



என்னை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்த அணிமாவுக்கு நன்றிகள் பல. இந்த நேரத்தில் என்னுடைய சினிமா பற்றிய ஒரு தொடர் அதாவது 'பழைய படம் - புதிய பார்வை' பற்றிய அறிவிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி.இனி நேரடியாகக் கேள்வி பதில்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்பது ஞாபகம் இல்லை. ஆனால் நினைவு தெரிந்து பார்த்தது புரட்சித் தலைவரின் முகராசி. வந்தவாசி பாலன் திரையரங்கம் என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளைக் கைத்தட்டி ரசித்தது நினைவில் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். சத்யம் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்பதற்காக இ-புக்கிங் செய்து பார்த்தேன். செலவுதான் கையைக் கடித்து விட்டது :((
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
என்னுடைய மடிக் கணினியில், ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் பார்த்தேன். ஐரோப்பாவில் எடுக்கப் பட்ட முதல் படம் என்று நினைக்கிறேன். அருமையான கதை. ஆனால் தவறான கதா நாயகன். எம்.ஜி.ஆர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
சட்டென்று நினைவிற்கு வருவது உன்னால் முடியும் தம்பி.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவமும் தாக்கியதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றும் வாலிபன், அண்ணாமலை, பாபா முதலியவை காலம் காலமாக நடந்து வருபவை. அவை மேலும் தொடரக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.
திருவிளையாடல் தருமியைப் போல் சொன்னால் சேர்ந்தே இருப்பது, தமிழ் சினிமாவும் அரசியலும். ;-))
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
தொழில் நுட்பம் என்பது 'ரிலேடிவிடி தியரி' அல்லது 'இரு கோடுகள்' தத்துவம் போன்றது.
சரியான தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வந்த கர்ணனின் படங்கள் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். கர்ணனின் ஒளிப்பதிவுத் திறமை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் :0). ஜம்பு, எங்க பாட்டன் சொத்து முதலிய படங்கள் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
வண்ணத்திரை, சினிமா எக்ஸ்ப்ரஸ் ஆகிய சினிமா சம்பந்தப் பட்ட பத்திரிகைகளை வாசிக்காவிட்டாலும், எங்கே எப்போது சினிமா பற்றிய செய்தி வந்தாலும் வாசிக்கத் தவறுவதில்லை. அது, கிசுகிசுவாகட்டும் அல்லது புதுப்படம் பற்றிய தகவலாகட்டும்.
7.தமிழ்ச்சினிமா இசை?
நிச்சயமாக இளையராஜா.
தமிழ்ச் சினிமா இசை என்றாலே நம் நினைவுக்கு வருவது பாடல்கள்தான். அதையும் தாண்டி, பின்னணி என்று ஒன்று இருப்பதைக் காட்டியவர் இளையராஜாதான். இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் பாமரனும் ரசிக்கும் வண்ணம் காட்டியதில் அவருக்கு நிகர் அவர்தான்.
ஒரு பார்த்திபன் படத்தில் 'இசை அலயஸ் இளையராஜா' என்று போட்டிருப்பார்கள். இது உண்மை.
மற்றபடி தமிழ்ச் சினிமாவும், தமிழ்ச்சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு மிகச் சிறந்த பரிணாம வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகள்.
60-70 பாடல்களாக இருந்தது, 10-12 பாடல்களாகக் குறைந்து, இப்பொழுது 5 பாடல்கள் இருந்தாலே அதிகம் என்ற நிலையில் இருக்கிறது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆந்திராவில் இருந்த போது அதிகமாகத் தெலுங்குப் படங்கள் பார்த்திருக்கிறேன். சி.ஏ. படிக்கும் போது தில்வாலே துலனியா லே ஜாயேங்கே மொழியே தெரியாமல் 6 முறை பார்த்திருக்கிறேன் :)
உலகச் சினிமாக்கள் என்ற வரிசையில் பார்க்க ஆரம்பித்தது குங்க் ஃபூ படங்களைத்தான்.
சமீபத்தில் வேர்ல்ட் சினிமா சேனலில் தி வொயிட் பலூன் என்ற ஈரானிய மொழிப்படம் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த படம். இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு நிச்சயம் உண்டு.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எங்கள் ஊரில் நடைபெற்ற வைதேகி காத்திருந்தாள் ஷூட்டிங்கை எட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். பிறகு ஏகாம்பர நாதர் கோவிலில் நடைபெற்ற இன்னொரு விஜயகாந்த் ஷூட்டிங்கையும் பார்த்திருக்கிறேன். விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற ரமணா ஷூட்டிங்கின் ஃபைட் காட்சியை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். (அட. எல்லாமே விஜயகாந்த் படங்கள்.;-))
மீண்டும் ஷூட்டிங்க் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நேரமிருந்தால் செய்யலாம்.
தமிழ் சினிமா மேம்பட இது உதவுமா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒன்றும் தோன்ற வில்லை.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு பெரிதாக ஒன்றும் நேராது. சன் டிவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் (கலைஞர் டி விக்கு புதுப்படம் கிடைக்காதே). நாடகத்துறை வளர்ச்சியுறும் என்று நினைக்கிறேன். மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.
இந்தச் சங்கிலியைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.
1. நான் ஆதவன்
2. வெங்கடராமன்
3. டாக்டர் ப்ரூனோ
4. கோவியார்
5. வாத்தியார்
நன்றி ! ! !