? - என்றெல்லாம் கேட்கத் தோன்றினாலும், நமக்கு அவ்வளவு காட்சிமை (சீன்) இல்லை என்பதால், ஏதோ நம் பங்குக்கு பத்தைப் போட்டு ஒப்பேற்றுவோம்.

இதில் புதுமையைப் புகுத்தும் விதமாக நான்கு கால கட்டங்களாகப் பிரித்துக் கொண்டேன்.

ஒன்று 'ஓல்டு இஸ் கோல்டு',

இரண்டு 'கலர்ஃபுல் இஸ் சியர்ஃபுல்',

மூன்று 'சினிமாஸ்கோப் - லாட்ஸ் ஆஃப் ஸ்கூப்',

நான்கு - 'லேட்டஸ்ட் - டேஸ்டஸ்ட்'.


இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் " ஓல்டு இஸ் கோல்டு "

1. டி.ஆர்.ராஜகுமாரி


தமிழ்த் திரையுலகில் நம் பாட்டன், முப்பாட்டன்களைக் கட்டிப்போட்ட பெயர், டி.ஆர். ராஜகுமாரி. சந்திரலேகா ஒன்று போதும், இவர் பெயர் சொல்ல. எம்.கே.தியாகராஜ பாகவதரின் படங்கள் ஓடியதில் டி.ஆர். ராஜகுமாரிக்குப் பெரும் பங்குண்டு. இன்றளவும், நெம்பர் ஒன் வில்லி நடிகை டி.ஆர். ராஜகுமாரிதான்.

2. பத்மினி

நாட்டியப் பேரொளியின் பிற்காலப் படங்களில் அவ்வளவாக அவரால் ஜொலிக்க முடியாவிட்டாலும், அவரது முற்காலப் படங்கள் அவருக்கு நடிப்பில் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தன. வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தியுடன் ஆடும் ஆட்டமும் பி.எஸ். வீரப்பாவின் 'சபாஷ் சரியான போட்டி'யும் மறக்க முடியுமா?


3. விஜயகுமாரி

விஜயகுமாரியின் 'தமிழ்' முகமும் வசன உச்சரிப்பும், ஆழ்ந்த நடிப்பும், மிகவும் சிறப்பானவை. அவரது பல படங்கள் கிளாசிக் மூவீஸ் வகையைச் சேர்ந்தவை. நானும் ஒரு பெண்ணாகட்டும், வானம்பாடியாகட்டும் அல்லது பிற படங்களாகட்டும், தன் நடிப்புத் திறமையால் சவாலான பாத்திரங்களை இயல்பாக நடித்துக் கொடுத்தவர். எஸ்.எஸ்.ஆருடன் இணைந்து நடித்தவை கூடுதல் வெற்றி கண்ட படங்கள்.


4. அஞ்சலி தேவி

நன்றாகத் துவங்கிய அவரது கேரியர், சிறந்த அம்மா கேரக்டராக வந்து முடிந்தது. அடுத்த வீட்டுப் பெண் முதலான பல படங்கள் பேர் சொல்லும் படங்கள். உன்னைக் கண் தேடுதே, 'எக்' என்று சொல்லும் ஒரு 'எக்'கில் கிக் இருப்பதை அன்னாள் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்கள்!


5. பானுமதி

லேடி சூப்பர்ஸ்டார், என்ற பெயருண்டு இவருக்கு. பற்பல கண்டிஷன்கள் போட்ட ஒரே நடிகை இவர்தான். இவரது டயலாக் டெலிவரியும் மேனரிசமும் இவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டின.


6. சரோஜாதேவி

கீச்சுக்குயில் சரோஜாதேவியை பட்டியலில் சேர்க்க வேண்டுமேயென்று சேர்த்திருக்கிறேன். பற்பல படங்கள் நடித்திருந்தாலும், என்னைப் பொறுத்த வரை, அவரது பெர்ஃபார்மன்ஸ் இன்னும் சற்று பெட்டராக இருக்கலாம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


7. சாவித்ரி

சரோஜா தேவிக்குப் போட்ட கமெண்டே இவருக்கும் போடலாம்.



8. ஈ.வி.சரோஜா

ஒரு திறமையான ஆனால் சரியாகக் கவனிக்கப்படாத நடிகை. என் தங்கையில் அறிமுகமாகி, வீரத்திருமகன், குலேபகாவலி, படிக்காத மேதை என்று பற்பல படங்களில் நடித்தவர். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவி.


9. சச்சு

மற்றுமொரு திறமையான நடிகை, தடம் புரண்டு காமெடி நடிகையானது வரலாற்றுச் சோகம்.


10. தேவிகா

நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்பது வரை சரி. இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது என்பது எந்த ஊர் நியாயம் என்பது தெரியவில்லை. இருந்தாலும், ஆண்டவன் கட்டளை முதலான நல்ல படங்களில் நடித்துள்ளார்.



அடுத்த தலை முறை நடிகைகளைப் பற்றி, அடுத்த பதிவில்....

(மேற்கண்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)



Friday, April 9, 2010

பார்வை



காற்றின் மெல்லசைவும்
கடலின் நல்லலையும்
சங்கின் வெண்ணிறமும்
சலங்கை ஒலிக்குரலும்

தேனின் தீஞ்சுவையும்
தீயின் தண்ணொளியும்
நிலவின் தண் பொழிவும்
நீரின் இன் சுவையும்

பனியின் இளங்குளிரும்
பாலின் நறுசுவையும்
மானின் மருள்விழியும்
மயிலின் சிறு நடையும்

மழையின் சிறுதுளியும்
மலையின் பெருவெளியும்
யாழைப் பழித்த மொழியும்
வாளைப் பழித்த விழியும்


ஆஹா...



கண்ணே...



உன்னை உலகிலுள்ள அத்துணை

பொருளாகவும் பார்க்கக்

கற்றுக் கொடுத்து விட்டார்கள்...



.




.





.



.




.




.








பெண்
ணாகத் தவிர...

Tuesday, March 2, 2010

பூரி கிழங்கு - சமையல் குறிப்பு

பூரி கிழங்கு (சில ஊர்களில் பூரி மசால்) சரியாகச் செய்யப்படும் பட்சத்தில் மிகச்சுவையான டிஃபன் வகையாகும். அப்படி சுவையாகச் செய்யும் முறையை இப்போது பார்ப்போம்.


பூரி செய்யத் தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - சல்லிக்காமல் இருந்தால் நல்லது
பால் - சிறிதளவு (ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
வெண்ணை அல்லது எண்ணை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு




மாவு பிசையும் முறை:-




சப்பாத்திக்கும் பூரிக்கும் வெவ்வேறு முறையில் மாவு பிசைய வேண்டும். பூரிக்கு சற்று இளகிய பதத்தில் மாவு பிசைய வேண்டும். சிலர் மாவு பிசைந்தவுடன் அதை வெறும் மாவில் புரட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயல். இதனால் எண்ணையில் கசண்டு தங்கி விடும்.

முதலில் மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உப்பைப் போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள்.
பிறகு சற்று குழிவாகச் செய்து முதலில் பாலையும், பிறகு நீரையும் ஊற்றுங்கள். மெதுவாகப் பிசையுங்கள். கையில் மாவு ஒட்டாத வகையில், சேர்ந்த பிறகு, வெண்ணையையோ எண்ணையையோ விட்டு நன்றாகப் பிசையுங்கள். மாவு இறுக்கமாக இல்லாமல் சற்று தளதள வென்று நீரோட்டமாக இருக்க வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊறினால் போதும்.




பூரி சுடும் முறை




எண்ணை வாணலியை அடுப்பில் ஏற்றி, அரை வாணலிக்குச் சற்று குறைவாக எண்ணை விட்டுக்கொள்ளுங்கள்.

ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக மாவை வட்டமாகத் தேய்க்கும் போது உலர்ந்த மாவில் புரட்டக் கூடாது. மாவைத் தேய்க்க எவர்சில்வர் பூரிக்கட்டை / தட்டு அல்லது மொழு மொழு தரை (கிச்சன் ஸ்லாப்) மிகச் சிறந்தது. அந்த இடத்தில் சற்று எண்ணையை விட்டு தேய்த்தால் அருமையாக வரும். மிக மெல்லியதாகத் தேய்க்காமல் சற்று கனமாக இட வேண்டும்.

எண்ணை காய்ந்தவுடன் ஒரு பூரியை வாணலியில் போட்டு அதன் மேல் காய்ந்த எண்ணையைத் துடுப்பால் தள்ள வேண்டும். அப்போது புஸ்ஸென்று பூரி உப்பிக் கொண்டு வரும். பிறகு திருப்பி விட்டு சற்று பொன்னிறமானவுடன் வெளியே எடுத்து விடவேண்டியதுதான்.

இப்போது ஓட்டலில் கிடைப்பது போலவே உப்பலான, மெதுவான சுவையான பூரி தயார்!!!




அடுத்து கிழங்கு செய்யும் முறை:-




முதலில் தேவையான பொருட்கள்.


உருளைக்கிழங்கு - 4 - 5 பெரிய கிழங்குகள்
வெங்காயம் - 2 - 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் - 3 - 4
இஞ்சி - ஒரு இன்ச் சைசுக்கு ஒரு துண்டு.
கொத்து மஞ்சள் - ஒரு விரற்கிடை
தாளிக்கத் தேவையான பொருட்கள் (கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு)
தணியாப் பொடி (மல்லிப் பொடி) - சிறிதளவு
கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:-


உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சற்று சிறிய அளவில் நசுக்கியோ, நறுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீள வாக்கில் சின்னதாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
பச்சை மிளகாயை நீளவாக்கில் 'ஸ்லிட்' செய்து வைத்துக் கொள்ளுங்கள்
இஞ்சியை இரண்டு மூன்றாக அரிந்து, நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கொத்து மஞ்சள் கிடைத்தால் அதை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையைத் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்த உடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு என்ற வரிசையில் போட்டு கடுகு வெடிக்கும் வரையும், பருப்புகள் சிவக்கும் வரையும் அதை துடுப்பால் தள்ளிக் கொண்டே இருங்கள். பிறகு பச்சை மிளகாயைச் சேருங்கள். அடுத்து இஞ்சியையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும்.

இவை வதங்கும் போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். இவை வதங்கும் போது உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒன்றாகக் கிளரி அதன் மேல் தணியாத் தூளைத் தூவி நன்றாக வதக்க வேண்டும்.

இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். சற்று இளகிய பதம் வரும் போது அதன் மேல் மல்லித் தழையும், கருவேப்பிலையையும் கிள்ளிப்போட்டு இறக்கி விடுங்கள்.

இப்போது சுவையான கிழங்கு தயார்!!!

கொத்து மஞ்சள் கிடைக்க வில்லையென்றால் மஞ்சள் தூளை வெங்காயம் வதங்கும் போது மஞ்சள் தூளைச் சேர்க்கலாம்.

இந்தக் காம்பினேஷனுக்கு இணையான டிஃபன் உலகத்திலேயே இல்லை.

செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

Sunday, February 28, 2010

வழக்கம் போல்....

வழக்கம் போல் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்து கொண்டிருக்கிறான்.

வழக்கம் போல் நிலவு வளர்ந்து தேய்ந்து வருகிறது

வழக்கம் போல் புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது

வழக்கம் போல் தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும், மொழி,மத,பிராந்திய வெறியர்களும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல் விலைவாசி உயர்ந்துகொண்டேஏஏஏஏஏஏ இருக்கிறது.

வழக்கம் போல் மன்மோகன்சிங் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறார்

வழக்கம் போல் சிதம்பரம் கடைசிக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

வழக்கம் போல் கலைஞருக்கும், அம்மையாருக்கும் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் போக்குவரத்து நெரிசலில் சென்னை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வழக்கம்போல் பதிவுலகில் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.


அட..

எல்லாமே வழக்கமாக இருக்கும் போது நான் மட்டும் மாறினால்?

அதனால்தான்..


வழக்கம் போல் . . .

நான். . .

பதிவுகளைத் தொடர்ந்து தராமல் இருக்கிறேன்.

Friday, January 29, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 22

அத்தியாயம் 22 : இவை போதாது.

கொல்லி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த மாலிக்கின் படைகளை நடத்தி வந்த ஜலாலுதீன், மாலிக்கிடமிருந்து ஒரு தகவலும் வராமல் போகவே என்ன செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். கொள்ளைக் கூட்டத்தின் கலவையாக அமைந்திருந்த அந்தப் படையினர் நீண்ட காலம் அமைதியாக இருந்து அறியாதவர்கள். அப்போதே அவர்களிடத்தில் சிறு சலசலப்பு ஏற்படத் துவங்கியிருந்தது.

ஆயினும் விஷயம் கைமீறிச் செல்வதற்குள் மாலிக் வந்து சேர்ந்தான். வந்தவன் முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குக் கோபத்தின் உச்சியில் இருந்ததைக் கண்ட ஜலாலுதீனுக்கு அவனை அண்டவும் அச்சமாக இருந்தது. மாலிக்கின் அழைப்பிற்காகக் காத்திருந்தவன் படைகளிடையே மாலிக்கின் வருகையை அறிவிக்கும் படி பணித்துவிட்டு, அவைகளை வரிசைப்படுத்தவும் உத்தரவிட்டான்.

ஜலாலுதீனின் இந்த ஏற்பாடுகள் மாலிக்கின் மனதை ஓரளவு சாந்தப்படுத்தின. அவனை அருகில் அழைத்து, "மிகச் சிறப்பாகப் படையை அழைத்து வந்திருக்கிறாய், ஜலாலுதீன். இத்தகைய முரட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எனக்கே சில காலம் பிடித்தது. உன்னிடத்தில் விரைவாக பணிந்துவிட்டார்கள்." என்றான்.

"எல்லாம் உங்கள் உத்தரவுப்படியே நடந்தது, ஹுசூர். தாங்கள் சொல்லியபடியே செய்ததால் ஒரு குறைவும் இல்லை. இனியும் உங்கள் ஹுக்குமிற்காகக் காத்திருக்கிறோம்." என்றான் பணிவுடன்.

"அச்சா. ஜலாலுதீன், நம்மைத் தக்காணத்திற்கு, சுல்தான் அனுப்பிய போது என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா"

"நிச்சயமாக ஹுசூர். அதை மறக்க முடியுமா. தக்ஷிண பாரதத்தின் முக்கியமாக மாபாரின் (மதுரையை மாபார் என்று அழைத்தனர் சுல்தானியர்கள். பின்னர் அதுவே திரிந்து மலபார் ஆனது) உயர்ந்த செல்வங்களைப் பற்றி தான் அறிந்தவற்றைக் கூறினார். அந்தப் பகுதி தன் ஆளுகைக்குட்பட்டு இருக்கவேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினார். அதற்கான தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர்கள். இறைவன் அந்த சந்தர்ப்பத்தையும் தங்களுக்குக் காட்டியுள்ளான்" என்று நிதானமாக அதே சமயத்தில் தீர்க்கமாக எடுத்துரைத்தான் ஜலாலுதீன்.

"அத்தகைய பெரும் பொறுப்பை எனக்கு அளித்ததன் காரணம் என்ன?" என்று வினவினான் ஜலாலுதீனின் அறிவைச் சோதிக்க எண்ணி.

"சுல்தானுக்காக முதலிலேயே தேவகிரியைப் பிடித்தீர்கள். அவர்களிடமிருந்து வரியையும் வசூலித்து வருகிறீர்கள். தக்காணம் தங்களுக்குத் தலைகீழ்ப்பாடம். சிறிய படையையும் வைத்துக் கொண்டு பெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளீர்கள். இவை போதாதா. உங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க"

"ம். ஆம். இவை போதாது. ஜலாலுதீன், இவை போதாதுதான்" என்றான் மாலிக் சற்று விரக்தியுடன்.

"ஹுசூர். மன்னிக்க வேண்டும். புரியவில்லை"

"ஜலாலுதீன். சுல்தானுக்கு மாபாரைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், தன்னிடம் இருக்கும் 4,75,000 வீரர்களையும் என்னுடன் அனுப்பியிருப்பார். அத்துணை பேர் இங்கு வந்திருந்தாலும், அவர்களால் இங்கே இருக்கும் செல்வத்தைக் கவர்ந்து செல்வது மிகக் கடினமான செயல். அவ்வளவு செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது. ஹும். நான் வந்து கவர்ந்து செல்வதென்பது, ஆற்று நீரை நாய் நக்கிக் குடிப்பது போன்றது. ஆனாலும் பரவாயில்லை. வந்ததற்குச் சிலவற்றைக் கவர்ந்து சென்று மீண்டும் வரவேண்டும் என்று சுல்தானிடம் கூறுவேன். அப்போது நீ தனியாக வர வேண்டியிருக்கலாம். ஆகவே, இந்தப் பகுதிகளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்."

"உத்தரவு ஹுசூர். இப்போது படை நடத்த அனுமதி உண்டா."

"படையெடுப்பை மேற்கொண்டு நடத்துவது, மதுரையில் பாண்டியப் படையின் நிலையைப் பொறுத்தது. அருகில் உறையூரில் வந்து இறங்கியிருக்கும் வல்லாளனைச் சந்திக்க வேண்டும். அவன் நிலை என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பாவம். என்னை நன்றாக நம்பிவிட்டான் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், தன் தலை நகரை நிர்க்கதியாக விட்டுவிட்டு வந்திருப்பானா. இந்தப் படையெடுப்பை முடித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்று, துவாரசமுத்திரத்தைத் தாக்க வேண்டும். ஆகவே, நமது படைகளில் குதிரைப் படையையும், மங்கோலிய வில்லாளிகளையும் இப்போதே பிரித்துவிடு. துவார சமுத்திரத்தை நீதான் தாக்க வேண்டும். அது உன் பயிற்சிக் களமாக இருக்கும். புரிந்ததா." என்று கூறி நிறுத்தினான் மாலிக்.

"அவ்வாறே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றான் பலமாகத் தலையைத் தாழ்த்தி.

"இன்ஷா அல்லாஹ். இப்போதைக்கு படையைப் பிரிப்பதற்குக் காரணம், வியூகம் அமைப்பதுதான் என்று சொல்லிவிடு. துவார சமுத்திரத்தைத் தாக்கும் திட்டம் மிக ரகசியமாக இருக்கட்டும். மீண்டும் மாலைத் தொழுகைக்குப் பின் என்னை வந்து பார்." என்று அவனை அனுப்பினான்.

=====

தென்னிந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என்று கூறுவர். ஆனால் மாலிக் கஃபூர் படையெடுத்து வந்து தமிழகச் செல்வங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி அவ்வளவாக பாராட்டப்படுவது கிடையாது. களப்பிரர்கள் சில நூற்றாண்டுகளில் செய்த செயல்களை மாலிக் ஒரு சில மாதங்களிலேயே செய்ய முற்பட்டான். அதில் வெற்றி பெற்றானா? அவன் எண்ணம் ஈடேறியதா? மாபார் சுல்தானின் ராஜ்ஜியத்தில் இணைந்ததா?.

(தொடரும்...)

Thursday, January 21, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 21

அத்தியாயம் 21 - உன்னுடன் சேர்ந்து போராட.

ஹொய்சளத் தலை நகர் தொரசமுத்திரத்தை நோக்கித் தனக்கு அளிக்கப்பட்ட படைகளுடன் புறப்பட்ட ஆதவனுக்கு, வல்லாளனே நேரில் வந்து வழியனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புறப்படும் முன், வல்லாளனின் கால்களில் விழுந்து ஆசி பெற வந்த ஆதவனைத் தடுத்து நிறுத்திய வல்லாளன்,

'ஆதவா, ஒரு நாட்டிற்குத் தலை நகரம் முக்கியமானது. என் கவனக் குறைவால் அதைப் போதிய பாதுகாப்பின்றி விட்டுவிட்டேன். அங்கே முக்கியமாக, ஹொய்சள வம்சத்தின் வாரிசு, என் மகன் இருக்கிறான். என்னைப் பற்றிய கவலை இல்லை. ஆனால் என்னுடன் ஹொய்சள வம்சம் முடிந்து விட்டதாக ஏற்படக்கூடாது. ஆகவே உன்னை அங்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம், என் மகனைக் கண்ணின் இமை போல் காத்துவர வேண்டும் என்பதுதான். அப்படியே கோட்டையையும் பலப்படுத்த வேண்டும். உன்னால் நிச்சயம் முடியும் என்று நம்பியே இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். அரசியாருக்கு ஒரு ஓலை தருகிறேன். அவர்கள் சொல்படியும் கேட்டு நடந்து கொள். வெற்றி உனதே போய்வா. இங்கிருந்து அவ்வப்போது ஓலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதே போன்று அங்கிருந்தும் எனக்குச் செய்திகள் வர வேண்டும்." என்று மிக சுருக்கமாக எடுத்துரைத்தான்.

இதைப் போன்று ஏதாவது இருக்கும் என்று நினைத்த ஆதவனும், அரசனின் உத்தரவைப்பெற்ற உடன், தனது படைகளை நடத்தத் துவங்கினான்.

=====

மதுரையைப் போர் மேகங்கள் சூழ்ந்திருக்க, அங்கே அரண்மனையில் அமைதியின்றி அமர்ந்திருந்த சுந்தர பாண்டியனுக்கு விக்ரம பாண்டியர் ஒரு தூது அனுப்பியிருந்தார். அவனைத் தனியாகச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் உள்ள நிலையில் விக்ரம பாண்டியரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் சுந்தர பாண்டியனை ஆட்கொண்டது. நீண்ட சிந்தனைக்குப் பின், விக்ரம பாண்டியரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தான்.

மதுரைக்கு வடமேற்கே தஞ்சை செல்லும் பெரு வழியில் அமைந்திருந்த ஒரு சத்திரத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

"சுந்தரா நலமா"

"நாடு உள்ள நிலையில் நல்ல கேள்வி." சுந்தரனின் பதிலில் வேதனை மிகுந்திருந்தது.

"சுந்தரா, அது நம் மனதைப் பொறுத்தது. எந்த நிலையிலும் நம்மை நாம் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எதிர்ப்பார்ப்பிற்கும், அதனால் ஏற்படும் ஏமாற்றத்திற்கும், நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாகாது. இது உனக்குத் தெரியாததா" குரலில் சற்று கனிவும், கண்டிப்பும் கூட்டிப் பேசினார் விக்ரம பாண்டியர்.

"மாமா, தங்கள் அறிவும், அனுபவமும் என்னை விட வீரபாண்டியனுக்கே அதிகம் பயன் படும் போது, எனக்குக் குறைவாகத் தெரிந்திருப்பதில் வியப்பில்லையல்லவா?"

"சுந்தரா, என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவருமே சமம் தான். உங்களுக்கு மேலாக இந்தப் பாண்டியப் பேரரசைப் பேணிக்காப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்பொழுது, வீர பாண்டியனுடன் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவ்வளவுதான். கூடிய விரைவில் உன்னுடனும் இருப்பேன். என்னை நீ நம்பலாம்"

"நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கிறேன். சரி. என்ன விஷயமாக வரச்சொல்லியிருந்தீர்கள்"

"நம்பிக்கைக்கு நன்றி சுந்தரா. ஒன்றை நன்றாக நினைவில் கொள். விக்ரம பாண்டியன் ஒரு போதும், பாண்டிய மண்ணிற்கோ, மன்னர்களுக்கோ துரோகம் செய்யமாட்டான். சரி விஷயத்திற்கு வருவோம். மதுரைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அறிவாயல்லவா?"

"ம். மதுரையை நோக்கித் திரிசூலம் குறிவைக்கப்பட்டிருக்கிறது." சுந்தர பாண்டியனின் பதிலில் அவனது இயலாமை வெளிப்பட்டது.

"அல்ல. திரிசூலம் அல்ல. ஒரு வேல், அதனுடன் ஒரு வால். அவ்வளவுதான்" என்றார் நகைச் சுவையாக.

"என்ன வேலும் வாலுமா."

"ஆம். வேல், மாலிக் கஃபூரைக் குறிக்கும். அவன் அடியொற்றி வந்த வல்லாளனைத்தான் வால் என்று அழைத்தேன். மாலிக் கஃபூர் மதுரையைத் தாக்கும் போது தானும் இடையில் புகுந்து பழைய கணக்கைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான் வல்லாளன். ஆனால் அந்த வேலையும் முறியடிக்க வேண்டும். வாலையும் நறுக்க வேண்டும்."

"அப்படியென்றால் வீர பாண்டியனின் படை?" சுந்தரனின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

விக்ரம பாண்டியரது உதட்டில் புன் முறுவல் மிகுந்தது. மிகுந்த நிதானத்துடனும், மெதுவாகவும் சொன்னார், அவனுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம். "ஆம். அது, உன்னுடன் சேர்ந்து போராட"

சுந்தர பாண்டியன் மயக்கமுறும் நிலையை எய்தினான். சற்றுத் தெளிந்தபின் விவரமாகக் கூறுமாறு விக்ரம பாண்டியரைக் கேட்டுக்கொண்டான். அவ்வாறே விக்ரம் பாண்டியர் அவரது வியூகத்தைப் பற்றி எடுத்துரைக்க, சுந்தர பாண்டியனது முகத்தில் பரவசம் கூடியது.

ஆனால் மாலிக் கஃபூர் அதுவரை வாளாவிருக்கவில்லை. இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே துவக்கிவிட்டான் அவனது ஆட்டத்தை.

(தொடரும்)