Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Tuesday, December 23, 2008

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. தமிழக வரலாற்றில் அதற்கு முன் முற்காலச் சோழர்களில் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியும் கொலை செய்யப்பட்டதாக சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையைப் போன்ற நிகழ்வாக அது அமையவில்லை. இந்த நிகழ்வு இத்துணை பிரபலமானதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று கூறலாம்.

இப்போது இந்தக் கொலையைச் செய்தவர் யார் என்பது பற்றிய ஒரு அலசல். நண்பர் சுரேஷ் குந்தவை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் பலவித சந்தேகங்கள் எழும்புவது இயல்பே.

நம் பங்கிற்கு, நமக்குத் தெரிந்த வரையில் இதைப் பற்றிய விரிவான அலசல் ஒன்றை ஏற்கனவே செய்துள்ளோம். அது பொன்னியின் செல்வன் யாஹூ க்ரூப்பில் வெளிவந்துள்ளது. அதனடிப்படையில் அமைந்த ஒரு அனலிசிஸ் கீழே தரப்பட்டுள்ளது. இந்த அலசல் கீழ்கண்ட பிரிவுகளாக உள்ளது.

1. நிகழ்வு (The Incident)
2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)
3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)
4. குந்தவை கூட்டாளிகள்
5. உத்தம சோழன் கூட்டாளிகள்
6. பாண்டிய ஆபத்துதவிகள்
7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)
8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)
9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)





1. நிகழ்வு (The Incident)

ஆதித்த கரிகாலன் அதாவது சோழ அரசின் பட்டத்து இளவரசன் மர்மமான முறையில் இறந்ததுதான் நிகழ்வு. அவன் கொலை செய்யப்பட்டானா, தற்கொலையா, இயற்கையான மரணமா? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலும், இயற்கையான மரணம் ஏற்படக்கூடிய வயதும் காரணமும் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டான் என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.



2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)


சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்கள் மறைந்த பிறகு களப்பிரர்கள் தலையெடுத்தார்கள். சற்றொப்ப முன்னூறு ஆண்டுகால களப்பிரர் ஆட்சிக்குப் பின் தலையெடுத்தது பாண்டியர்களும் பல்லவர்களும். சோழர்கள் கோழி என்றழைக்கப்படும் உறையூரிலேயே முடங்கியிருந்தனர். பின்னர் விஜயாலய சோழன் காலத்தில் தலையெடுத்தார்களேயொழிய, இந்தக் கொலை நிகழ்ந்த சுந்தர சோழன் காலம் வரை அவர்களால் ஒரு பேரரசை நிறுவ முடியவில்லை. உண்மையில் பேரரசாக மாறத் துவங்கியது உத்தம சோழன் காலத்தில்தான்.

இந்தக் காலகட்டத்தில் வடக்கே ராஷ்டிரகூடர்களின் தொல்லை இருந்து வந்தது. ஆகவேதான் காஞ்சியில் ஆதித்த கரிகாலன் படைவீடமைத்தான். அங்கே ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்த முடிந்ததே ஒழிய அதற்கு வடக்கே அவனால் செல்ல இயலவில்லை. தெற்கே வீர பாண்டியனை அழித்துவிட்டாலும், பாண்டியர்களின் எழுச்சி என்னும் அச்சம் இருந்து வந்தது. பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை அரசை எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது. சேரர்களுடன் கொள்வினை இருந்ததால் அந்த சமயத்தில் நேரடித் தொல்லை இல்லை.

இவ்வாறாக பாண்டிய பல்லவர்கள் இல்லையாயினும் உதயமாகும் ஒரு அரசிற்குத் தேவையான அனைத்துத் தலைவலிகளும் சோழர்களுக்கு இருந்தன. நண்பர்களை விட பகைவர்களே அதிகமிருந்தனர்.

அரச குடும்பத்தை நோக்குங்கால், சுந்தர சோழர் நேரடியாக போர்களில் பங்கேற்கவில்லை. அருள்மொழிவர்மன் இளைஞன். மதுராந்தகனான உத்தமனும் போர்களில் பங்கெடுக்க வில்லை. வீரத்தைக் காட்டி எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. வீர பாண்டியனைக் கொன்றதுடன் ராஷ்டிர கூடர்களைத் தடுத்து நிறுத்தும் தன்மையும் பெற்றிருந்தான். மேலும் யுவராஜனாக பட்டமேற்றுக்கொண்டதால் சுந்தர சோழனுக்குப் பிறகு அவன் ஆட்சியில் எதிரிகள் நிலை மேலும் மோசமாகலாம் என்ற நிலை இருந்தது.


இவைதான் பின்னணி. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோழர்களின் வளர்ச்சியை விரும்பாதவர்களுக்கு முதல் குறி ஆதித்த கரிகாலன் தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)

குற்றம் சாட்டப்பட்டோரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. குந்தவை, அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன்
2.உத்தம சோழன் மற்றும் சிற்றரசர்கள்
3. பாண்டிய ஆபத்துதவிகள்

ராஷ்டிரகூடர்கள் வலிமையாக இருந்ததால் ஆதித்த கரிகாலனே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே அவர்கள் விலக்கப் படுகிறார்கள். இப்போது ஒவ்வொருவராகப் பார்ப்போம்.


4. குந்தவை கூட்டாளிகள்

குந்தவை சோழ நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறாள். தன் சொல் படி நடக்கும் தம்பி அருள்மொழிவர்மனைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன் காதலர் வந்தியத்தேவனை உன்னதப் பொறுப்பில் நிறுத்தி ஆட்சி அதிகாரத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாள். தன்னுடைய தோழியை தன் தம்பிக்கு மணமுடிக்கிறாள். இவற்றால் சோழ தேசத்தின் அரியணையை ஆட்டுவிக்க எண்ணுகிறாள். இவையனைத்தும் பொ.செ.வில் கூறப்பட்டவைகள்.

உண்மையில் நடந்தது என்ன? குந்தவை மிகப் பெரிய செல்வாக்குடன் விளங்கியிருக்கிறாள் என்பது தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டொன்றைப் பார்த்தால் தெரியவரும். கோவில் கட்ட நிதியளித்தவர்கள் பட்டியலைப் பற்றி ராஜராஜன் எழுதியிருக்கும் கல்வெட்டில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

'நாம் குடுத்தனவும், நம் அக்கன் குடுத்தனவும்...' என்று ஆரம்பித்து அனைவரது பெயரும் இடம்பெறும். இதிலிருந்து தமக்கு அடுத்தபடியாக தமக்கையின் பெயரைச் செதுக்கியிருக்கிறார் ராஜராஜர். அது கூட தான் அரசர் என்பதால் முதலில் தன் பெயரை எழுதியிருக்கிறார். இல்லையென்றால் முதலில் தமக்கையின் பெயரைத்தான் எழுதியிருப்பார்.

ஆகவே அவள் ராஜராஜன் காலத்தில் மிகப்பிரசித்தி பெற்றிருந்தாள் என்பது உண்மை. ஆனால் தன் தமையனைக் கொலை செய்ய முன் வந்தாளா? தமையனை எதற்காகக் கொலை செய்யவேண்டும்? அவன் வீரத்தில் சிறந்தவன். சோழப் பேரரசை நிறுவ அனைத்து விதத்திலும் தகுதியானவன். தமக்கை சொல் கேளாதவன் என்ற நிலை பொ.செ.வில் எடுக்கப்பட்டதே ஒழிய உண்மை நாமறியோம். வந்தியத் தேவனுக்கும் ஆதித்தனுக்கும் மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் வந்தியத் தேவன் ஆதித்தன் இருந்த தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன். மேலும் அதுவரையிலோ, அதற்குப் பிறகோ சகோதரக் கொலை என்பது தமிழரசர்களின் வரலாற்றில் இல்லாதவொன்றாக இருக்கிறது.

அருள்மொழிவர்மன் இலங்கை சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை. அது பொ.செ.வில் கூறப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, அதாவது உத்தம சோழன் ஆட்சிக்காலத்தில் தான் அருள்மொழிவர்மனின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. உத்தமன் சந்ததியில்லாமல் இறந்தபிறகே அருள்மொழி ஆட்சிக்கட்டில் ஏறியுள்ளான்.



5. உத்தம சோழன் கூட்டாளிகள்

'தி ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா'வில், திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், 'Uthama conspired the assasination of Athitha' என்று சொல்கிறார். ஏனெனில் வாரிசுரிமைப் படி அவன் தந்தை கண்டராதித்தனுக்குப் பிறகு முடி சூட வேண்டிய உத்தமன் யுவராஜனாகக் கூட தெரிவு செய்யப் படவில்லை. பொ.செ.வில் சுந்தர சோழன் எவ்வாறு அரியணை ஏறினான் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கண்டராதித்தன் இறந்துவிட, அவருடைய தம்பி அரிஞ்சயனும் இறந்து விட அவரது மகன் சுந்தர சோழன் அரியணை ஏறுகிறான். ஆனால் பொ.செ.வில் குறிப்பிட்டுள்ளது போல் சுந்தர சோழனும் அவன் சந்ததியருமே அரசாள வேண்டும் என்ற எந்தவொரு திட்டமும் இல்லை. இது கதையை நகர்த்துவதற்காக கல்கி கையாண்ட முறை.

ஆகவே, உத்தமனுக்கு வழமையாகச் சேரவேண்டிய அரசுரிமை அவன் வயதிற்கு வந்த பின்பும் அவனிடம் சேர்க்கப்படாமல் ஆதித்தனை யுவராஜனாக முடிசூட்டியது கண்டிப்பாக கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இது நடு நிலையான சிற்றரசர்கள் மத்தியில் கூட சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதுவரை போரைச் சந்தித்திருக்காத ஒரு நபர். போரில் பல வெற்றிகளைக் குவித்து ராஷ்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் மற்றொரு நபர். எதிரிகள் முழுமையாக முறியடிக்கப்படாத நிலையில், இவ்விருவரில் உரிமைப் போர் என்ற பெயரில் முதல் நபரைத் தேர்ந்தெடுத்தால் எதிரிகளின் தொல்லையை அனுபவிக்கப்போவது உத்தமனல்ல இந்தச் சிற்றரசர்கள்தான்.


6. பாண்டிய ஆபத்துதவிகள்

வீரபாண்டியன் காலத்தில் பாண்டியர்கள் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். இலங்கை அரசனின் உதவியும் இருந்தது. ஆனால் ஆதித்த கரிகாலனால் வீரபாண்டியன் கொல்லப்பட்டவுடன் பாண்டியத் தலையெடுப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆபத்துதவிகளும், வேளக்காரர்களும் அரச மெய்க்காப்பாளர்கள் என்ற செய்தி உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. தாங்கள் இருந்தும் தங்கள் தலைவர் மரணமடைந்ததை எந்தவொரு ஆபத்துதவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிரியே இல்லாத நிலையை விட பலமில்லாத எதிரி என்பவன் உபயோகமானவன். ஆகவே மொத்த சோழகுலத்தை அழிப்பதற்குப் பதில் ஆணிவேராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்தனை அழித்துவிட்டால் ஆட்டம் கண்டுவிடும் என்பதே ஆபத்துதவிகளின் கணக்கு. அவர்களின் எண்ணத்தில் எவ்விதத்தவறுமில்லை.


7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)

இந்த ஆதித்தன் கொலைவழக்கில் கிடைத்த ஒரே ஒரு ஆதாரம் உடையாளூர் கல்வெட்டுக்கள். இந்தக் கல்வெட்டுகள், ஆதித்தனைக் கொன்ற குற்றத்திற்காக ரவிதாசன் ஆகியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப் படுவதுடன் அவர்கள் உறவினர்கள் உட்பட அனைவரையும் தேசப்ப்ரஷ்டம் செய்வதாகவும் உத்தரவு உள்ளது.

இது நேர்மையான விசாரணையின் முடிவாக இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் சோழ தேசத்தின் நிர்வாகச் சீர்திருத்தங்கள், வழக்கு விசாரணை அமைப்புகள் ஆகியவற்றைக் குறித்த கல்வெட்டுகளை வைத்துப் பார்க்கும் போது நீதி நியாயமான முறையில் வழங்கப் பட்டிருப்பதைக் காணலாம்.


8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)

சகோதரக் கொலை செய்யுமளவிற்குத் தமிழரசகுலத்தில் எந்த நிகழ்வுகளும் இல்லை, அவர்களின் தரம் தாழ்ந்துவிடவில்லை என்ற அடிப்படையில் குந்தவையும் மற்றவர்களும் இந்தக் கொலையில் சம்பந்தப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

உத்தம சோழனுக்கும், சிற்றரசர்களுக்கும் ஆதித்தனின் மறைவால் ஏற்படும் இழப்பு மிக அதிகம். அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பேரரசின் கீழ் இருக்க விரும்பும் சிற்றரசர்கள் நல்ல தலைமையையே விரும்புவார்கள். மேலும், ஆதித்தன் இறந்தவுடன் உத்தமன் 'Stop Gap arrangement' முறையில் அரசாண்டிருக்கிறான். ஆகவே உத்தமனுக்கும் இதில் சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை.

ஆபத்துதவிகளின் நோக்கமும் செயலும் இயல்பானவை மற்றும் காலத்துடன் இயைந்தவை. தன் மன்னனைக் கொன்றவனைக் கொல்வது இயல்பேயன்றி வேறில்லை. ஆகவே ஆபத்துதவிகள் கொன்றிருப்பார்கள் என்பதுடன் அவர்களுக்கு உதவிய சோழதேசத்தினனான ரவிதாசன் மற்றும் கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்பது நேரியல் முடிவிற்கு வர ஏதுவாக இருக்கிறது.

எனவே ஆதித்தனைக் கொன்றது பாண்டிய ஆபத்துதவிகள்தான் என்பதை மறுதளிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.


9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)

1. உத்தமன் அரியணை ஏறிய பின் சந்ததியின்றி போகக் காரணமென்ன?
2.வந்தியத் தேவனின் 'லோ ப்ரொஃபைல்' ஏன்?
3. குந்தவையின் 'சுப்ரீமசி' ஏன்?
4. ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரன் தஞ்சையை விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றது ஏன்?

மேலும் பல கேள்விகளும், உங்கள் கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.