Tuesday, March 2, 2010

பூரி கிழங்கு - சமையல் குறிப்பு

பூரி கிழங்கு (சில ஊர்களில் பூரி மசால்) சரியாகச் செய்யப்படும் பட்சத்தில் மிகச்சுவையான டிஃபன் வகையாகும். அப்படி சுவையாகச் செய்யும் முறையை இப்போது பார்ப்போம்.


பூரி செய்யத் தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - சல்லிக்காமல் இருந்தால் நல்லது
பால் - சிறிதளவு (ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
வெண்ணை அல்லது எண்ணை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு




மாவு பிசையும் முறை:-




சப்பாத்திக்கும் பூரிக்கும் வெவ்வேறு முறையில் மாவு பிசைய வேண்டும். பூரிக்கு சற்று இளகிய பதத்தில் மாவு பிசைய வேண்டும். சிலர் மாவு பிசைந்தவுடன் அதை வெறும் மாவில் புரட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயல். இதனால் எண்ணையில் கசண்டு தங்கி விடும்.

முதலில் மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உப்பைப் போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள்.
பிறகு சற்று குழிவாகச் செய்து முதலில் பாலையும், பிறகு நீரையும் ஊற்றுங்கள். மெதுவாகப் பிசையுங்கள். கையில் மாவு ஒட்டாத வகையில், சேர்ந்த பிறகு, வெண்ணையையோ எண்ணையையோ விட்டு நன்றாகப் பிசையுங்கள். மாவு இறுக்கமாக இல்லாமல் சற்று தளதள வென்று நீரோட்டமாக இருக்க வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊறினால் போதும்.




பூரி சுடும் முறை




எண்ணை வாணலியை அடுப்பில் ஏற்றி, அரை வாணலிக்குச் சற்று குறைவாக எண்ணை விட்டுக்கொள்ளுங்கள்.

ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக மாவை வட்டமாகத் தேய்க்கும் போது உலர்ந்த மாவில் புரட்டக் கூடாது. மாவைத் தேய்க்க எவர்சில்வர் பூரிக்கட்டை / தட்டு அல்லது மொழு மொழு தரை (கிச்சன் ஸ்லாப்) மிகச் சிறந்தது. அந்த இடத்தில் சற்று எண்ணையை விட்டு தேய்த்தால் அருமையாக வரும். மிக மெல்லியதாகத் தேய்க்காமல் சற்று கனமாக இட வேண்டும்.

எண்ணை காய்ந்தவுடன் ஒரு பூரியை வாணலியில் போட்டு அதன் மேல் காய்ந்த எண்ணையைத் துடுப்பால் தள்ள வேண்டும். அப்போது புஸ்ஸென்று பூரி உப்பிக் கொண்டு வரும். பிறகு திருப்பி விட்டு சற்று பொன்னிறமானவுடன் வெளியே எடுத்து விடவேண்டியதுதான்.

இப்போது ஓட்டலில் கிடைப்பது போலவே உப்பலான, மெதுவான சுவையான பூரி தயார்!!!




அடுத்து கிழங்கு செய்யும் முறை:-




முதலில் தேவையான பொருட்கள்.


உருளைக்கிழங்கு - 4 - 5 பெரிய கிழங்குகள்
வெங்காயம் - 2 - 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் - 3 - 4
இஞ்சி - ஒரு இன்ச் சைசுக்கு ஒரு துண்டு.
கொத்து மஞ்சள் - ஒரு விரற்கிடை
தாளிக்கத் தேவையான பொருட்கள் (கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு)
தணியாப் பொடி (மல்லிப் பொடி) - சிறிதளவு
கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:-


உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சற்று சிறிய அளவில் நசுக்கியோ, நறுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீள வாக்கில் சின்னதாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
பச்சை மிளகாயை நீளவாக்கில் 'ஸ்லிட்' செய்து வைத்துக் கொள்ளுங்கள்
இஞ்சியை இரண்டு மூன்றாக அரிந்து, நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கொத்து மஞ்சள் கிடைத்தால் அதை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையைத் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்த உடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு என்ற வரிசையில் போட்டு கடுகு வெடிக்கும் வரையும், பருப்புகள் சிவக்கும் வரையும் அதை துடுப்பால் தள்ளிக் கொண்டே இருங்கள். பிறகு பச்சை மிளகாயைச் சேருங்கள். அடுத்து இஞ்சியையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும்.

இவை வதங்கும் போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். இவை வதங்கும் போது உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒன்றாகக் கிளரி அதன் மேல் தணியாத் தூளைத் தூவி நன்றாக வதக்க வேண்டும்.

இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். சற்று இளகிய பதம் வரும் போது அதன் மேல் மல்லித் தழையும், கருவேப்பிலையையும் கிள்ளிப்போட்டு இறக்கி விடுங்கள்.

இப்போது சுவையான கிழங்கு தயார்!!!

கொத்து மஞ்சள் கிடைக்க வில்லையென்றால் மஞ்சள் தூளை வெங்காயம் வதங்கும் போது மஞ்சள் தூளைச் சேர்க்கலாம்.

இந்தக் காம்பினேஷனுக்கு இணையான டிஃபன் உலகத்திலேயே இல்லை.

செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.