Thursday, December 31, 2009

பெருத்த சந்தேகம்.. 1000 பின்னூட்டம் பரிசு !!

வலையுலகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி!

வலைத் திரைத் திலகங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

இளையபல்லவனாருக்கு 2009ல் வந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஒரு பெருத்த்த்த்த்த்த்த்த்த சந்தேகம் எழுந்துள்ளது. அதைத் தீர்த்து வைப்போருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆயிரம்ம்ம் பின்னூட்டங்கள் பரிசாக அளிக்கப் படும்.

சந்தேகம் இதோ.....


2009ல் வந்த படங்கள்??


1. பேட்டராசு

2. இரு நதிகள்

3. இன்னொருவன்

4. ஆடாத ஆட்டமெல்லாம்

5. எங்க ராசி நல்ல ராசி (முரளி ஹீரோ)

6. இளம்புயல்

7. மஞ்சள் வெயில்

8. ஒலியும் ஒளியும்

9. பொள்ளாச்சி மாப்பிள்ளை (சத்தியராஜ்)

10. நீ உன்னை அறிந்தால் (முரளி)

11. உன்னைக் கண் தேடுதே

12. தொட்டுச் செல்லும் தென்றல்

13. வைகை

14. புதிய பயணம்

15. தலையெழுத்து

16. கண்ணா நீ எனக்குத்தாண்டா

17. ஆறுமனமே

18. சாமி சொன்னா சரிதான்

19. நேசி

20. மாதவி

21. நேற்று போல் இன்று இல்லை ((புதுகை?)அப்துல்லா)

22. ஒரே மனசு

23. இரு விழிகள்

24. வேடப்பன்

25. ஓணான்

26. கரகம்

27. வைதேகி

28. தம்பிவுடையான்

29. ஸ்வேதா 5/10 வெலிங்க்டன் ரோடு

30. தமிழகம்

31. விழியிலே மலர்ந்தது

32. மீண்டும் மீண்டும் நீ

33. வைரம்

34. தோழி

35. பச்சையாபுரம்

36. பலம்

37. எனக்குள் ஒரு காதல்


(நன்றி: விக்கிப்பீடியா)



எவ்வளவோ மூளையைப் போட்டுக் கசக்கியும் இந்தப் பேரெல்லாம் கேட்டதாகவோ, பாத்ததாகவோ நினைவில் இல்லை.


இந்தப் படங்களெல்லாம் 2009ல் ரிலீஸ் ஆனதா?

அப்படி ஆனால் அது எந்த தியேட்டரில்?

எத்தனை ஷோக்கள் ஓடியது?

இவற்றில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 2009லேயே வந்தவை எவை?



என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பின்னூட்டம் பரிசாக கி.பி.2100க்குள் வழங்கப்படும்

வருக! வருக!! வருக!!!

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 18

அத்தியாயம் 18 - திரிசூலம் !

ஜலாலுதீனிடம் உத்தரவைப் பிறப்பித்த சிறிது நேரத்திலேயே அந்தக் காட்டிலிருந்து ஒரு குதிரையில் புறப்பட்டு விட்டான் மாலிக். உடன் வர நினைத்த சில காவலர்களையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அங்கிருந்து நேர் தெற்கு நோக்கிச் செல்லாமல் தென்கிழக்காகப் பயணப் பட்டான். சற்றேறக்குறைய ஒரே வாரத்தில் திருமலையடிவாரத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து காஞ்சி வழியாக செல்வதுதான் அவனது திட்டம். ஒரே வாரத்தில் அவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டதால் சற்று இளைப்பாற நினைத்தான். அவனது படைகளும் வந்து சேர வேண்டுமல்லவா?

=====

மாலிக் திருமலையடிவாரத்தை அடைந்த அதே சமயத்தில் குவலாலாவிற்கு வந்த குதிரைப்படைத் தலைவன் வெளியேறினான். அதற்குப் பிறகு மாதண்ட நாயகத்தின் உத்தரவின் படி படைகள் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினான். முதலில் உணவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டிகள் முன்னே சென்றன. அவற்றின் பின், தண்டு இறக்கும் போது தேவையான கூடாரங்கள், நீண்ட கழிகள், வடங்கள் ஆகியவை அடங்கிய வண்டிகள் சென்றன. அதைத் தொடர்ந்து, தளவாடங்களைச் சுமந்து செல்லும் பொதிகள் சென்றன. அவற்றின் மேல் பாதுகாப்புக் கருதி வைக்கோல் போர்த்தப்பட்டிருந்தது. இவற்றோடு யானைப்படையும் புறப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமலிருக்கும் பொருட்டு, அதற்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆகவே யானைகள் எது சொன்னாலும் செய்யும் பூனைகளைப் போல் சாதுவாகக் கிளம்பிச் சென்றன.

இவை குவலாலாவை விட்டுக் கிளம்பிய மூன்றாவது நாள், காலாட்படையினரை உறையூர் நோக்கிச் செல்லுமாறு பணித்தான் ஆதவன். வழியில் முன்னே சென்ற உணவுப் பொதிகள் மூலமாக இந்தப் படைக்கு ஆங்காங்கே உணவு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கிளம்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு குதிரைப்படைகள் புறப்பட்டன. அவற்றுடன் முக்கிய தளபதிகளுக்கான ரதங்களும் புறப்பட்டன.

இவ்வாறாக ஒரே வாரத்தில் அவனது படைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் உறையூர் சேரும் வகையில் படைகளை நடத்தினான். படைகள் செல்லும் பெருவழியில் எந்த வித நெருக்கமும் ஏற்படாத வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார் மாதண்ட நாயகம். கோட்டையைப் பாதுகாக்க சிறு படையை விட்டுவிட்டு மாதண்ட நாயகமும், ஆதவனும் உறையூர் புறப்பட்டனர்.

======

ஜலாலுதீன் தன் படைகளை மாலிக் கஃபூரின் உத்தரவுப் படி தென் மேற்காக நடத்திச் சென்றான். நேராக கொல்லி மலை செல்லாமல், வட ஆந்திரத்திலிருந்து மேற்கே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி தலைக்காடு வரை இறங்கி அங்கிருந்து மீண்டும் தென்கிழக்காகத் திரும்பி கொல்லி மலையை அடைந்தான்.

அவனது படையில் மங்கோலியர்கள் முதலிய இனத்தவர் இருந்ததால் அவர்களுக்குக் காட்டு வழியே இனிமையாக அமைந்தது ஆங்காங்கே தென் பட்ட விலங்குகளையே வேட்டையாடி உண்டனர். திறந்த வெளிகளிலேயே உறங்கினர். அவர்களிடமிருந்த வேல், வில், அம்பு தவிர வேறொரு தளவாடமும் அவர்களிடத்தில் இல்லை. ஆகவே அவர்களது பயணம் துரிதகதியில் அமைந்தது.

======

வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டில் அமைந்திருந்த வீர பாண்டியனின் படைகள் மற்றும் வில்லவர் ஐந்நூறு பேரும் சிதம்பரம் வழியாக தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கினர். அளவில் சிறு படையான வீர பாண்டியன் படை வீரதவளப்பட்டணத்திலிருந்து தஞ்சைக்கு ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விட்டது. இப்படியாக மதுரையை நோக்கி மூன்று படைகள் முறையே கொல்லிமலை, உறையூர் மற்றும் தஞ்சையில் தண்டு இறங்கியிருந்தன.


மேலே உள்ள வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறியிடப்பட்டுள்ள வழியாக ஜலாலுதீன் மாலிக்கின் படைகளை அழைத்துவந்தான். சிவப்பு நிற வழியாக ஹொய்சள வல்லாளனின் படைகள் துவாரசமுத்திரத்திலிருந்து கிளம்பி குவலாலா வழியாக உறையூரை அடைந்தன. நீல நிறக்குறியீட்டின் வழியாக வீர பாண்டியனின் படைகள் வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டிலிருந்து நேராக தஞ்சைக்கு சற்று வடக்கே முகாமிட்டிருந்தன. இந்த அமைப்பு மதுரையைத் தாக்கும் திரிசூலத்தை ஒத்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த மூன்று படைகளும் மிக விரைவாகவும் மறைவாகவும் வந்து சேர்ந்ததால் மற்ற படைகளின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியாமல் போயிற்று. ஆனால் மதுரையிலிருந்த சுந்தரனுக்கோ இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனே தெரிய வந்தது. அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருந்ததால் அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.

மதுரையை நோக்கி நீண்டிருந்த திரிசூலம் அவன் மனதை பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியது. அவனது நண்பன் மாலிக் கஃபூரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. மாலிக்கின் படையில் மாலிக் கஃபூர் இல்லை என்பதும், ஜலாலுதீன்தான் அந்தப்படைகளுக்குத் தலைமை வகிக்கிறான் என்பதும் அவனுக்குக் கிடைத்திருந்தது.

மதுரைக்கு ஒரு பெரும் ஆபத்து நெருங்கிவிட்டதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான்.

(தொடரும்)

Thursday, December 24, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 17

அத்தியாயம் 17 - ஜலாலுதீன்

மாலிக் கஃபூரின் படைத்தளத்திற்கு மீண்டும் வருகிறோம். முன்பு சுந்தர பாண்டியன் வந்த போது நாமும் அவனுடன் ரகசியமாக வந்து திரும்பி விட்டதால் அவனது படை பலத்தைப் பார்க்க முடியவில்லை. இப்போது வெட்ட வெளிச்சத்தில் அந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த படைத்தளத்தைக் கண்ணாரக் காணலாம்.

தில்லியிலிருந்து அழைத்து வந்த படையும், இடையே இணைந்த படையும் சேர்ந்து ஒரு சிறு பெரும் சைன்யமாகியிருந்தது. எந்த ஒரு பிடிப்பும் இன்றி, மாலிக் கஃபூரின் ஆணைக்குக் கட்டுப்பட்டோ, பயந்தோதான் பணியாற்றிக்கொண்டிருந்தனர் அந்தப் படை வீரர்கள். அவர்களை வீரர்கள் என்று அழைப்பதே வீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.

மங்கோலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குதிரைப்படயினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் இருந்தனர். செங்கிஸ்கானின் குதிரைப்படையின் சாகசத்திற்கு தில்லி பலமுறை பலியாகியிருக்கிறது. அந்த மங்கோலியர்களையே பணத்தாசை காட்டி மயக்கிவிட்டான் மாலிக் கஃபூர். இந்தப் புறம் வில்லாளிகள். மத்திய ஆசியப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டையாடுவது என்பது மூச்சுவிடுவதைப் போன்று இயல்பான ஒன்று. ஈவு, இரக்கம் என்ற இரண்டு வார்த்தையும் இவ்விரு பிரிவினரின் அகராதியிலும் கிடையாது. இப்படிப்பட்ட படையினரை வைத்துத்தான் யாதவர்களை வீழ்த்தியும், காகதீயர்களை அடிபணியவைத்தும் தனது வெற்றிப்பாதையை வகுத்து வந்திருந்தான் மாலிக் கஃபூர்.

ஒரு தலைவன் தான் எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டியது அவனுக்குள்ள முதல் கடமை. அந்தப் பணி சரியா தவறா என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அந்தப் பணியை முடிக்கத் தேவையான தளவாடங்கள், உத்திகள், உதவிகள், தந்திரங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். யார் மூலமாக என்ன சாதிக்க வேண்டுமோ, அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிட்டும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று மேலாண்மை பாடம் நடத்துகிறார்!

மாலிக் கஃபூர் நிச்சயமாக திருக்குறளைப் படிக்கவில்லையென்றாலும், அவரது வாய்மொழிக்கேற்ப, அவனது படையில் மங்கோலியர்களையும், மத்திய ஆசிய வில்லாளர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இவர்களோடு பணம் மட்டுமே குறியாகக் கொண்ட படையும், தில்லியிலிருந்து வந்த சுல்தானின் படையும் சேர்ந்து கொண்டதால், வெற்றி மட்டுமே அவனது சொந்தமாக இருந்து வந்தது.

எப்போது படை நகர வேண்டும், எவ்வளவு படை நகர வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதற்காக, தனது தளபதிகளை தனது கூடாரத்திற்கு அழைத்தான் மாலிக். அவனது ஆலோசனைக் கூட்டம் எப்போதுமே அவன் உத்தரவு செய்வதும் மற்றையோர் ஆமோதிப்பதுமாகவே நடைபெறுவது வழக்கம். அன்றும் அதே போல் அவனது உத்தரவை எதிர்பார்த்து வந்திருந்தனர் தளபதிகள்.

"நாம் தெற்கு நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது" சுருங்கச் சொன்னான் மாலிக்.

"உத்தரவிடுங்கள். படை நகரத் தயாராக இருக்கிறது" கூட்டத்திலிருந்து ஒரு குரல்.

"ம். இதுவரை நாம் படை நடத்தியதற்கும், இனி நடப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது." என்று சொன்ன மாலிக் தளபதிகளின் மீது தன் கண்களை ஓட்டினான். அவனே மேலும் தொடர்வான் என்பதால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.

"இனி நாம் செல்ல இருக்கும் தேசம், இதுவரை நாம் பார்த்ததற்கு முற்றிலும் மாறு பட்டது. அங்கே நமது பாரம்பரிய போர் முறை எடுபடாது. செல்வங்கள் அங்கே அரண்மனைகளில் இல்லை. அவை இருப்பது கோவில்களில். புரிந்ததா?"

ஒரு மாதிரியாகத் தலையாட்டி வைத்தனர் தளபதிகள்.

"நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசன் வேறு. ஆண்டவன் வேறு. அரசன் மீது நாம் போர் தொடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு இருக்காது. ஆண்டவனிடம் நம் கைவரிசையைக் காண்பித்தால், மக்கள் நம்மை வாழ விடமாட்டார்கள். ஆகவே நமது திட்டமும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று சற்று நிறுத்தினான் மாலிக் கஃபூர்.

இவ்வளவு ஆணித்தரமாக அலசும் எந்த ஒரு தலைவனையும் அவனது உபதளபதிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் மாலிக்கிற்கு வாய்த்த உபதளபதிகளுக்கோ இவை ஒன்றும் சுத்தமாகப் புரியவில்லை. அவன் இதெல்லாம் ஏன் சொல்கிறான் என்று கூட ஓரிருவர் யோசிக்கத் துவங்கினார்கள்.

"சரி, இவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நமது படைகள் சற்று பிரிந்து செல்ல வேண்டும். ஆகவே நமது படைகள் இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு பத்து தவணைகளில் இங்கிருந்து புறப்படும். நாம் இருப்பது ஹொய்சள தேசத்தின் வட எல்லையில். நாம் செல்ல வேண்டியது பாண்டிய தேசத்திற்கு. நாம் படை நடத்தும் போது இடையில் இருக்கும் ஹொய்சள தேசத்தை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. ஹொய்சளர்கள் நமது படையைத் தடுக்கும் வகையில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சுல்தானின் கொடி முன்னே செல்ல வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே சென்றால் நாம் கொல்லி மலையை அடைவோம். நமது படைகள் அங்கே தண்டு இறங்கட்டும். அதற்குப் பிறகு நடக்க வேண்டியதைப் பற்றி நான் அங்கே வந்து சொல்கிறேன். இனி என்னை நீங்கள் அங்கு தான் பார்க்க முடியும்." என்று விவரித்தவன் இறுதியாக "புரிந்ததா?" என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தான்.

அவனது வியூகம் ஒன்றும் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஒரு மாதத்திற்குப் படை நடத்தினால் எதிரி விழித்துக் கொள்வானே? முதலில் இருக்கும் ஹொய்சளர்களைத் தாக்கினால் அந்த படையையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளலாமே? படை கிளம்பி நேராக இலக்கைத் தாக்கினால் முழு வேகத்துடன் தாக்கி எளிதில் வெற்றி அடையலாமே? எதற்கு இடையில் கொல்லி மலையில் தங்க வேண்டும்? இப்படியெல்லாம் ஒருவரும் யோசிக்க வில்லை. அப்படி யோசிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தரப்படவில்லை. அனைவரும் எழுந்து அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி வணங்கி அவனது கூடாரத்தை விட்டு வெளியேறினர். அப்படி சென்றவர்களில் ஒருவனை மட்டும் நிறுத்தினான் மாலிக். மற்றவர்கள் அகன்றுவிட்டனர் என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின் அவனைத் தன் அருகில் அழைத்து "உன்னை மட்டும் அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறதா ஜலாலுதீன்?" என்று புன்னகையுடன் வினவினான்.

ஜலாலுதீன் என்று அழைக்கப்பட்ட ஜலாலுதீன் அசன் கான், சற்றேறக்குறைய இருபது வயதுடையவனாகத் தோன்றினான் . தில்லி சுல்தானியப் படைப் பிரிவின் தளபதியாக சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் நியமிக்கப் பட்டவன். நல்ல அறிவாளியானாலும் அதை மாலிக் கஃபூர் இருக்கும் போது உபயோகிப்பது தன் தலையைத் தானே கொய்து கொள்வது போல் என்பதை உணர்ந்திருந்தானாகையால் அவனது போக்கு இந்தப் படையெடுப்பில் மாலிக் காலால் இட்டதைத் தலையால் செய்வதென்பதாகவே இருந்தது. இதுவே மாலிக் அவனிடத்தில் மதிப்பு வைப்பதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் சுல்தான் தேர்ந்தெடுத்த ஒருவரை தன் அருகில் வைத்துக் கொள்வது நாளைக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மை பயக்கும் என்பதும் மாலிக்கின் எண்ணம்.

"அப்படியெல்லாம் இல்லை. தங்கள் உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணியென்பதை சுல்தான் தெளிவுபடுத்தியுள்ளார்". என்றான் அடக்க ஒடுக்கமாக.

"ஜலாலுதீன், இப்போது போன தளபதிகளெல்லாம் நான் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அவர்களாக ஒன்றும் யோசிக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படியல்ல. சுல்தான் அவர்களே உன்னை பிரத்யேகமாக தேர்வு செய்துள்ளார். தில்லியை விட்டுக் கிளம்பும் போது கூட என்னைத் தனியாக அழைத்து உன்னை நல்ல படியாக நடத்துமாறு உத்தரவிட்டார். நீயும் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாய். அதனால்தான், இனி படையை நடத்தும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கலாம் என்று எண்ணுகிறேன்" மாலிக் சற்று நிறுத்தி அவன் கண்களை ஊடுறுவினான். ஜலாலுதீனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. இதில் ஏதோ சூது இருப்பது மட்டும் அவன் உள்ளத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.

"அத்தகைய திறமை என்னிடம் இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் அதில் தவறேதுமிருக்காது என்பது என் எண்ணம்."

அதைக் கேட்டு பெரிதாக நகைத்த மாலிக், "ஜலாலுதீன், இந்த பதில் மூலம் நீ மிக மிக புத்திசாலி என்பது உறுதியாகிறது. நல்லது. நான் சொன்னது போல், உங்களைப் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தப் படையெடுப்பு மிகவும் வித்தியாசமானது. ஆகவேதான் அவ்வாறு உத்தரவிட்டேன். இனி நான் இல்லாத போது நீதான் படைகளை நடத்த வேண்டும். அதற்கான உத்தரவுப் பத்திரம் இதோ. இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேள்" என்று அவனிடம் ஒரு சீலையைக் கொடுத்துவிட்டு அவன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தான்.

"அப்படியே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றவாறே வெளியேறினான் ஜலாலுதீன். அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த மாலிக்கின் வாயிலிருந்த் சிறிது நேரம் கழித்து வந்தன "இன்ஷா அல்லாஹ்" என்ற சொற்கள்.


(தொடரும்)

Wednesday, December 23, 2009

சுய தேடல் . . .

தூரத்தே தெரியும் மலைகள்
அருகே விரியும் வயல்கள்
சற்றே நெளியும் ஓடை - அவை
யாவிலும் இல்லை கவனம்

செவியில் கேட்கும் மழலை
ஆசையாய் பேசும் மனைவி
காலைச் சுற்றும் பூனை - எதுவும்
தொடவில்லை என்னை

இருந்தும் இல்லாமல் இருக்கும்
இன்றைய வாழ்வின் நிலைக்கும்
நேற்றைய பொழுதின் சிந்தனை - அதுவும்
அண்டவில்லை என்னை

இன்பம் இல்லா வாழ்வென
துன்பத்தில் மனம் தினம் வாட
கண்ணெதிரே இருக்கும் நீரை மறுத்து
கானலுக்கேங்கும் மனிதா

உன்னுள் தேடு
உண்மை தேடு
உன்னைத் தேடு

Wednesday, December 16, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 16

அத்தியாயம் 16 - இணைந்த இதயங்கள்


நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் வீரதவளப்பட்டணத்திற்குச் செல்கிறோம். வீரபாண்டியன் தன் தலை நகரை மிக விரைவில் நிர்மாணம் செய்து செயல்பட வைத்திருந்தான். காஞ்சிக்கு சற்று அருகில் இருந்தும், இந்த நகருக்குள் பல்வேறு புதிய கட்டடங்களையும் எழுப்பியிருந்தான். வீரதவளப்பட்டணத்திலிருந்து சற்று தள்ளி இருந்த படைவீட்டில் (தற்போது படவேடு என்று அழைக்கப்படுகிறது) அவனது படைகள் தண்டு இறங்கியிருந்தன. பாண்டியப்படைகளில் ஒரு பகுதியும், இந்த நகரம் அமைந்தபின் சேர்த்த படையுமாக சேர்த்து, சற்றேறக்குறைய பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். அவர்களை பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்காக, மாராயர் அங்கேயே முகாமிட்டிருந்தார். அவருக்குத் துணையாக இளவழுதியும் அங்கேயே இருந்தான். அவர்களோடு, கொல்லிமலை வில்லவர்கள் ஐன்னூற்றுவரும் அங்கே இருந்து வந்தனர்.

போருக்கான ஆயத்தம் செய்யவேண்டும் என்று விக்ரம பாண்டியர் சொல்லிவிட்டதன் விளைவாக, அங்கே பல்வேறு பொருட்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பொதி வண்டிகள், அவற்றை நடத்த பொதி மாடுகள், படைகள் தங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட கூடாரங்கள், உணவு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், அரிசி, பருப்பு ஆகியவை தனியே ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டது.

போர்த்தளவாடங்களான, வாள், வேல், கவசம், சலாகை முதலியவை அங்கேயே அமைக்கப்பட்ட கொல்லர் பட்டறைகளில் தயாராகிக் கொண்டிருந்தன. மேலும் குதிரைகள், யானைகளுக்குத் தேவையான கவசங்களும், உணவுப் பண்டங்களும் திரட்டப்பட்டன.

ஆனால் இத்தனை பெரிய படையை அங்கே நிர்வகிப்பது, புதிய அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் சுணக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. புதிய அரசுக்கு வரி கொடுப்பதில் ஆங்காங்கே குழப்பம் நீடித்தது. ஆயினும் இவற்றையெல்லாம், விக்ரம பாண்டியர் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு வந்தார்.

வீரபாண்டியன் தன் மனையாள் கயல்விழியுடன் வீரதவளப்பட்டணத்திலேயே சிறிது காலம் உல்லாசமாக இருந்து வந்தான். அவர்கள் இருவருக்கும் மிக மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றிருந்தது. ஆகவே நமக்குக் கூட அழைப்பு அனுப்பவில்லை!. இப்போதுதான் நாம் தெரிந்து கொண்டாலும் மனதைத் தேற்றிக்கொண்டு மணமக்களை வாழ்த்துவோம்!!.

ஆனால் இளவழுதியும், தேன்மொழியும் இன்னும் சிறிது காலம் காதலர்களாகவே தொடர்ந்து இருப்பதாக முடிவு செய்து விட்டனர் போலிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தேன்மொழி, வீரதவளப்பட்டணத்திலேயே இருந்து வந்தாள். படைவீடு செல்ல அவளுக்கு விருப்பமென்றாலும், ஏனோ மாராயர் மறுத்து வந்தார். அவ்வப்போது அங்கே வரும் இளவழுதிக்கு சில நல்ல யோசனைகளும் தெரிவித்து வந்தாள்.

====

காதலர்களுக்கு உகந்த நேரம் மாலைப் பொழுதுதான். அப்போதுதான் சூரியன் மலைவாயிலில் விழுவதற்கும் சந்திரன் அலைவாயிலில் எழுவதற்கும் சரியாக இருக்கும். அப்போது ஒளியிருந்தும் இல்லாதது போன்ற ஒரு மயக்கமான சூழல், காதலர்களின் மனதை ஒத்ததாக இருப்பதால் அவர்களுக்கும் அந்தி நேரத்தில் எண்ணங்கள் விழுந்தும் எழுந்தும் ஒருவித மயக்கத்தைத் தரும். அத்துடன் பூங்கா போன்ற மனதிற்கினிய இடத்தில் இருந்துவிட்டால் இந்த மயக்கம் மேலும் வாட்டி எடுக்கும். இதை பசலை நோய் என்பர் கவிஞர் திலகங்கள்!

அத்தகைய ஒரு அழகான உத்தியான வனத்தில் மாலை உலா சென்ற தேன்மொழிக்கு அத்தகைய பசலை கண்டு பலவேறு எண்ணங்கள் வந்து வாட்டின. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோமல்லவா? இது என்ன? பொதுவாக பசலை படர்ந்தவர்கள் இளைத்து காணப்படுவர். ஆனால் தேன்மொழியோ நல்ல வனப்புடன் இளமைச் செழிப்புடன் இருக்கிறாளே? ஒருவேளை பசலையென்பது பொய்யோ? ஆனால் அவ்வப்போது விம்மித்தணியும் எழில் சிகரங்கள் அவளது மனப்பாங்கை ஒருவாறு உணர்த்துவதை நாம் அறியலாம். என்ன செய்வது. இருந்த ஒரு தோழி கயல்விழியும் கல்யாணம் செய்துகொண்டு கற்புக்கரசியாகிவிட்டாள். இவள் பாடு அல்லவா திண்டாட்டமாகிவிட்டது.

தேன்மொழியின் இதயத்தில் இளவழுதியின்பால், அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, துக்கம், பயம் போன்ற விதவிதமான உணர்ச்சிகள் அலையலையாய் எழும்பின. இன்று வருவதாய் வாக்களித்திருந்தவனிடம் வெளிப்படையாகக் கேட்டுவிடுவது என்றே எண்ணியிருந்தாள். திருமணம் என்ற உறவு ஏற்பட்டால்தான், உரிமை பலப்படும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.

உத்தியான வனத்திலிருக்கும் விளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரியேற்றுவோர், தம் பணிகளைச் செய்யத் துவங்கினர். இரூளும் மெல்ல சூழ்ந்தது. காத்திருந்த கண்கள் களையிழந்தன. காதலனைக் காணாத காரணத்தால். தேன்மொழி தன்னையே கடிந்து கொண்டாள். மீண்டும் ஒரு நெடிய பெருமூச்சுடன் அரண்மனை திரும்பத்துவங்கினாள்.

அங்கிருந்த பல்வேறு மலர்ச்செடிகளும், மாலை நேரத்தில் மொட்டவிழ்த்து மணம் பரப்பத் துவங்கியிருந்தன. அதன்பால் தன் கவனத்தைத் திருப்பியவள், அந்த மணத்தை ரசித்தவாறு தன் நிலை மறந்து மெல்லக் கைவீசி நடந்து கொண்டிருந்த போது, அவளது கரங்களைப் பற்றினான் அவள் காதலன். ஆயினும் அவன் கண் தன் கடைக்கண் பார்வையையும் செலுத்தவில்லை. என்ன விந்தை. அவன் வருவானா என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவளுக்கு அவன் முன்னால் நின்றாலும் அவனை நோக்க மனமில்லை. தன் மனப்போக்கை எண்ணி சற்று நகைக்கவும் செய்தாள். அது புன்முறுவலாக வெளிப்பட்டது. அதை அவளது சம்மதமாக எண்ணி தன் பக்கம் இழுத்தான் இளவழுதி. அதை எதிர்ப்பாராத தேன்மொழி, அவன் மீது விழுந்தாள்.

ஒரு நாழிகை நேரம் காதலர் இருவரும் வேருலகம் சென்று வந்தனர். அவர்கள் செய்கையைப் பார்ப்பது அநாகரீகமான செயல் என்பதால் நாம் சற்று நேரம் அவ்வனத்தில் உலாவிவிட்டு மீண்டும் அங்கே வந்து அவர்களைப் பார்த்தால் வழக்கம் போல் அவர்கள் உடல் இங்கே இருந்தாலும், உள்ளம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிகிறது. எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒரு சிறு தென்றல் காற்று அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தழுவிச் சென்றபோது சிலிர்த்த அந்த மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள் அவர்களை இவ்வுலகிற்கு மீட்டன.

எப்போதும் சுதாரிப்பது பெண்ணினம்தான். அந்த வகையில் தேன்மொழியும் தன் நிலை உணர்ந்தாள். ஆனால் அவனிடமிருந்து விலக மனம் மறுத்தது. காலம் காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட கற்பு நெறி பற்றிய தெளிவு அவனிடமிருந்து பிரிந்து செல்ல அறிவுறுத்தியது. வேண்டாவெறுப்பாக சற்று விலக முயன்றாள். அந்த முயற்சியும் இளவழுதிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவளது இயற்கை அழகுடன் இயைந்து உறவாடும் நிலையைப் பெற்றான். கண்ணோடு கண் நோக்கிவிட்டால் வாய்ச்சொற்களுக்குப் பயன் என்ன? ஆனால் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லையே. ஏதாவது பேசினால்தானே நாம் கேட்க முடியும். ஹூம் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?

ஒருவழியாக இளவழுதி தனது தொண்டையைக் கனைத்தான். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தேன்மொழியிடமிருந்து ஒரு ஹும். அடடா. என்ன இது. இன்று போய் நாளைதான் வரவேண்டும் போலிருக்கிறதே. இதோ இளவழுதி பேசிவிட்டான்.

"தேன்மொழி, கோபமா?"

"நல்ல கேள்வி, இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்துவிட்டு.."

"ஏதாவது பேசவேண்டுமல்லவா?"

"எல்லாம் பேசுவீர்கள், ஒன்றைத் தவிர"

"எந்த ஒன்று?"

"நான் அதையும் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமா? சரி சொல்லித் தொலைக்கிறேன். மாமா என்னிடம் பலமுறை கேட்டுவிட்டார் என் திருமணத்தைப் பற்றி. உங்கள் எண்ணம் என்னவென்று தெரியாமல் நான் என்ன சொல்ல"

"என் எண்ணம் தெரியாதா உனக்கு"

"எல்லாம் தெரிகிறது. ஆனால் திருமணம் பற்றி ஒன்றுமே பேசமாட்டேன் என்கிறீர்களே"

இதற்குப் பதிலாக, இளவழுதியிடமிருந்து ஒரு பெருமூச்சுதான் வெளிவந்தது. அதுவரை இருந்த குதூகலம் சட்டென்று மாறி முகத்தில் ஒரு வித குழப்பம் குடிகொண்டது. "தேன்மொழி, உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் ரகசியத்தைக் கூறியதில்லை. நானே சொல்ல வேண்டுமென்றிருந்தேன். நீயும் கேட்டுவிட்டாய். என் வாழ்வில் ஒரு பெண் என்றால் அது நீதான். என் மனையாளும் நீதான். ஆனால் நம் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் ஒரு சில நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்."

அவன் பதில் அவளையும் குழப்பியது. "ஒன்றும் புரியவில்லையே, என்ன நிகழவேண்டும்".

"தேன்மொழி" என்று அழைத்தவன் சற்று நிறுத்தினான் அவளது கண்ணோடு கண் நோக்கி. "நான் சென்ற வருடம் தில்லையம்பலம் சென்றிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்திருக்கிறேன். அது இன்னும் ஓரிரு திங்களில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அதன் பின் நம் திருமணம்தான்".

"என்னவென்பதை எனக்கு விளக்கிச் சொல்லுங்களேன்" விடுவதாக இல்லை தேன்மொழி.

"உனக்கும் தெரியவேண்டியதுதான். இங்கே உட்கார். தில்லையில் எனக்கு ஒரு சூத்திரம் கற்றுத்தரப்பட்டது. அதன் பெயர் சக்கர வியூகம். அதை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சிக்குப் பின் நம் திருமணம் சாத்தியமாகிவிடும்".

"சக்கரவியூகமா? அதை நாம் பாரதக்கதையிலல்லவா படித்திருக்கிறோம்."

"இது வேறு. நிச்சயமாக உனக்கு இதைப்பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு என்னையும் என் வார்த்தைகளையும் நம்பு".

"இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள் தேன்மொழி ஏக்கத்துடன். அனிச்சையாக எழுந்த அவள் கரங்களைத் தன் கரங்களுள் ஏந்தினான் இளவழுதி. இணைந்த அந்தக் கரங்கள் சக்கர வியூகத்திற்கு ஒரு புது சூத்திரம் அமைத்தன.

(தொடரும்)

Sunday, December 13, 2009

சாலையோர மரங்களை வெட்டுவது சரியா?

நேற்று நங்கநல்லூர் சிவன் கோவில் அருகே இருந்த ஒரு பெரிய மரம் வெட்டப்பட்ட காட்சியைக் கண்டதும் மனம் மிகுந்த வேதனையடைந்தது. அடடா? எவ்வளவு பெரிய மரம். அந்த மரம் காரணமாக அங்கே போக்குவரத்து நெரிசல் இருந்ததென்னமோ உண்மைதான். ஆனால் அதற்காக மரத்தை வெட்டிவிடுவதா? இப்படி மரத்தை வெட்டிவிட்டால் அதனால் கிடைக்கும் ஆக்சிஜன் என்னாவது? என்ற கோபமான கேள்வி எழாமல் இல்லை. ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் கீழ்கண்ட சிந்தனைகள் எழுந்தன.

அங்கிருப்பதோ ஒரு மரம். அதனால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கி கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடுகின்றன. ஒரு மரம் தன் வாழ் நாளில் ஒரு டன் கார்பன் டை ஆக்சைடை உட்கொள்வதாக ஒரு இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் நெரிசலில் சிக்கும் வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயு அதைவிட அதிகமல்லவா? ஆகவே அந்த மரம் அங்கிருப்பதால், கிடைக்கும் நன்மையை விட தீமை அதிகமல்லவா?

அஃபாரஸ்டேஷன் (காடுமயமாக்கல்) என்பது வேறு, சாலையோரம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை நீக்குவது என்பது வேறு என்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

Wednesday, December 9, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 15 !

இதுவரை:-

சக்கரவியூகம் இதுவரை சற்றேறக்குறைய 45 பகுதிகளாக வெளி வந்திருக்கிறது. இதுவரை நடந்த கதையின் ஓட்டத்தை அது நடந்த ஊர்களின் பெயர்களில் பார்ப்போம்.

காஞ்சி:-
காஞ்சியின் கடிகையில் பயின்ற மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை. ஆனால் ஆசாரியர் தெளிவாக விளக்க வில்லை. துணை ஆசாரியன் மாதவன் அதை விளக்குவதாகக் கூறுகிறான். மாணாக்கர்கள், வீர பாண்டியன் (மதுரை), வல்லாளன் (துவாரசமுத்திரம், ஹொய்சளம்), இளவழுதி (திருவெள்ளரை), கோப்பெருஞ்சிங்கன் (காஞ்சிபுரம்), ஹரிஹர ராயன், புக்கராயன் (காஞ்சி). இவர்கள் அனைவருமே முக்கியப் பாத்திரங்கள்.

திருவெள்ளரை:-

இளவழுதியின் சொந்த ஊர். அவன் தந்தை மாராயரும் சகோதரி கயல்விழியும், மாமன் மகள் தேன்மொழியும் அந்த ஊரில் வசிக்கிறார்கள். வீரபாண்டியனும் இளவழுதியும் இங்கே வர, முறையே கயல்விழியிடமும், தேன் மொழியிடமும் காதல் கொள்கிறார்கள். தேன்மொழிக்கு மாலிக் கஃபூரின் திட்டம் தற்செயலாகத் தெரிய வருகிறது.

ஸ்ரீரங்கம்:-

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, வல்லாளனை தமிழகத்தின் பக்கம் இருத்த முயற்சிக்கிறார். ஆனால் வல்லாளன் பிடி கொடுத்துப் பேசவில்லை. அதே நேரத்தில் அவரிடம் வந்த இளவழுதியை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

சிதம்பரம்:-

திருவாதிரைத் திரு நாளில், சிதம்பரத்தில் அனைவருக்கும் சக்கரவியூகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறான் மாதவன். ஆனால் இளவழுதிக்கு மட்டும் உண்மையான சக்கரவியூகத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறான்.

மதுரை:-

சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போட்டி வெளிப்படையாக நடக்கிறது. கயல்விழி மாறுவேடத்தில் வீரபாண்டியனின் மாமன் விக்ரம பாண்டியன் வீட்டில் தங்குகிறாள். வீரபாண்டியனின் தந்தை குலசேகர பாண்டியர் மரணமடைகிறார். சுந்தரன் தந்திரமாக அரசுக்கட்டில் ஏறுகிறான். (இத்துடன் முதல் பாகம் முடிவடைந்தது)

துவார சமுத்திரம் (ஹளபேடு) :-

இரண்டாம் பாகத்தில், வல்லாளன் அரசனாக தனது அவையைக் கூட்டி தமிழகத்தின் மீது போர் தொடுக்க வேண்டியதன் தேவையைத் தெரிவிக்கிறான். மாலிக் கஃபூர் பற்றிய அச்சம் தேவை இல்லை என்றும் தெரிவிக்கிறான். இவனுக்கு நீலா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.

வீரதவளப்பட்டணம் (வந்தவாசி):-

விக்ரம பாண்டியன் செய்த ஒரு உடன்படிக்கை மூலம், வீரதவளப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வீர பாண்டியன் ஒரு அரசை நிறுவுகிறான். அங்கே மாராயர், இளவழுதி, கயல்விழி, தேன்மொழி ஆகியோர் வருகிறார்கள். அங்கே மாலிக் கஃபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் திட்டத்தை விளக்குகிறார் விக்ரம பாண்டியர்.

ஆந்திராவின் காடு:-

மாலிக் கஃபூர் தன் படைகளுடன் தங்கியிருக்கிறான். அவனைச் சந்திக்க சுந்தர பாண்டியன் வருகிறான். அவன் மதுரையைத் தாக்க வருமாறு அழைக்கிறான். மாலிக் கஃபூர் மேலும் ஒரு திட்டத்தை வகுக்கிறான்.

குவலாலா (கோலார்):-

ஹொய்சளர்களின் முக்கிய நகரமான குவலாலாவில் ஹொய்சளப் படைகள் ஒன்று சேர்கின்றன. அங்கே அரசரை எதிர்பார்த்து மாதண்ட நாயகமும், குவலாலாவின் கோட்டைத்தலைவன் ஆதவனும் காத்திருக்கிறார்கள்.

= = =

இனி. . .



ஹொய்சள தேசத்தின் முக்கிய நகரமான குவலாலாவையும், அதன் தலை நகரான துவார சமுத்திரத்தையும் இணைக்கும் முக்கியப் பெருவழி எப்போதும் மிகுந்த ஆரவாரத்துடனும் ஜனத்திரளுடனும் இருக்குமென்றாலும், அன்று அந்த வழியில் அதுவரை ஒரு ஈ, காக்கை கூட வர வில்லை. அந்தப் பெருவழியில் அன்று பொதுவானவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கியப் பிரமுகரின் வருகைக்காக நீண்ட நேரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போது, கோட்டைக் காவலன் ஆதவனுக்கும், மாதண்ட நாயகத்திற்கும் தெரிந்தது ஒரு சிறு புழுதிப்படலம் மட்டுமே. சற்று நேரம் கழித்து அங்கே ஏறக்குறைய நூறு குதிரைகளில் வீரர்கள் வருவது புலப்பட்டது. அக்கூட்டத்தின் முன்னே ஹொய்சளர்களின் ராஜ முத்திரையிட்ட பதாகையைத் தாங்கியவாறு வந்த ஒரு குதிரையால் அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.

கோட்டை வாயிலை அந்த வீரர் கூட்டம் நெருங்குவதற்கும், ஆதவனும், மாதண்ட நாயகமும் அங்கே செல்வதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் தேடிய முக்கியப் பிரமுகர் இல்லை.

"ஆதவா, படையின் முன்னே பதாகை. ஆனால் படையிலோ தலைவர் இல்லை. ஒரே குழப்பமாக இருக்கிறதே" என்றார் மாதண்ட நாயகம்.

"எனக்கும் அதே சந்தேகம்தான். எதற்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போம். நாமாக ஒன்றும் கூற வேண்டாம்." ஆதவன் சொன்னது சரியாகவே பட்டது மாதண்ட நாயகத்திற்கு. (இனி இவரை நாயகம் என்றே அழைப்போம்.)

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட குதிரை வீரர்கள், ஒரு ஒழுங்கான வரிசையில் தங்கள் குதிரைகளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களில் தலைவன் போல் காணப்பட்ட ஒருவன், தனது கொம்பை எடுத்து பலமாக ஊதினான். பிறகு "கோட்டைத் தலைவரிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்ல வேண்டும். மன்னரின் ஆணை. உடனே கதவைத் திறவுங்கள்" என்றான் சத்தமாக. அதைக் கேட்டு வாயிலின் முகப்பிற்கு வந்த நாயகம், "யார் நீ, முதலில் அதைத் தெளிவாகச் சொல். பிறகு உள்ளே வருவதைப் பற்றி பேசலாம்" என்றார் கோபமாக.

"நான் யாரென்பது தேவையில்லாத விஷயம். இதோ மன்னரின் பதாகை இருக்கிறது. அவரது முத்திரை பதித்த ஓலை இருக்கிறது. முக்கியமான தகவல் என்று அவரே என்னிடம் கூறினார். அதோடு அவரது இலச்சினையையும் கொடுத்திருக்கிறார்" என்று ஹொய்சள ராஜ முத்திரையைக் காட்ட முற்பட்டான். இந்தப் பதிலால் திருப்தியடைந்த நாயகம், "சரி, நீ மட்டும் உள்ளே வா. மற்றவர்கள் அங்கேயே இருக்கட்டும்" என்று கூறி ஒருவன் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு வழியை ஏற்படுத்துமாறு கோட்டைக் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.

உள்ளே வந்த வீரன் மாதண்ட நாயகத்திடம் ஓலையை அளித்துவிட்டு, "நான் வந்த வேலை முடிந்தது. உத்தரவு கொடுங்கள். நாங்கள் உடனே புறப்பட வேண்டும்." என்றான்.

"எங்கே" ஓலையைப் பிரித்துக் கொண்டே நாயகம் வினவினார்.

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"நான் நாயகம்"

"நான் அரசரின் தூதுவன்"

அதற்குள் ஓலையைப் பிரித்துவிட்ட நாயகம் அதன் மீது தன் கண்களை ஓட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்தத் தூதுவனைப் பார்த்த நாயகம், "இதை மன்னர் தான் அளித்தாரா?" என்றார்.

"ஆம்"

"எங்கே"

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"இந்த ஓலையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை"

"அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை"

"சரி உன் பெயர் என்ன?"

"அதைச் சொல்ல உத்தரவில்லை"

"ம். என் பொறுமையைச் சோதிக்கிறாய். உன்னை இப்போதே சிறை செய்ய முடியும்"

"அரசரின் உத்தரவு அவ்வாறு இல்லை"

எதற்கும் அசராத அந்த வீரனின் நிலையைப் பார்த்து சற்று அசந்துதான் போனார் நாயகம். சிறிய சிந்தனைக்குப் பின் "சரி, நீ செல்லலாம்" என்று உத்தரவு பிறப்பித்தார். அவனும் அவரை வணங்கிவிட்டு, கோட்டைவாயிலை விட்டகன்றான். உடனே சில வீரர்களை அழைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்று கண்காணிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, ஆதவனைத் தேடிச் சென்றார்.

"ஆதவா, அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது"

"அரசரிடமிருந்தா?, அவரையல்லவா எதிர்ப்பார்த்தோம்." ஆதவன் வினவினான் ஆச்சரியத்துடன்.

"ம். ஆனால் ஓலை மீது எனக்கு என்னவோ நம்பிக்கை பிறக்கவில்லை. இதோ பார்" என்று ஓலையை அவனிடம் நீட்டினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது

"நாயகத்திற்கு... நாம் வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தற்போதைக்கு குவலாலா வருவதற்கில்லை. ஆகவே படைகளைத் திரட்டிக்கொண்டு, காவிரிக் கரை வழியாக, உறையூரில் தண்டு இறங்கவும். உங்களை அங்கே சந்திக்கிறேன். உடன் ஆதவனையும் அழைத்துச் செல்லவும்." இதன் பின் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.

அதை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, "இதைச் சந்தேகிக்க ஒரு முகாந்திரமும் இல்லையே" என்றான் ஆதவன்.

"இல்லை ஆதவா, ஓலை சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசரின் திட்டம் இதுவல்ல. என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நாயகம். அவரது முகத்தில் கவலையும், குழப்பமும் சேர்ந்து இருந்தன.

"நீங்கள் குழம்ப வேண்டாம். அரசரது உத்தரவுப் படியே நடப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்"

"ம். எதற்கும் ஓரிரு நாட்கள் பொறுப்போம். அந்த வீரனைப் பின் தொடர்ந்து செல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம். எதற்கும் நீ படை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளைத் துவக்கிவிடு" என்று ஆதவனைப் பணித்துவிட்டு மெதுவாக நடந்தார் நாயகம். அவரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ஆதவன்.

(தொடரும்)

'

Sunday, December 6, 2009

இளைய பல்லவன் ரிட்டர்ன்ஸ் ! ! !

இந்த இளைய பல்லவன் அவ்வப்போது காணாமல் போய்விடுவதில் கில்லாடி. இதில் அவனை மிஞ்ச யாரும் கிடையாது! ஆனால் ஒரு நல்ல குணம். தினமும் வலைப்பதிவைப் பார்க்கத் தவறமாட்டான்.

நண்பர்களே, இளையபல்லவன் இப்போது மீண்டும் வந்து பதிவுகள் தொடர்ந்து போடுவதாகக் கூறுகிறான். சக்கரவியூகம் இனி தொடர்ந்து வருவதற்கு உத்தரவாதம் என்றும் கூறுகிறான். இதைப் போல் பலமுறை இதற்கு முன் கூறியிருந்தாலும், இந்த முறை எனக்கு சிறிது நம்பிக்கை குறைவுதான். உங்களுக்கு?

சரி, இனி இதைப் பற்றி பேச ஒன்றும் இல்லை. செயலில் இறங்குகிறானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

"இளையபல்லவா !, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள். இது உன் மானப் பிரச்சனை, தன்மானப் பிரச்சனை. இம்முறையும் நீ ஒழுங்காகப் பதிவுகள் போடாவிட்டால், முக்கியமாக சக்கரவியூகத்தைத் தொடராவிட்டால், உன்னை 'ரைட் ஆஃப்' செய்து விடுவார்கள். ஆகவே எச்சரிக்கையாக இரு," என்பதை மட்டும் உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும் இளையபல்லவனிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி ஓவர் டு இளைய பல்லவன்:

========

"நண்பர்களே, உலகில் பல்வேறு கடுமையான பணிகள் இருக்கின்றன. அதில் மிகக் கடுமையான பணி அக்கவுண்டன்ட் பணி. அதில் கார்போரேட் அக்கவுண்டன்ட் என்று ஒரு பிரிவு உண்டு, அவர்களுக்கு வாழ்க்கையே டெட் லைன் தான். அப்படிப்பட்ட பிரிவில் நான் பணியாற்றுவதால், இம்முறை டெட்லைன்களில் சிக்கிக் கொண்டுவிட்டேன். சக்கர வியூகம் எப்படியாவது தொடர்ந்து வர வேண்டும் என்ற ஆவலும் எண்ணமும் என்னிடமும் உள்ளது. இம்முறை மேலே சொன்னது போல், எப்பாடு பட்டாவது தொடர்ந்து எழுதிவிடுவது என்று (‘N’th டைம் !!! ) முடிவெடுத்து விட்டேன்.

எப்போதும் போல் உங்கள் மேலான ஆதரவை நாடு்ம்"

உங்கள்
இளைய பல்லவன்

Saturday, November 7, 2009

பதிவர்களைப் பாதிக்கும் பயங்கர நோய்கள் . . . 2

அன்புள்ள பதிவுலகக் குடிமக(ன்/ள்)களே!, பதிவுலகில் நுழைய எழுதும் தகுதியோ எண்ணும் தகுதியோ இருந்தால் மட்டும் போதாது. இங்கே இருக்கும் பயங்கர நோய்களை எதிர் கொள்ளும் திறமையும் வேண்டும்.

சென்ற பதிவில், பின்னூட்டஃபோபியா, ஃபாலோமேனியா, நட்சத்திரைடீஸ், ஹிட்டீரியா, முதலிய நோய்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில், சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ போன்றவற்றைப் பற்றி பார்ப்போம்.




சூடெங்கு:-


இந்த நோய் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது!. கடந்த ஆறு மாதங்களுக்குள் பதிவுலகிற்குள் நுழைந்தவர்களுக்கு இந்த நோயைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதாவது, தமிழ்மணம் திரட்டியின் இடது ஓரத்தைக் கவனித்திருப்பீரேயானால் அது வாசகர் பரிந்துரை என்று காட்டும். அங்கே மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருக்கும். சிலகாலத்திற்கு முன்பு வரை அங்கே "சூடான இடுகைகள்" என்ற பகுதி இருந்ததை பழைய பதிவர்களால் மறக்கவே முடியாது. அந்த சூடான இடுகைப் பகுதியில் தன் இடுகையை எப்பாடு பட்டாவது இடம் பெறச் செய்துவிட வேண்டுமென்று நினைக்க வைக்கும் நோயே "சூடெங்கு". இது முழு நேர / முக்கிய பதிவர்களை இயல்பாகவே தாக்கக்கூடியது. மற்றவர்கள் விவகாரமான தலைப்பை வைத்து தனது பதிவுகளை சூடேற்றிக்கொள்வார்கள். பலர், சூட்டுக்காக சூடு போட்டுக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியதை பழம்பெரும் பதிவர்கள் இதைப் படிக்கும் போது நினைத்துக் கொள்வார்கள்!!!

இப்போது இந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதால், புதிய பதிவர்களுக்கு இதன் வீரியம் தெரிய வாய்ப்பில்லை. இப்போது இருக்கும் பரிந்துரையும் முதலில் காமெடியாக ஆரம்பித்ததுதான். ஒரு சிலருக்கு நூற்றுக்கும் மேல் பரிந்துரை எண் வரும்!!. இப்போது இந்த முறை சரி செய்யப்பட்டு விட்டதாக அறிகிறேன்.



சர்ச்சையோபியா:-


நீங்கள் அனைவருமே திருவிளையாடல் (சிவாஜி & கோ) பார்த்திருப்பீர்கள். குறைந்த பட்சம் தருமி எபிசோட்-ஆவது கட்டாயம் பார்த்தோ / கேட்டோ / அறிந்தோ இருப்பீர்கள். அதில் நக்கீரன் என்று ஒரு தாத்தாவுக்கும், சிவாஜி தாத்தாவுக்கும் ஒரு போட்டி வரும். அப்போது முத்துராமன் தாத்தா, "புலவர்களே, சண்டை போடாதீங்க" என்று சமாதானம் பேச வருவார். உடனே சிவாஜி தாத்தா "நாங்கல்லாம் ஒரே ஜாதி, இன்னிக்கி அடிச்சிக்குவோம், நாளைக்கு சேந்துக்குவோம். எங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.. நீ எட்ட நின்னுக்கோ. இல்லன்னா டரியலாயிடும்" னு சொல்லுவார். முத்துராமன் தாத்தாவோ, மனதிற்குள் "இதுதான் சொ.செ.சூ" போல இருக்குன்ற மாதிரியே பாத்துக்கிட்டு, "எங்களையும் வாழவிடுங்கள்" விலங்குகள் போல போஸ் கொடுப்பார்.

இப்போது எதற்கு இந்தக் கதை என்று கேட்கிறீர்களா? அப்படிக் கேட்டால், நீங்கள் ஒரு அப்பாவி, உங்களுக்கும் பதிவுலகிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. தயவு செய்து இந்தப் பதிவைப் படித்தவுடன் அப்படியே 'அப்பீட்' ஆகிவிடுங்கள்.

மற்றவர்களுக்கு நான் மேற்கொண்டு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சர்ச்சையில் சிக்கி, ஆலையிட்ட கரும்பாக ஆனவர்களும், காணாமல் போனவர்களும் அதிகம் பேர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், கலைஞர்கள்தான், பதிவர்கள் அல்ல. பதிவர்கள் வேறு, கலைஞர்கள் வேறு என்பதை பதிவர்கள் புரிந்து கொண்டால், இந்த நோய் மீண்டும் வர வாய்ப்பில்லை. அதற்கு எல்லோரும் "பிளாக்"என்னும் பழம் தந்த கூகிளாண்டவரைப் பிரார்த்தனை செய்வோம்.



தொடரோயன்சா:-


இது ஒரு ஒட்டுவாரொட்டி நோய். ஏதாவது ஒரு தொடர் பதிவு வந்தால் நம்மை யாராவது தொடர அழைக்கமாட்டார்களா என்று ஏங்க வைக்கும். இரண்டு மூன்று சுற்றுக்களிலேயே நாம் முக்கியப்பதிவர்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்களாகி விட்டோம் என்று எண்ண வைக்கும். தொடர் பதிவு வர ஆரம்பித்த உடனேயே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். நாம் யோசித்துவைத்திருக்கும் தலைப்பில் யாராவது பதிவு போட்டுவிட்டால் பற்றிக்கொண்டு வந்துவிடும்.

என்னைப் போல் பதிவே போட முடியாதவர்கள் கூட தொடரோயன்சாவால் பாதிக்கப்பட்டு பதிவு போட்டுவிடுவார்கள்! இப்படியாக தொடரோயன்சா அவ்வளவு கடுமையான நோய அல்லவென்றாலும் சற்று பயங்கரமான நோய்தான்.

தொடரைத் தொடராமல் இருந்தால் தொடரோயன்சா உங்களைத் தொடாது!!


பிரபலூ:-


ஸ்வைன் ஃப்லூ என்ற ஒரு வியாதி உலகெங்கிலும் உள்ளவர்களைப் பிடித்து ஆட்டுவது போல், பதிவுலகில் உள்ளவர்களைப் பிடித்து ஆட்டும் ஒரு வியாதிதான் பிரபலூ. இது வந்துவிட்டால் நான் தான் 'பிரபல பதிவர்' என்ற எண்ணம் வந்து விடும். யாராவது 'பிரபல பதிவரே' என்று அழைக்க வேண்டும், மற்றவர்கள் தங்களை விட ஒரு படி கீழேதான், தன்னுடைய கருத்துதான் இறுதி மற்றும் நாட்டாமை தீர்ப்பு என்ற எண்ணங்கள் தானாகத் தோன்றி விடும். இதில் என்ன வேடிக்கை என்றால், பிரபலூ பிடித்தவர்கள், அது ஒரு வியாதியல்ல, பெரிய பட்டம் என்று நினைப்பதுதான்.

மக்களே, பிரபலூ பிடித்துக் கொண்டால் அவ்வளவுதான். உங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச 'கிரியேட்டிவிட்டி'யும் உங்களை விட்டு ஓடிவிடும்.

பிரபலூவுக்கான அறிகுறி இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் பழகுங்கள். எட்டி நிற்பது இன்னும் பயன் தரும். இல்லையென்றால் தொற்றிக்கொண்டு விடும். எப்போதும் நாம் பதிவராக இருந்தால் போதும். பிரபலூவை விரட்டி விடுவோம்.

====

இதுவரை உங்களுக்கு பதிவுலகில் நிலவும் பயங்கர வியாதிகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு இந்த நோய் இருந்தால் உடனே நான் சொன்ன மருத்துவ முறைகளைக் கையாளுங்கள். நோய்கள் "போயே போச்".

====

வாழ்க தமிழ்ப்பதிவுகள்!

வளர்க தமிழ்ப்பதிவுலகம்!!

ஓங்குக தமிழ்ப்பதிவர்கள் ஒற்றுமை!!!

நீங்குக தமிழ்ப்பதிவுலக நோய்கள்!!!!


Friday, November 6, 2009

தொடர் பதிவுகள் ஏன்?

தீபாவளிக்கான தொடர் பதிவு என்னை அடைந்த போது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது. நேற்றுதான் நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் அந்தத் தொடர் பதிவை அஃபீஷியலாகத் துண்டித்தார். ஏதோ ஒரு இடத்தில் ஒரு காரணத்துக்காகத் துவக்கப் படும் தொடர் பதிவுகள் சில சமயம் திரட்டிகளின் முகப்பை முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. இந்தத் தொடர் பதிவுகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான என் ஆராய்ச்சியின் விளைவுதான் இந்தப் பதிவு!

தொடர்பதிவுகளில் ஒற்றுமைகள்.

1. கேள்விகள் பொதுவாக ஒருவரது கருத்தைக் கேட்கும் வகையில் அமைக்கப் படுகின்றன. இதன் மூலம் ஒரு பதிவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

2. பெரும்பாலும், அனைவரும் விரும்பும் வகையில் கவர்ச்சிகரமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. சினிமா, பிடித்தவை பிடிக்காதவை, வாசித்தல் அனுபவம் போன்றவை இயல்பாகவே வசீகரிக்கும் தன்மையுடையன.

3. பதிவர் பதில் சொல்லும் போது தன்னை ஒரு 'அரசு / மதன் / தராசு / குருவியார்' போல நினைத்துக் கொண்டு பதில் சொல்ல வாய்ப்பாக அமைகிறது. இங்கே பதிவரின் 'ஈகோ' திருப்திப் படுத்தப் படுகிறது.

4. தன்னைப் பற்றி நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகச் சொல்வதும், தன்னைப் பற்றிய பெருமையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

5. நமக்குத் தெரிந்தவர் அழைக்கும் போது மறுக்கமுடியாத மறைமுக நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். தான் தொடர்வதோடு தமக்குத் தெரிந்த சிலரையும் அழைக்கின்றனர். அப்படியே சங்கிலியாகச் செல்கிறது. ஒரு சிலர் மட்டும் இதில் விதி விலக்கு.

6. கடைசியாக என்னைப் போன்றவர்களுக்கு தொடர் பதிவு ஒரு வரப்பிரசாதம். என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்போருக்கு 'லட்டு' போல் ஒரு மேட்டர் கிடைத்தால் நழுவ விட மாட்டார்கள் அல்லவா?!!


அப்படி எனக்கு 'லட்டு' கொடுத்தவர் சுரேஷ் (பழனியிலிருந்து). இதோ நான் தொடரும் அந்தப் பத்து

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

1. அரசியல்வாதி
பிடித்தவர் : ஜி.கே.வாசன்
பிடிக்காதவர் : மரு. இராமதாசு

2. எழுத்தாளர்
பிடித்தவர் :
பிடிக்காதவர் : பாலகுமாரன்

3. கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து
பிடிக்காதவர் :

4. இயக்குனர்
பிடித்தவர் : சங்கர்
பிடிக்காதவர் : பேரரசு

5. நடிகர்
பிடித்தவர் : நாசர்
பிடிக்காதவர் :

6. நடிகை
பிடித்தவர் :
பிடிக்காதவர் : நமீதா

7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : விஜய் ஆண்டனி

8. நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : விவேக்

9. தொழிலதிபர்
பிடித்தவர் : நா. மகாலிங்கம்
பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்

10. விஞ்ஞானி
பிடித்தவர் : அப்துல் கலாம்
பிடிக்காதவர் :

இங்கே விடுபட்டவைகள், என்னால் நிரப்பப்பட முடியாதவைகள். அந்த கேட்டகிரியில், நன்றாக யோசித்தும் எந்தப் பெயரும் பொருந்தவில்லை.

இனி இப்பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்.

1. அமீரக அமைதிப்புயல் "நான் ஆதவன்"

2. நைஜீரிய நைல் நதி "இராகவன், நைஜீரியா"

3. வகுப்பறை வாத்தியார், "சுப்பையா" அவர்கள்


4. சிங்கைக்கரை கங்கை, "கோவி. கண்ணன்"


வாங்க, வாங்க, இனி உங்கள் பணி...

Wednesday, November 4, 2009

பதிவர்களை வாட்டும் பயங்கர நோய்கள் . . .

பிளாக்கர்கள் என்று செல்லமாக அழைக்கப்படும் வலைப்பதிவர்களாகிவிட்டால் ஒரு சில வியாதிகளும் தொற்றிக்கொண்டுவிடுகின்றன. என்னதான் நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டாலும், இவை தாக்குவதைத் தடுக்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு நோயாவது ஒவ்வொரு பதிவரையும் தாக்கியிருக்கும். அனைத்து நோய்களும் தாக்கியவரை முழு நேர பதிவர் என்று அழைக்கலாம்.

பின்னூட்டஃபோபியா, ஃபாலோமேனியா, நட்சத்திரைடீஸ், ஹிட்டீரியா, சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ போன்றவையே பதிவர்களைத் தாக்கும் பயங்கர நோய்களாகும்!



இவற்றைப் பற்றி ஒரு சிறு குறிப்பு இதோ !!!



பின்னூட்டஃபோபியா:-

தான் எவ்வளவும் மொக்கையாக, படிக்கவே முடியாத பதிவுகளைப் போட்டாலும், குறைந்தபட்சம் நாற்பது கமெண்டுகளாவது வந்து நாற்பது பிளஸ் டேபில் தமது பதிவு வந்து விட வேண்டும் என்று நினைப்பது இந்த மாதிரி போபியா.

கும்மியடிப்போர் இந்த ஃபோபியாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். ஒருவர் மற்றவருடன் கூட்டு சேர்ந்து இவர் பிளாக்கில் அவர் பின்னூட்டம் போடுவதும், அவர் பிளாக்கில் இவர் பின்னூட்டம் போடுவதும் நடக்கும். சில நேரங்களில் ஒரே பின்னூட்டத்திற்கு பத்து பதில் பின்னூட்டம் போடும் ஆசையும் தோன்றும்.

அனானியாக வந்து தனக்குத் தானே பின்னூட்டம் இட்டுக்கொள்பவர்களும் உண்டு. இதையே பின்னூட்டக்கயமை அல்லது பின்னூட்ட டுபுரித்தனம் என்று சொல்வார்கள்.

பின்னூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நல்ல பதிவுகள் போட வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டால் இந்த ஃபோபியா போய் விடும்.


ஃபாலோமேனியா:-

நமது பதிவுகளை தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகள் மூலம் படிப்போர் தவிர்த்து, நமது எழுத்து நடையில் மயங்கி (?!) நம்மை ஃபாலோ செய்பவர்கள் உண்டு. அந்த வகையில் அதிகம் ஃபாலோயர்களைப் பெற்றவர்கள் நன்றாக எழுதுவார்கள் என்ற எண்ணம் பதிவர்களிடையே உண்டு.

அதிகம் ஃபாலோயர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் அதிகமாக அதிகமாக இந்த மேனியா வந்து துன்புறுத்தும். இங்கேயும் கூட்டுக் கும்மிக்கு இடம் உண்டு. என் ஃப்ரென்ட்சும் நானும் உனக்கு ஃபாலோயர்கள். உன் ஃப்ரென்ட்சும் நீயும் எனக்கு ஃபாலோயர்கள் என்று மாற்றி மாற்றி ஃபாலோவிக்கொள்வார்கள்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன், இப்பொழுதுதான் எனக்கு ஐம்பது ஃபாலோயர்கள் சேர்ந்திருக்கிறார்கள்! இது தேடிப்பிடித்த கூட்டமல்ல, தன்னால் வந்த கூட்டம் என்று கொள்கை முழக்கம் செய்தால் இந்த மேனியா, நம் மேனியை விட்டு ஓடிவிடும்.

நட்சத்திரைடீஸ்:-

தமிழ்மணத்தின் முகப்பில் ஒரு வாரம் நம் பதிவை ஏற்றிவைக்கும் நிகழ்வுக்கு நட்சத்திரம் என்று பெயர். மற்ற திரட்டிகளும் இதைச் செயல் படுத்தினாலும், தமிழ்மண நட்சத்திரம் என்பதன் ரேன்ஜே தனி. எப்படி நட்சத்திரமாக தேர்வு செய்கிறார்கள் என்பது ஜீ பூம்பா ரகசியத்தை விட ரகசியமானது. இதை விமர்சிக்காத பதிவர்களே இல்லை.

பதிவர்கள் எல்லாருக்கும் நாமும் நட்சத்திரமாக வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும். இது ஒரு காமன் (கவனம் தேவை. பொதுவான என்ற கருத்தில் வரும்) நோய்.

சிறுவயதிலேயே (அதாவது பிளாக் தொடங்கி நான்கு மாதங்களுக்குள்ளாகவே ) எனக்கு நட்சத்திரம் போட்டுவிட்டதால் இந்த நோய் என்னை வாட்டாது !

ஹிட்டீரியா:-

நன்றாக கவனிக்கவும். எழுத்துப் பிழை அல்ல. ஹிட்டுகளுக்காக ஏங்கும் மக்கள் நிறைந்த உலகமல்லவா இந்த பிளாக் உலகம்? இது ஒரு பொதுவான வியாதி. ஹிட்டு அதிகமாக அதிகமாக பிட்டு (நல்ல பதிவு) ஓட்டலாம் என்று எண்ணுவோர் பலர். சிலர் பிட்டு (உண்மையான பிட்டு) போட்டால் ஹிட்டு அதிகமாகும் என்றும் நினைப்பர்.

ஹிட்டுக்களை அதிகமாக்கிக்காட்ட பேஜ் ரெஃப்ரெஷ் செய்வோரும் உண்டு. சிலர் ரெஃப்ரெஷ் பட்டன் மீது செங்கல் கூட ஏற்றி வைத்து விடுவார்களாம்! இதுதான் ஹிட்டீரியாவின் உச்சக்கட்டம். இதுவரை லட்சாதிபதிகளும், மில்லியனர்களும் மட்டுமே பிளாக் உலகில் உண்டு. இன்னும் கோடீஸ்வரர்கள் உருவாகாத ஏழை உலகம் பிளாக் உலகம்:((


ஹிட்டீரியா அதிகமாகும் போது சிலருக்கு ஹிட் கவுண்டர் (சரியாகப் படிக்கவும், சாதிப்பெயர் அல்ல) மேலேயே சந்தேகம் வந்துவிடும். அத்தகையோர் இரண்டு மூன்று ஹிட் கவுண்டர்களை சேர்த்துவிடுவார்கள்!

ஹிட் கவுண்டரை இழுத்து மூடுவதே இந்த நோய்க்கு சிறந்த மருந்து.



மற்ற நோய்களான, சூடெங்கு, சர்ச்சையோபியா, தொடரோயன்சா, பிரபலூ பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...

உங்களுக்குத் தெரிந்த வேறு நோய்கள் பற்றி பின்னூட்டத்தில் தெரிவித்தால் அதைப்பற்றியும் விரிவாக அலசப்படும்...

Friday, October 30, 2009

நானும் தீபாவளியும் . . .

ஒரு முன் குறிப்பு:- இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உண்மையாகவே உண்மையான பதிலைத் தரவேண்டுமா என்பது என் கேள்வி. இதற்கு யாராவது பதில் தந்தால் பரவாயில்லை.

இனி....


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

வயது-37, திருமணம் ஆகி இரு குழந்தைகள். காஞ்சிபுரம் சொந்த ஊர். பிழைப்புக்காக விசாகப்பட்டினம், ஆக்ரா, புதுவை, திருச்சி என்று சுற்றி இப்போது சென்னையில் நிரந்தர வாசம்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

என் தலை தீபாவளிதான். ஒரு முக்கியமான தேர்வு இருந்ததால், தலை தீபாவளிக்கு முதல் நாள் இரவு 9 மணிக்கு மாமியார் வீட்டுக்குச் சென்று விட்டு தீபாவளி காலை 7 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டேன் :((!.



3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

வேறெங்க தருமமிகு (?!) சென்னையில்தான்!


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

எல்லா ஊரையும் போல் இங்கும் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடித்து, பலகாரம் தின்று, படங்களைக் கண்டு, பட்டாடை உடுத்தி...


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

நங்க நல்லூரிலேயே சிவன்மலை ஆண்டவர் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை இருக்கிறது. துணி வகைகள் திருப்தியாக இருக்கின்றன. அங்கே வாங்கி வி.எஸ் டைலர்ஸ் என்ற கடையில் காற்சட்டை தைக்கக் கொடுத்தேன். சட்டை மட்டும் ரெடிமேட். ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சில் ஒன்றுக்கு இரண்டு ஆஃபரில் எடுத்தது. பேண்ட் வகைகள் ஜெயச்சந்திரன், போத்தீஸ், சரவணா, மற்றும் இதர பெரிய கடைகளில் நன்றாக இருப்பதில்லை என்பது என் கருத்து. சென்ற வருடம் திருச்சியில் இருந்த போது சாரதாஸில் துணிகள் எடுத்தோம். எனக்குத் தெரிந்து மிக நல்ல நாணயமான கடை திருச்சி சாரதாஸ்தான்.


6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

அம்மணி செய்தது முள்ளு முறுக்கும், குலோப் ஜாமூனும். வாங்கியது ஜாங்கிரி. வந்தவை மிக்சட் ஸ்வீட்ஸ். கம்பேனியில் தந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸின் முந்திரி கேக் (காஜூ கத்லி)



7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

நேரில், மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாழ்த்து அட்டை அனைத்திலும் தெரிவித்தேன்.


8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. குழந்தைகளின் நலன் கருதி கேபிள் இணைப்போ, டி.டி.எச் ஓ வாங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. எங்களுக்கும், குழந்தைகளுக்கும் பழகிவிட்டது. பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஆகவே தொலைக்காட்சியில் தொலையும் தொல்லை இல்லை. கோவிலுக்கும் உறவினர்கள் இல்லத்திற்கும் வழமையாகச் செல்வது உண்டு.



9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

இதுவரை நேரடியாக உதவி செய்யும் வாய்ப்பு வரவில்லை :((



10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

சுரேஷ் (பழனியிலிருந்து)
- எப்போது தொடர் அழைப்பு வந்தாலும் நான் உடனே அழைப்பது இந்த மருத்துவரைத்தான்!!

இராகவன், நைஜீரியா - என் துறையைச் சார்ந்தவர்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Monday, October 26, 2009

"நான் - அவன்"

வலையுலகிற்கு இப்போது சோதனை மேல் சோதனை போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா?? வலைப்பூ எழுதவந்த கதையை எழுத வேண்டுமாம், அதை நீங்கள் படிக்கவேண்டுமாம். ஆதவன் ஆனையிட்டுவிட்டார். அதுவும் 'இப்படியாவது எழுதுங்க பல்லவன்'ன்னு சொல்லிட்டார். என்ன கொடுமை ஆதவன் இது :(( ஆனாலும் விடுவோமா?? சுயபுராணம் படிப்பது அல்வா கொடுப்பது மாதிரி அல்லவா?! இதோ வந்துவிட்டது சூடான சுவையான அல்வா!. ருசித்துப் பயன் பெறுங்கள் !!!.

அதாவது காஞ்சிபுரம் என்ற ஓர் மாநகர் இருக்கிறது. அங்கே ஒரு சிறுவனுக்கு எப்படியாவது எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற உந்துதல் அடி மனதிலே இருந்திருக்கிறது. அப்போது அவன் நான்காம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். அத்துடன் அம்புலிமாமா, பாலமித்ரா முதலியவற்றுடன் பற்பல மாயாஜாலக் கதைகளும் படித்துக்கொண்டிருந்தான். அப்படிப் படிக்கும் போதுதான் என்னடா இது ஒன்றுமே இல்லாமல் இப்படி எழுதுகிறார்களே, நாம் எழுதினால் இவர்களெல்லாம் காணாமல் போய்விடுவார்களே என்று எண்ணிக்கொண்டான். அவன் எண்ணியவாறே நடந்தது! அந்தச் சிறுவனின் எழுத்துக்கள் வலைப்பூவில் பதியப்படும் போது, பாலமித்ராவும் மாயாஜாலக் கதைகளும் வருவதில்லை:(. அம்புலிமாமா பற்றி சந்தேகமாக இருக்கிறது. அந்தச் சிறுவன்தான் உங்கள் காஞ்சித் தலைவன் என்பதைத் தெள்ளெனப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இதுதான் எழுத வந்த கதையின் முதல் பாகம்.

அதே சிறுவன் சற்று வளர்ந்து ஆறாம் வகுப்பில் சேர்ந்தான். அப்போது அம்புலிமாமாக்களும், பாலமித்ராக்களும் அவன் படிக்கும் தகுதியை இழந்துவிட்டிருந்தன! மேலும் என்ன படிக்கலாம் (பள்ளியில் பாடம் படித்தானா என்ற கேள்வி இந்தப் பதிவின் வரையறைக்கப்பாற்பட்டது) என்றெண்ணும் போதுதான் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராகும் வாய்ப்பு கிட்டியது. அங்கே அவனுக்குக் கிடைத்தது 'பொன்னியின் செல்வன்'. முதலில் ஒரு புத்தகத்தை எடுக்கும் போது அதில் 'பொன்னியின் செல்வன் - நான்காம் பாகம்' என குறிப்பிட்டிருந்தது . அவனுக்கு அப்போது பாகங்களோ, பகுதிகளோ தெரிந்திருக்க வில்லை. அந்தப் புத்தகத்தைக் கேட்ட போது நூலகர் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அவன் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. பொ.செ.வைப் படித்த போது அவன் உள்ளே இருந்த விளக்கு பற்றிக் கொண்டது. நானும் ஒரு சரித்திரத் தொடர் எழுதுவேன் என்று எண்ணிக் கொண்டான். அது இன்று நிறைவேறியது. (விட்டு விட்டு வருகிறதே என்று கேட்டால், புன்னகை மட்டுமே பதிலாக வரும்). அந்தச் சிறுவன்தான் இளைய பல்லவன் என்பது உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

அதே சிறுவன் பிறகு மேலும் வளர்ந்து (அவ்வளவுதான், இனி நிகழ்கால இறந்தகாலம்தான்!) பல்வேறு புத்தகங்களைப் படித்தான். ஊரில் உள்ள அனைத்து நூலகங்களிலும் மெம்பர் ஆனான். சி.ஏ. இன்ஸ்டிடியூட், அமெரிக்கன் லைப்ரரி, ப்ரிட்டிஷ் கவுன்சில், அகில உலகப் புகழ் பெற்ற கன்னிமாரா நூலகம் என்று அவன் சட்டைப்பையில் உறுப்பினர் அட்டைகள் நிறைந்தன. இப்படியாகப் படித்துப் படித்து மேலும் என்ன செய்வது என்று யோசித்த போதுதான் கணினி அவன் அறிவுப்பசிக்கு ஒரு புதிய ஜன்னலை (விண்டோஸ்) திறந்தது. அந்தோ பரிதாபம்!. அங்கே அவனக்குக் கிடைத்ததோ ஆங்கிலப் பக்கங்களே. எவ்வளவோ முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. தொடர்ந்து கணினியில் தமிழுக்காக, தவமாய்த் தவமிருந்தான்.

கி.பி. 2005, அவன் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு. அப்போதுதான் தமிழ் என்று டைப் செய்து கூகிளாண்டவரிடம் வேண்டிய போது அத்தனை ஆண்டு கால தவத்தை மெச்சிய கூகிளாண்டவர், தமிழ்மணம்.காம் என்ற விலாசத்தைத் தந்தருளினார். அது அவனுக்குக் கிடைத்த வாய்ப்பா, ஆப்பா என்பதை இன்று வரை அவனால் உறுதி செய்ய முடியவில்லை.

அப்படிக் கிடைத்த தமிழ்மணத்தில் தான் எத்தனை எழுத்துக்கள்?! எத்தனை எழுத்தாளர்கள்!! மீண்டும் அவன் அகங்காரம் தலை தூக்கியது. இத்துணை பேர் எழுதும் போது நாம் எழுதலாகாதா? என்ற எண்ணம் தோன்றியது. இடையில் ஓரிருமுறை பிளாக்கர் கணக்கைத் துவக்க முற்பட்டான். ஆனால் 'மீண்டும் அந்தோ பரிதாபம்'. கணினி அறிவியலில் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத காரணத்தால் ஒன்றும் செய்யவியலவில்லை. ஆயினும் சிறிய வயதில் படித்த அம்புலிமாமாவில் வந்த 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்' வந்து அவனை உசுப்பி விட்டுக்கொண்டே இருந்ததால் அவனால் சும்மா இருக்க முடியவில்லை.

இப்படியாக ஒரு வழியாக ஆகஸ்டு 2008ல் வெற்றிகரமாக ஒரு பிளாக்கர் கணக்கைத் துவக்கி, இளையபல்லவன்.பிளாக்ஸ்பாட்.காம் என்ற பக்கத்தைப் பதிவு செய்து பதிவிட ஆரம்பித்துவிட்டான். ஆரம்பத்திலேயே தனது தில்லாலங்கடி வேலையையும் காட்டிவிட்டான். தமிழ்மணத்தில் இணைக்க மூன்று பதிவுகள் இடவேண்டும். ஒரே பதிவை மூன்று முறை காபி பேஸ்ட் செய்து அதிரடியாக தமிழ்மணத்தில் நுழைந்தான்.

தொடர்ந்து சக்கர வியூகம் எழுதியதும், தமிழ் மணத்தில் நட்சத்திரமானதும், நண்பர்கள் பலரின் அறிமுகமும் கடந்த ஓராண்டில் அவனுக்குக் கிடைத்த நன்மைகள். அவ்வப்போது பணிச்சுமையில் காணாமல் போய்விடுவது அவனது 'வீக்னெஸ்'.:((.

ஆனால் ஒன்று அவனது தன்னடக்கம் மிக மிக அதிகம். அதனால்தான் தன்னைப் பற்றி எழுதும் போது கூட யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றி எழுதுவது போல் 'நான்' என்று விளிக்காமல் 'அவன்' என்று விளிக்கிறான்.

ஆனால் ஒன்று. இவன் 'நான் அவன் இல்லை என்று எப்போதும் சொல்லமாட்டான்' . நிச்சயமாக 'அவன் - நான் தான் (அப்பாடா தலைப்பை நியாயப்படுத்தியாச்சு!) !!'

இந்தத் தொடருக்கு நான் நண்பர் சுரேஷ்- அழைக்கிறேன்.

Monday, September 14, 2009

ரவை உப்புமா - சமையல் குறிப்பு

முன்குறிப்பு:- என் பதிவை யாரும் 'ஹேக்' செய்யவில்லை. நான் தான் என் கம்பெனியால் ஹேக் செய்யப்பட்டுள்ளேன்! சில காலம் இந்த உப்புமா பதிவுகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!!

ரவை உப்புமா போன்ற செய்வதற்கு எளிமையான உணவு இதுவரை எதுவும் இல்லை. அதை டேஸ்டி (?!)யாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.


முதலில் ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.

1. வாணலி
2. கரண்டி
3. கத்தி (காய்கறிகளை நறுக்க)
4. காய்கறி நறுக்கும் பலகை
5. தட்டு - இரண்டு, மூன்று

இனி ரவை உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்.

1. பாம்பே ரவை - 200 கிராம்
2. வெங்காயம் - பெரியது 1
3. தக்காளி - மீடியம் 1
4. உருளைக்கிழங்கு - மீடியம் 1
5. கேரட் - சிறியது 1
6. பச்சைப் பட்டாணி - கொஞ்சம்.
7. பச்சை மிளகாய் - 2 - 3
8. இஞ்சி - 1 துண்டு
9. கருவேப்பிலை
10. கொத்தமல்லி

தாளிக்க

1. கடுகு
2. கடலை பருப்பு
3. உளுத்தம் பருப்பு
4. பெருங்காயம்
5. ரீஃபைண்டு ஆயில்
6. உப்பு - தேவையான அளவு
7. தண்ணீர் - ரவையின் அளவைப்போல் இரண்டிலிருந்து இரண்டரை பங்கு

செய்முறை.

பார்ட் 1.

1. வாணலியை அடுப்பில் வைக்கவும்.
2. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
3. சிறிதளவு எண்ணெயை விடவும்.
4. ரவையைக் கொட்டி கிளறி வறுக்கவும்.
5. சற்று சிவப்பாக வரும் போது அதை ஒரு தட்டில் ஆர வைக்கவும்.
6. அடுப்பை அணைக்கவும்.

பார்ட் 2

1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
4. பச்சைப்பட்டாணியை உரித்து வைத்துக்கொள்ளவும்.
5. பச்சை மிளகாயை 'ஸ்லிட்' செய்து வைத்துக்கொள்ளவும்.
6. இஞ்சியை தோல் சீவி சிறிய சைசில் கட் செய்யவும். அல்லது 'கிரேட்' செய்யலாம்.
7. கருவேப்பிலை, கொத்தமல்லையை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.

பார்ட் 3

1. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
2. வாணலியை அடுப்பின் மேல் வைக்கவும்.
3. எண்ணெயை விடவும்.
4. எண்ணெய் சூடானவுடன் கீழ்கண்ட வரிசையில் பொருட்களை எண்ணெயில் போடவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு.
5. இவை சற்று பொன்னிறமாக வதங்கியபின், உருளைக்கிழங்கையும், கேரட்டையும் சேர்க்கவும்.
6. தண்ணீர் விடாமல் வதக்கவும்.
7. பட்டாணி சேர்க்கவும்.
8. தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. இவை அனைத்தும் ஒரு பதமாக திரண்டு வரும் போது, தண்ணீரை விடவும். கருவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
10. தண்ணீர் கொதிக்கும் போது, ரவையை மெதுவாக விட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டி கட்டிவிடும்.
11. அடுப்பை சிம்மில் வைத்து மேலே ஒரு தட்டு போட்டு மூடி, ஆவியில் வேக வைக்கவும்.

இறக்கினால் சூடான ரவை உப்புமா தயார்.

இது கிச்சடி அல்ல. கிச்சடிக்கு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இது வெஜிடபுள் உப்புமா. இதற்கு சர்க்கரை தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ஊறுகாய், சட்னி, சாம்பார் என்ற ஆர்டரில் தொட்டுக்கொள்ளலாம்.

மிகவும் டேஸ்டியான ஐட்டம்!!

Tuesday, September 1, 2009

அரிசி உப்புமா - சமையல் குறிப்பு

இன்று தங்கமணி ஊரில் இல்லை. வழக்கமாக தங்க்ஸ் ஊரில் இல்லாத நாட்களில் காசிவினாயகாவுக்கு ஜூட் விட்டுவிடுவேன். இன்று வித்தியாசமாகச் செய்யலாம் என்று பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த, நான் செய்ததை நண்பர்கள் ரசித்துச் சாப்பிட்ட டிபன் அரிசி உப்புமா செய்வது என்று முடிவு செய்தேன். அதை நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்.

சூடாகவும் சுவையாகவும் அரிசி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போமா? (நன்றி டாக்டர் மா.நன்னன்)

முதலில் உப்புமா செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.



1. மிக்ஸி (ஜார் அவசியம், மின்சாரம் மிக மிக அவசியம்)
2. வாணலி, அல்லது அடி கனமான பாத்திரம்
3. குக்கர், குக்கருக்குள் போடும் பிளேட், குக்கருக்குள் போடும் பாத்திரம், அதை மூட ஒரு தட்டு, குக்கர் மூடி, விசில்.
4. கரண்டி - ஜல்லிக் கரண்டி அல்லது சட்டுவம்.
5. அரிசி எடுக்க ஒரு பாத்திரம்.
6. கேஸ் அடுப்பு - கேஸ் இருக்க வேண்டும்., லைட்டர்

அடுத்து உப்புமா செய்வதற்குத் தேவையான பொருள்கள்

1. பச்சை அரிசி - 200 கிராம்
2. துவரம்பருப்பு - 20 கிராம்
3. மிளகு - 10 கிராம்
4. சீரகம் - 10 கிராம்

இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு (ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்).

5. எண்ணெய் (நல்லெண்ணை பெஸ்ட், ரீஃபைண்ட் ஆயில் ஓக்கே, கடலை எண்ணை டேஸ்ட் நன்றாக இருக்கும்) - 15 மில்லி
6. கடுகு - சிறிதளவு
7. வெந்தயம் - சிறிதளவு
8. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
10. மிளகாய் வற்றல் - இரண்டு அல்லது மூன்று
11. கருவேப்பிலை - சிறிதளவு

இவை தாளிக்கத் தேவையான பொருட்கள் - இந்த வரிசையில்தான் தாளிக்க வேண்டும்.

இவற்றோடு முக்கியமாக உப்பு. உப்பு இல்லையேல் அது உப்புமா இல்லை, சப்புமா ??

தண்ணீர் - அரைத்துக்கொண்ட பொருட்களின் அளவுக்கு இரண்டு பங்கு (பழைய அரிசியாக இருந்தால் இரண்டரை பங்கு)

செய்முறை:-

ப்ராசஸ் 1:-

1. அடுப்பைப் பற்ற வைக்கவும்
2. வாணலி அல்லது அடி கனமான பாத்திரைத்தை அடுப்பின் மேல் வைக்கவும்
3. எண்ணையை விடவும்
4. எண்ணை காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு திருப்பவும்.
5. இவை சற்று பொன்னிறமாக வந்ததும், பெருங்காயத்தூள், மிளகாய்வற்றல் ஆகியவற்றைப் போடவும்.
6. கார நெடி சற்று குறைந்ததும் கருவேப்பிலையைப் போடவும்.
7.கருவேப்பிலை வெடித்தவுடன் தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றவும்.
8. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
9. மீதியிருக்கும் தண்ணீரை ஊற்றவும்.
10. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

ப்ராசஸ் 2:-

1. தண்ணீரை வாணலியில் ஊற்றிவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அடுத்த பர்னரை பற்ற வைக்கவும்.
2. குக்கரை அதன் மேல் ஏற்றவும். குக்கருக்குள் தண்ணீர் விடவும். மூடியில் கேஸ்கெட் போட்டு தயாராக வைக்கவும். விசில் தயாராக வைக்கவும்.
3. வாணலியில் தண்ணீர் கொதிக்கும் நிலைக்கு வந்ததும், சற்று சிம் செய்யவும்.
4. அரைத்து வைத்திருக்கும் அரிசி ஆகிய வற்றை மெதுவாகக் கொட்டிக்கொண்டே கிளறவும்.
5. இரண்டு மூன்று முறை கிளறியதும், குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்திற்கு இதை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்யவும்.
6. குக்கருக்குள் குக்கர் பாத்திரத்தை இறக்கி, மூடி போட்டு, விசிலையும் போடவும்.
7. பர்னரை 'ஹை'யில் வைக்கவும்.
8. இரண்டு விசில் வந்ததும் 'சிம்' செய்யவும்.
9. இன்னும் இரண்டு விசில் வந்ததும் ஆஃப் செய்யவும்.
10. சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்டீம் போன பின் குக்கரைத் திறந்தால் .....

ஆஹா.... நாவில் சுவையூற வைக்கும் அரிசி உப்புமா தயார். அதை ஒரு கிளறு நன்றாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.

பெஸ்ட் சைட் டிஷ்:- எலுமிச்சங்காய் ஊறுகாய், அல்லது தக்காளி சாம்பார்.

செய்து பார்த்து சுவைத்து விட்டுச் சொல்லுங்கள்..

இன்னும் நிறைய ஐட்டங்கள் இருக்கின்றன!!!

Monday, August 31, 2009

காஞ்சித்தலைவனுக்கு வயது ஒன்று!


சரியாக கி.பி.2008, ஆகஸ்டு மாதம். சுக்கில பட்சத்து பவுர்ணமி நிலவு தன் கிரணங்களை வீசி இருட்டைப் போக்கும் முயற்சியில் வெற்றிபெற துடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த முயற்சியைத் தடுக்கும் விதமாக ஓங்கி அடர்ந்த மரங்கள் தங்கள் கரிய நிழலை படரவிட்டுக்கொண்டிருந்த ஓர் சோலையின் மூலையில் அமர்ந்திருந்தான் ஒருவன். அவன் சிந்தனையில் உதித்த எண்ணங்களின் வண்ணங்கள் அவன் முகத்தில் அந்தக் கும்மிருட்டிலும் தெளிவாகத் தெரிந்தன. முடிவு செய்துவிட்டான்.

எல்லோரும் குதித்து விட்டார்கள், நாம் குதிக்க யோசித்தால் எப்படி?? குதித்துவிட வேண்டியதுதான்...

மற்றொரு சுபயோக சுப நாளில் (யாருக்கு என்று கேட்டால், யாருக்கோ என்றுதான் பதில் வரும்!!) பிளாக்கர் வழங்கும் இலவச சேவையில் தன் பதிவைப்போட்டு. ஒரே பதிவை மூன்று முறை எழுதி தமிழ்மணத்தின் தேவையையும் பூர்த்தி செய்து தன் திறமையைக் காட்டினான்.

வந்தாரை வாழவைக்கும் வலைப்பூக்களம் இவனை வஞ்சிக்கவில்லை. பின்னூட்டங்களை வாரி வழங்காவிடினும், வயிற்றுக்குக் குறைவில்லாமல் தந்துகொண்டிருந்தது. நட்சத்திரம் என்று இடையில் மின்னி, பணிச்சுமையில் காணாமல் போய், தட்டுத்தடுமாறி, திக்கித் திணறி ஒர் ஆண்டை வெற்றிகரமாகக் கடந்துவிட்டான்.

ஆம் காஞ்சித்தலைவனுக்கு ஒரு வயது நிரம்பிவிட்டது.

இது நல்லதோ, கெட்டதோ, எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான்!!.

ஒரு வேளை அதிக பின்னூட்டங்கள் வந்தால் "ஆஹா, இவ்வளவு புகழறாங்களே, இவங்களுக்காக நெறய எழுதணும்"னு எழுதுவான்.

வழக்கம் போல் பின்னூட்டங்கள் வரவில்லையென்றால் "ஆஹா, நாம எழுதறது இவங்களுக்குப் பிடிக்கலையோ? மாத்தி எழுதணும்"னு எழுதுவான்.

உங்களோடு மேலும் வளர உங்கள் நல் ஆதரவை என்று நாடும்,
உங்கள்
காஞ்சித்தலைவனாகிய
இளையபல்லவன்..



பி.கு:- இந்தப் பதிவு போடக் காரணமாக இருந்த நான் ஆதவனுக்கு நன்றிகள் பல!!

Sunday, August 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? - கந்தசாமி - காம்ப்ரமைஸ்? .. 6

ஒரு படம் எப்படியிருக்கும் என்ற சஸ்பென்ஸ் அதை முதலில் பார்க்கும் போதே உடைந்துவிடும். அல்லது அதைப்பற்றிய விமர்சனத்தைப்படிக்கும் போது கட்டுடைக்கப்பட்டு விடும். இதையும் மீறி அந்தத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுவது எது? அதுதான் திரைக்கதை..

ஜென்டில்மேன் சங்கரின் முதல் படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். மலைக்கள்ளன் புரட்சித்தலைவரின் அதிரடிப்படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். இவை தவிர நிறைய ராபின் ஹூட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சில வெற்றிகள். பல பிளாப்கள்.

வெற்றித் திரைக்கதை அமைப்பதற்கான சில அடிப்படை அமைப்புகளைப்பார்ப்போம். இது இன்க்விசிஷன் செஷன் என்று சொல்லலாம்.

1. நான் இந்தப்படத்தை ரசிகனாகப்பார்க்க நேர்ந்தால் என்ன செய்வேன்?
2. பணம் கொடுத்து சினிமாவிற்கு வரும் ரசிகனுக்கு நான் கொடுக்கும் 'வேல்யூ' என்ன?
3. இந்தப் படம் மூலம் நான் எந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறேன்.
4. மெசேஜ் இருந்தால் அதன் 'டோசேஜ்' எவ்வளவு? மற்ற மசாலாக்களில் அது நீர்த்துப் போகுமா?
5. தயாரிப்பாளர், நடிகர்கள் முதலிய 'ஸ்டேக் ஹோல்டர்'களை என் திரைக்கதை பாதிக்கிறதா?

இந்தக் கேள்விகளை ஒரு திரைக்கதை ஸ்கெட்ச் அமைக்கும் போது கேட்டுக்கொள்ள வேண்டும். 100% சரியென்று வந்தால் அந்தப்படம் வெற்றியடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் இல்லை.

இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்துத்தான் நம் அடுத்த பாடங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.

அதற்கு முன்னர் இப்போது பரபரப்பாக அடிபடும் கந்தசாமியைப் பற்றி பார்ப்போம்.

செலவைப் பற்றி கவலையே படாத தயாரிப்பாளர் - கலைப்புலி தாணு
வித்தியாசமான படங்களைத் தந்த இயக்குனர் - சுசி கணேசன்
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே நடித்துவிட்ட நாயகி - ஸ்ரேயா
அடுத்த சூப்பர் ஸ்டாராக அடியெடுத்துக் கொண்டிருக்கும் - விக்ரம்
புதுமை ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம்
சமீபகாலமாக கலக்கிவரும் இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீப்ரசாத்
மற்றும் வடிவேலு, பிரபு, ஆஷீஷ் வித்யார்த்தி, எக்ஸ், ஒய், இசட்...
வெரைட்டி லொக்கேஷன்கள்



இப்படி ஒரு மெகா கூட்டணியிருந்தும் மக்களுக்கு திருப்தியில்லாமல் போனது ஏன்?


பிரம்மாண்டத்தில் காணாமல் போன லாஜிக். அதனாலேயே அன்னியப்பட்டுவிட்ட காட்சியமைப்புகள்.

சிவாஜிக்கு அளிக்கப்பட்டதை விட கூடுதலாகக் கொடுத்து விட்டதால் ஸ்ரேயா கூடுதலாக குறைக்க வேண்டிய நிலை. அதனாலேயே முகத்தைச் சுளிக்கும் மக்கள்.

சம்பிரதாயத்திற்கு தலை காட்டுவது போல் வடிவேலு.

வலுவில்லாத வில்லன் ஆசீஷ் வித்யார்த்தி.

இத்தனைக்கும் படம் ஒடுவது மூன்று மணி நேரத்திற்கும் மேல்.

=====


என்னைப் பொறுத்தவரை இயக்குனர் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

கலைஞனுக்கு சுதந்திரம் முக்கியம். அவனது கிரியேட்டிவிட்டியில் மற்றவர்கள் கைவைத்தால் அவ்வளவுதான். அன்ஃபார்ச்சுனேட்லி, இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் நிலை இதுதான்.



====

சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?

Sunday, August 23, 2009

காசி வினாயகா மெஸ்

சாப்பிட டோக்கன் வாங்குவதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கியூவில் நிற்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

அப்படி கூட்டம் வந்தாலும் இருக்கும் 40 சீட்களுக்கு மேல் கூட்ட மாட்டேன் என்று சொல்லும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?

ஞாயிறு இரவு, தீபாவளி / பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஒரு வாரம் என்று கடையை மூடும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?

ஒரே சாப்பாட்டையே பல விதமான காம்பினேஷன்களில் கொடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா?

இப்படிப்பட்ட 'இருக்கிறதா'க்களுக்கு ஒரு (ஒரே?) பதில்தான் 'காசி வினாயகா மெஸ்'. சென்னையில் பேச்சுலராக இருந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரு மெஸ். பேச்சுலர்ஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் அக்பர் தெருவில் இருக்கிறது இந்த மெஸ்.

எனக்கு சற்றேறக்குறைய 15 ஆண்டுகளாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான சுவை, அளவு மற்றும் அமைப்புதான் அந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி.

அந்த மெஸ்ஸைப் பற்றி ஒரு அறிமுகம்.

அக்பர் தெரு ஒரு சிறிய சந்து. அதில் ஒரு வீடு மாதிரியான இடத்தில்தான் இந்த மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு மட்டும்தான். டிஃபன் காபி போன்றவை இல்லை. மதியமென்றால் 1 மணி முதல் கியூ சேர்ந்து விடும். இரவென்றால் 8 மணி முதல் கியூ இருக்கும்.

மொத்தம் 40 சீட்கள். நான்கு வரிசையாக இருக்கும். முதல் இரண்டு வரிசை ஒரு பேட்ச் ஆகவும் அடுத்த இரண்டு வரிசை மற்றொரு பேட்ச் ஆகவும் பரிமாறுவார்கள். முதல் வரிசை 'யெல்லோ டோக்கன்' என்று சொல்வார்கள். அடுத்த வரிசை, 'ஒயிட் டோக்கன்'.

முதலில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டும். 20 பேருக்குத்தான் டோக்கன். அவர்கள் சாப்பிட்டு முடித்தஉடன் அடுத்த 20 பேருக்கு சாப்பாடு. இப்படித்தான் போகும்.

அளவு சாப்பாட்டிலேயே இரண்டு வகை உண்டு. சாதா, லிமிட்(!). சாதாவில் ரெகுலர் 'பட்டை'யும் லிமிட்டில் சிறிய பட்டையும் இருக்கும். அதற்கு ஒரு டோக்கன் உண்டு!.

தயிர் வேண்டுமென்றால் அதற்கு ஒரு டோக்கன்.

மதியம் பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல் உண்டு. இது வேண்டாம் என்பவர்களுக்கு 2 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.

அதே போல் அப்பளம் வேண்டாம் என்பவர்களுக்கு 1 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.

இவை வேண்டாம் என்றால் சர்வரிடம் சொல்ல வேண்டும். அவர் ஒரு டோக்கன் தருவார். அதை கல்லாவில் கொடுத்தால் அங்கே பணம் ரிட்டர்ன் கிடைக்கும்.

வேகமாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த செட் வந்து விடும். பரிமாறல்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள். பொரியலும், கூட்டும் இரண்டாவது முறை உண்டு.

உணவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததுதான் இந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி. வேறு சில மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் சாதத்தில் சுண்ணாம்பு போடுவார்கள். அது அசிடிட்டியை உருவாக்கும். இங்கே அப்படியில்லை.

இந்த மெஸ்சுக்கு பல 'வருடக்கணக்கான' வாடிக்கையாளர்கள் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.

ஆனாலும் வீட்டில் எப்போதாவது ஊருக்குப் போனால் திருவல்லிக்கேணிக்கு இங்கு சாப்பிடுவதற்காகவே செல்வேன்.

தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்...

Thursday, August 20, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 14

அத்தியாயம் 14: குவலாலா. . கோட்டைத்தலைவன்..

ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.

அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.

====

அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )

[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"

கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.

=====

குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.

குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.

திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.

அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.

"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.

"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,

"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.

"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"

"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"

"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.

அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.

"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.

(தொடரும்)

Thursday, August 13, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 13

அத்தியாயம் 13: ஹொய்சள சாம்ராஜ்யம்

காலைக் கிரணங்களை வீசி மெல்ல எழுந்தான் கதிரவன். அவனோடு எழுந்தன உலக உயிர்களெலாம். உறங்குவது போலும் சாக்காடு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த சாக்காட்டிலிருந்து உலகத்தை மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க வந்த உதய சூரியன் மாலைப் பொழுதைப் போலன்றி தன் செந்நிற கிரணங்களின் வண்ணத்தை உடனே பொன்னிறத்துக்கு மாற்றினான். அவனது சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஹொய்சள தலை நகர மக்களுக்கும் வந்து விட்டது போலும். அந்தக் காலை வேளை வழக்கம் போலவே கலகலப்பாக இருந்தது.

இரவில், நீலாவுடனான அந்தரங்க தர்க்கம் மூன்றாம் ஜாமத்தைத் தாண்டி நீண்டாலும் சூரியன் உதிக்குமுன்னரே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, தலை நகரத்தின் தலைமைக் கோவிலான ஹொய்சளேஸ்வரர் கோவிலுக்குச் சென்றான். கூடவே நீலாவும். ஒரு மன்னவனாகச் செல்லாமல் பக்தனாகச் சென்ற மன்னவனை மக்கள் வணங்கவும் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் நேரே கோவிலுக்குள் சென்றான் வல்லாளன். நாமும் அவனைத் தொடர்வோம். அப்போதுதான் அந்தக் கோவிலை நன்றாகப் பார்க்க முடியும்.

ஹொய்சளேஸ்வராலயம், தமிழகக் கோவில்களைப் போலன்றி முற்றிலும் வேறு விதமாக இருந்தது. அங்கே ராஜ கோபுரம் இல்லை. கோவிலைச் சுற்றியும் மதிள்கள் இருந்தன. உள்ளே நுழைய தோரண வாயில் மட்டுமே உண்டு. உள்ளே நுழந்ததும் விசாலமான பிரகாரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. வாயிற்தோரணத்திலிருந்து சற்றேறக்குறைய நூறு அடிகள் தொலைவில் முக்கியக் கோவில் அமையப்பெற்றிருந்தது. ஜகதி என்ற மேடை அமைப்பின் மேல் அமையப்பெற்றிருந்த கோவிலின் தூண்களும், பக்கச்சுவர்களும் பல்வேறு நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவில் தமிழ் நாட்டுக் கோவில்களைப் போல் கருங்கற்களால் அமைக்கப்படாமல், கெட்டியான சுண்ணாம்புக்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவ்வளவு நுணுக்கமான, உயிரோட்டமுள்ள, தத்ரூபமான சிற்பங்களைச் செதுக்க முடிந்தது. ஆஹா. இவற்றைக் காணக் கண் கோடி இருந்தாலும் போதாதல்லவா?

அந்த ஜகதி எனப்படும் மேடையில் ஏறினால் நமக்கு முதலில் தெரிவது ஒரு மண்டபம். தூண்கள் உருளை வடிவில் இருந்தன. வெளிப்புறத் தூண்களைப் போலன்றி இவற்றில் சிற்பங்கள் அமையாமல் வட்டமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி கருவறை எனப்படும் கர்ப்பக்கிரஹத்துக்குச் சென்றால் அங்கே, ஹொய்சளேஸ்வரர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே சந்தளேஸ்வரரும் அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். வல்லாளனின் கொள்ளுப்பாட்டனான விஷ்ணுவர்தனனின் ஆட்சியில் அவன் நினைவாகவும் அவன் மனைவி சந்தளாதேவியின் நினைவாகவும் அவனது படைத்தலைவன் கேதுமல்லன் கட்டிய கோவில் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாட்டைக் குறிக்கும் வகையிலும், ஆளும் பரம்பரையைக் குறிக்கும் வகையிலும் ஹொய்சளேஸ்வரா எனப் பெயர் பெற்று தலை நகரத்திலேயே அமையப்பெற்ற கோவிலில் எப்போதும் சிறப்புடன் பூஜைகள் நடப்பது வழக்கம். அதுவும் இன்று அரசனும் அரசியும் விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதால் பூஜையின் சிறப்பு அதிகமாயிற்று. பூஜையில் மிக கவனத்துடன் கலந்து கொண்ட வல்லாளன் தன் புதிய முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தான்.

விஸ்தாரமான பூஜைகளின் முடிவில் முதல் மரியாதையை ஏற்றுக்கொண்டு பிராசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தப் பிரசாதத்தட்டு தவறி கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த முதியவரான அர்ச்சகர் தன்னை மன்னித்தருளுமாறு மன்னவனிடம் மன்றாடினார். அந்த நிகழ்வு தன் மனதைச் சிறிது வாட்டவே, அர்ச்சகரை அமைதி கொள்ளுமாறு பணித்துவிட்டு கோவிலை விட்டகன்ற வல்லாளன், நேரடியாகத் தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.

====

மீண்டுமொருமுறை அந்த மண்டபத்திற்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்முறை ஏற்கனவே இருந்தவர்களை விட சிலர் கூடுதலாக இருந்தனர். அவர்கள் முறையே வடதிசை தண்ட நாயகம் மற்றும் தென் திசை தண்ட நாயகம். (தண்ட நாயகம் என்பது அந்த திசையில் அமைந்த படைக்குத் தளபதியைக் குறிக்கும்.) அரசன் வரவை நோக்கிக்காத்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அரசன் வரும் தகவல் வந்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.

(இங்கே சிலவற்றை நாம் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் சில நிகழ்வுகள் அனைத்து புதினங்களிலும் இருப்பதைக் காணலாம். அவற்றுள் ஒன்று அந்தரங்க ஆலோசனை. இவை புதினங்களில் முக்கிய இடம் பெறுகின்றன, திருப்பு முனையாக இருக்கும் இடங்களில் இவை கட்டாயம் இடம் பெறும். இந்த ஆலோசனைகள் உண்மையாகவே நடந்திருக்குமா அல்லது புனைவா என்று நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால், பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் போது, மன்னன் சர்வாதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், அமைச்சர் குழுவினருடனும், மற்ற அரச அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுத்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு அரசவையிலும் அமைச்சர் குழு முக்கிய அங்கம் வகித்து வந்தது. அவர்களது முக்கியப்பணி அரசு இயந்திரத்தைத் திறம்பட நடத்துவது. அரசனுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவது.

இன்றைய அரசு முறையின் முன்னோடி, ஹொய்சள அரசு முறைதான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆகவே, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போதெல்லாம் அமைச்சரவையைக் கூட்டுவது இன்றியமையாததாகிறது!! மேலும் 'ப்ரோடோகால்' மிகக் கடுமையாகக் கடை பிடிக்கப்பட்டு வந்ததும், மன்னன் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு 'ஐகானிக் ஸ்டேச்சர்' அளிக்கப்பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியப்படுகின்றன. ஆகவே அவ்வாறு ஆலோசனைகள் வருவதும் மன்னனுடனான பேச்சுக்களும் இயல்பை ஒட்டியே இருக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்வீர்களாக!)

கையசைவினாலேயே அவர்களை அமரச்சொன்ன வல்லாளன் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.

"நமது அரசில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்களது ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்படுகின்றன. அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். அந்தக் கடமையை இதுவரையிலும் சரியாகவே நிறைவேற்றி வந்துள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஹொய்சளேஸ்வரரைத் தரிசித்து விட்டு நேராக இங்கு வந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இங்கே நாம் கூடியிருந்த போது படையெடுப்பைப்பற்றி முடிவு செய்தோம். அந்தப் படையெடுப்புக்கு இப்போது நேரம் வந்து விட்டது. தளபதியாரே, நமது தற்போதைய படை நிலவரம் என்ன என்பதை அனைவருக்கும் விளக்குங்கள்"

"உத்தரவு மன்னா. நம்மிடையே மூன்று படைப்பிரிவுகள் இருக்கின்றன. அவை முறையே குத்தி (ஆந்திர மாநிலம் குண்டக்கல் அருகே இருக்கிறது. பிற்காலத்தில் இது விஜய நகரப் பேரரசின் முதல் தலை நகராக விளங்கியது.), குவலாலா (இன்றைய கோலார்) மற்றும் தலை நகரான த்வார சமுத்திரத்தல் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன் வரை குறைந்த படை வீரர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற படை வீரர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லுமாறும் தங்கள் குடும்பத் தொழிலைக் கவனித்து வரவும் பணிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் இங்கு நடை பெற்ற ஆலோசனையின் பேரில் அனைவரும் படையில் சேருமாறு அழைக்கப்பட்டனர். இப்போது நம்மிடையே மொத்தமாக 48000 படை வீரர்களும், 4800 குதிரைகளும், 2400 யானைகளும் 400 ரதங்களும் இருக்கின்றன (1:5:10:100 என்ற அமைப்பில் படைகள் அமைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதையே பயன் படுத்தியிருக்கிறேன்."

"இந்தப்படைகளை ஒன்று சேர்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?"

"மன்னா, வடக்கிலோ தெற்கிலோ சேர்க்க வேண்டுமென்றால் ஒரு பட்சத்திற்குள் (பதினைந்து நாட்கள்) சேர்த்து விடலாம்."

"அப்படி சேர்ப்பது வெளிப்படையாகத் தெரியுமா?"

"ஆம் மன்னா, ராஜபாட்டைகளையும், சகடப்பெருவழிகளையும் உபயோகித்தால் மட்டுமே படைகள் விரைவில் சேர முடியும். அப்படிச் செய்யும் போது அனைவருக்கும் தெரிய வருவதில் வியப்பில்லையே"

"நமது படைகள் ரகசியமாகக் கலக்க வேண்டுமென்று விரும்புகிறேன்"

"அப்படியென்றால் அவர்களைக் காட்டு வழியாகத்தான் அழைத்து வர வேண்டியிருக்கும். அதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் அவகாசம் தேவைப்படும். எங்கே என்பதையும் மன்னர் தெரிவிக்க வில்லை. வடக்கிலா, தெற்கிலா?"

"சமயம் வரும் போது தெரிவிக்கிறேன். ஒரு மாதம் என்பது சரியாகத்தான் இருக்கும். படைகளை ஒரே வழியிலன்றி பல வழிகளிலும் பயணம் செய்யுமாறு உத்தரவிடுங்கள். அனைவரும் ஒரே நாளில் புறப்படாமல், ஒவ்வொரு நாளும் சிலரை அனுப்பினால் படை நகர்வது வெளியில் தெரியாமல் இருக்கும். மேலும் படைகளை மொத்தமாகக் கலக்க விடாமல், பாதி படைகளை சற்றுத் தூரத்தில் நிறுத்துங்கள். முதலில் இருக்கும் படை நகர்ந்ததும் இந்தப் படை அர்த்த சந்திர வடிவத்தில் பரவி முன்னர் செல்லும் படைக்கு அரணாகச் செல்ல வேண்டும். முன்னே செல்லும் படையில் யானைகளை அதிகப் படுத்துங்கள். அவை அரணாகச் செயல் படும். பின்னால் இருக்கும் படையில் குதிரைப்படையை நடுவில் நிறுத்துங்கள். அவை இரு பக்கமும் பாயும் நிலையில் இருக்க வேண்டும். படை வீரர்களிடத்தில் வேலும் வில்லும் அதிக அளவில் இருக்கட்டும். வாள் சிலரிடம் மட்டும் இருந்தால் போதுமானது. முன்னர் செல்லும் படைக்கு வடதிசை தண்ட நாயகமும் பின்னால் நிற்குப் படைக்கு தென் திசை தண்ட நாயகமும் தலைமையேற்பார்கள். போர் முகத்தில் நானும் இருப்பேன். என்னுடன் தளபதி இருந்து படைகளின் நடவடிக்கையை மாற்றத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார். தேவைக்கேற்ப நானும் யுத்தத்தில் பங்கெடுப்பேன். இம்முறை நமது வெற்றியில்தான் ஹொய்சளர்களின் தலை விதி நிர்ணயிக்கப்படும். தலை நகரில் அமாத்யர்கள் இருப்பார்கள். இந்தப் போர் சற்றேறக்குறைய ஒரு பட்சத்தில் முடிந்து விடும். வரும் விஜயதசமியன்று படை வடிவம் நகர வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா" என்று அடைமழை அருவி போல் திட்டத்தை விளக்கிவிட்டு தன் ஆசனத்தில் சற்று சாய்ந்து கொண்டு அனைவரையும் பார்த்தான் வல்லாளன். திட்டத்தை புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. அதன் பிறகும் அதன் லாப நஷ்டங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் முதலில் சுதாரித்தவர் மகாமாத்யர்தான்.

"மன்னர் அனைத்துப் படைகளையும் ஒரு பகுதியில் கலக்கத் திட்டமிட்டிருப்பது புரிகிறது. அது எந்தப்பகுதி என்பதும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் மற்ற பகுதி திறந்து விடப்பட்ட கதவு போல் ஆகிவிடுமே என்று அஞ்சுகிறேன்"

"மகாமாத்யரே, நன்று சொன்னீர். அவ்வாறே ஆக வேண்டும். ஏனென்றால் நான் திறந்து விடப்போகும் கதவின் பக்கம் யாரும் வரப்போவதில்லை"

"அது எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?"

"சொல்கிறேன். வேறு விளக்கங்கள். சந்தேகங்கள்?"

"திசையைத் தவிர வேறொன்றுமில்லை மன்னா?"

"நல்லது. சொல்கிறேன் கேளுங்கள். நமது படைகள் அனைத்தையும் குவலாலத்தில் சேர்க்க வேண்டும். நமது நோக்கம் பாண்டியரைத் தாக்கி தமிழகத்தை ஹொய்சள தேசத்துடன் இணைப்பது. மகாமாத்யரே, தெற்கில் தான் நமக்குப் பகை அதிகம். வடக்கில் நமக்குக் கவலையில்லை. புரிந்ததா?"

மன்னன் எண்ணம் பாண்டியர்களைத் தாக்குவதில் ஸ்திரப்பட்டுவிட்டதை அறிந்து கொண்ட மகாமாத்யர், "மன்னா தாங்கள், மாலிக் கஃபூரை மறந்து விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்"

"இல்லை மகாமாத்யரே, இல்லை. அவனால் இங்கே ஆபத்து வராது"

"அதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்'

"அவனை மதுரைக்கு வருமாறு சுந்தர பாண்டியன் ஏற்கனவே அழைப்பு விடுத்து விட்டான். அத்துடன் அவனுக்கு வழியும் போட்டுக்கொடுத்துவிட்டான். அந்த வழி முதலில் வீரதவளப்பட்டணம், பிறகு மதுரை, பிறகு த்வார சமுத்திரம். த்வாரசமுத்திரத்திற்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு வரப்போகிறான் மாலிக் கஃபூர். அவனையும் பாண்டியர்களையும் ஒரு சேர தமிழகத்தில் அழிப்பேன்" என்று முடித்த போது ஆவேசம் நிறைந்திருந்தது அவன் குரலில். அவன் அளித்த தகவல் அங்கு கூடியிருந்தோருக்குப் புதுமையாக இருந்தது. மன்னன் சொல்வது போல் நடந்தால் ஹொய்சள தேசம், ஹொய்சள சாம்ராஜ்யமாகிவிடுமென்பதையும், அதற்காக மன்னம் மிகப்பெரிய ஆபத்தான திட்டத்தில் இறங்கியிருக்கிறானென்பதையும் அங்கிருந்தோர் ஐயமற அறிந்து கொண்டனர்.

(தொடரும்)

Friday, August 7, 2009

விகடன் வரவேற்பறையில் இளையபல்லவன்!

எனக்கே முதலில் தெரியாது. ஏதாவது காமெடி, சினிமா பதிவு போட்டால் 100-200 பேரும், சக்கர வியூகம் போட்டால் 40-50 பேரும் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவார்கள். பதிவே இல்லாத நாட்களில் 10-20 பேராவது வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.

அப்படிப்பட்ட புகழ்பெற்ற எனது வலைப்பூவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 ஹிட்டுகள்!. என்ன ஆயிற்று என்று லைவ் ட்ராஃபிக் ஃபீடில் தேடினால் பெரும்பாலானவர்கள், விகடன்.காமிலிருந்து வந்திருந்தார்கள். அதில் இந்த வார ஆனந்த விகடன் லிங்க் இருந்தது. இது தெரிந்தது நேற்று இரவு 11.45 மணிக்கு.

சரியென்று இன்று காலை விகடன் புத்தகத்தை வாங்கிப்பார்த்ததும் விஷயம் உறுதியானது.

"நீங்க எழுதி எழுதி என்னத்த கிழிச்சீங்க? பேப்பர்ல எழுதியிருந்தா அதையாவது கிழிச்சியிருக்கலாம்! லொட்டு லொட்டுன்னு பொட்டிய தட்டிக்கிட்டிருக்கீங்க." என்ற கேள்வியோ, கருத்துரையோ தங்கமணியிடமிருந்து இனி எழ வாய்ப்பில்லை. (இது வரையிலும் இந்தக் கேள்வி எழவில்லை என்பது கூடுதல் தகவல்!.

ஏன் இனி எழாது என்பதற்கான விடைதான் தலைப்பு. இந்த வார ஆனந்த விகடனில், "விகடன் வரவேற்பறை" என்ற பகுதியில், காஞ்சித்தலைவன் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு முறை எனது புரட்சிகரப் பதிவான "ஃபிகர்களை கரெக்ட் செய்வது எப்படி" என்பது யூத்ஃபுல் விகடன்.காமின் ப்ளாக்ஸ் கார்னர் துவங்கப்பட்ட சமயத்தில் இணைக்கப்பட்டது.

இப்போது பிரின்ட் எடிஷனிலேயே வந்திருப்பதும், வலைப்பூ ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே விகடனின் பார்வை இங்கு விழுந்திருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

சக்கர வியூகத்தை அறிமுகப்படுத்தாமல், திரைக்கதை எழுதுவது எப்படி என்ற பதிவுத்தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்!.


இதை சாத்தியமாக்கிய உங்கள் ஆதரவை எப்போதும் போல் என்றும் நாடும்,

உங்கள்
இளைய பல்லவன்

Thursday, August 6, 2009

திரைக் கலைஞன் (கதையல்ல, நிஜம்!)

சினிமா என்ற அதீதமான பொருள் அனைவரையும் ஈர்க்க வல்லது. அதன் கனபரிமாணங்கள் அளவிட முடியாதவை. சினிமா மின்சாரம் என்றால் மிகையல்ல. சிலருக்கு "பவர்". சிலருக்கு "ஷாக்". சிலருக்கு "நோ சப்ளை!". ஆனாலும் அதை நாடி, ஓடி நிதம் தேடி வருவோருக்குப் பஞ்சமில்லை.

எண்பதுகளின் இறுதிவரை சினிமா என்பது ஒரு மாயையாகவே இருந்து வந்தது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் அதன் மாயை சற்று விலக, கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் வருகை அதை மேலும் விலக்கியது. ஆயினும் என்ன பயன்? அதன் தாக்கம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. எல்லோருக்கும் சினிமா என்ற மோகம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஒரு சிலர் தன் இயல்பு வாழ்க்கையை ஏற்கும் பொருட்டு சினிமா பற்றிய எண்ணங்களைத் தள்ளி வைக்கின்றனர். சிலரது அந்தராத்மா அதை அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு திரைத்துறையை விட்டு விலகி இருப்பது, இயல்பை மீறிய செயலாக இருக்கிறது. ஒரு மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதைப் போன்றது கலைஞர்களுக்குச் சினிமா. அது உப்புத் தண்ணீரோ, நல்ல தண்ணீரோ, கூவம் நீரோ. அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் அதற்குள்ளேதான் இருந்தாகவேண்டுமென்ற அவா. ஒரு உந்துதல். இந்த நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோரை நாம் காணலாம். அனைவரின் தேடலும் ஒன்றுதான். அங்கீகாரம். அது கிடைத்துவிட்டால் மற்றதெல்லாம் தேடிவரும்.

அத்தகைய விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பலரில் எனக்கு அறிமுகமான ஒருவரை இங்கே அறிமுகம் செய்கிறேன். இந்த அறிமுகம் அத்தகையோரது உள்ளக் கிடக்கையை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இங்கே நான் செய்ய இருப்பது, ஃப்ளாஷ்லைட்டை எதிர் பார்ப்பவருக்கு மெழுகுவத்தி வெளிச்சத்தைக் காண்பிப்பது போன்றது.

திரு. கார்த்திக் ராஜா. மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானவர். எங்கள் நிறுவனத்தின் ஊழியர் தினத்தை முன்னிட்டு ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதில் எங்கள் ஊழியர்களே (என்னையும் சேர்த்து!) பாடவேண்டும் என்பது ஏற்பாடு. கார்த்திக் ராஜாவின் இன்னிசைக்குழுவை நாங்கள் புக் செய்திருந்தோம். எங்களுக்குப் பாட்டு சொல்லித்தரும் வேலையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாக எங்களைத் தேற்றி பாடவும் வைத்துவிட்டார். எங்களுக்கே ஆச்சரியம். நாங்களும் பாட முடியும் என்ற எண்ணம் வந்த உடன், மேலும் ஒரு நிழச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போதுதான் அவருடனான பழக்கம் அதிகமானது.

ஒரு நாள் ஒரு டி.வி.டி.யைக் கொண்டுவந்து என்னைப் பார்க்கச் சொன்னார். ஒரு குறும்படம். அவரது திரைக்கதை, வசனம் இயக்கத்தில். அப்போதுதான் அவரது திரைத்துறைப் பின்னணி குறித்து அறிந்து கொண்டேன்.


இசைப் பட்டதாரியான அவருக்கு இளையராஜா என்றால் உயிர் அல்லது அதைவிட மேல். மதுரையை அடுத்த மேலூரிலிருந்து இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு சென்னை வந்தவரை வழக்கம் போல் திரையுலகம் திருப்பியனுப்பியது. ஆனாலும் அயராமல், துவளாமல் மதுரை இசைக்கல்லூரியில் சேர்ந்து இசைப் பட்டம் பெற்று மீண்டும் சென்னை வந்தார். நோக்கம் ஒன்றுதான், இளையராஜாவைச் சந்திக்க வேண்டுமென்பது.

வழக்கம் போலவே அனைத்து விதமான இடர்களைச் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை. இடையில் ஈரோடு சவுந்தருடன் ஏற்பட்ட நெருக்கம், இயக்கம் நோக்கி அவரைத் திருப்பியது. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக ஏழு படங்களில் பணியாற்றிய அனுபவமும், கருத்துக் குவியல்களும் பின்புலமாக இருக்க இயக்குனருக்கான அங்கீகாரத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தக் குறும்படம், தன் நண்பருக்காக இயக்கியிருக்கிறார். புகைப்பழக்கத்தைப் பற்றி மிக மிக மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார். அந்தக் குறும்படத்தைப் பற்றிய விமர்சனமும் அவருடனான என் கலந்துரையாடலின் தொகுப்பும் அடுத்த பதிவில்.


அவருடனான கலந்துரையாடலில் சினிமாக்காரர்களைப் பற்றிய எனது புரிதல்கள் தெளிவுபட்டன. இது வரை சினிமாத் துறைக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது என்ற என் நிலையில் ஒரு மாற்றம்! ஒரு வருங்கால இயக்குனர், இசையமைப்பாளருடனான பழக்கம் என்பது சினிமா என்ற ஊடகத்தை நோக்கிய எனது பார்வையை 'ஜூம்' செய்திருக்கிறது!.

இசையின் பயணம் இசையோடு இயக்கத்தை நோக்கி என்பதைப் புரிந்து கொண்டேன்.

(திரு கார்த்திக் ராஜாவுக்கு, தமிழ்ஸ்டூடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் குறித்துத் தெரிவித்திருந்தேன். அவர் 8.8.9 அன்று நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.)

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 12

அத்தியாயம் 12: குறில் நெடில்

தொரசமுத்திரம் என்று கொச்சையாக அந்நாளில் அழைக்கப்பட்டதும் ஹளபேடு என்று இன்னாளில் அறியப்படுவதுமாகிய ஹொய்சளர்களின் தலை நகரமாகிய த்வார சமுத்திரத்திற்கு மீண்டும் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக வல்லாளனைத் தனியாக விட்டுவிட்டு வந்து விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும். ஏனெனில், இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்யத் துவங்கியிருந்தது.

அது ஒரு கார்கால நாளின் மாலைப் பொழுது. காலை முதல் பெய்திருந்த மழை சற்று ஒய்ந்து லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. நடுவானில் மேகங்கள் திரண்டிருந்தாலும், மேற்கே மேகங்கள் இல்லாததால் சூரியனின் செந்நிற கிரணங்கள் பூமியை எட்டிப்பார்த்தன. நன்றாகப் பெய்த மழையில் கரும்பச்சை வர்ணத்தைப் பெற்றிருந்த மரங்கள் மேலைச் சூரியனின் கிரணங்களால் மெருகூட்டப்பட்டு மேலும் தகதகத்தன. சூரியனின் ஒளி லேசாக அடித்துக் கொண்டிருந்த சாரலில் பட்டுத் தெரித்ததால் கீழ்வானில் தோன்றிய வானவில், வானுலகின் தோரணவாயிலோ என்றெண்ணும் வகையில் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சமுத்திரம் என்ற பெயருக்கேற்றார்ப்போல் நீண்டு பரந்து விரிந்திருந்த த்வாரசமுத்திர ஏரியானது மழையால் நிரம்பி காற்றால் தளும்பிக் கொண்டிருந்தது. ஏரியிலிருந்து வந்த குளிர்காற்றும், மழைச்சாரலும், ஒரு இன்பானுபவத்தை அளித்துக் கொண்டிருந்தன.

அந்த ஏரியின் கரையில் அமைந்திருந்த மண்டபத்தின் மேல் உப்பரிகையில் அமர்ந்து ஏரியை நோக்கிக்கொண்டிருந்தான் வல்லாளன். இத்தகைய ரம்மியமான சூழல் இருந்தும் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் அவனது இருப்பு இங்கில்லை என்பதை தெளிவாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.


ஒவ்வொரு அரசகுலமும் ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பான நிலையை அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ஹொய்சளர்களில் வல்லாளனின் கொள்ளுத்தாத்தாவாகிய இரண்டாம் வல்லாளன் காலத்தில் ஹொய்சளர்களின் கீர்த்தி சிறப்பான நிலையை எட்டியிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். அதற்குப் பிறகு அவரது மகன் சோமேஸ்வரன் ஒரு விதமாக நாட்டைப் பரிபாலனம் செய்தான், இறுதியில் அவனால் கட்டிக்காக்க முடியாமல் போகவே தனது இரு மகன்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டான். நரசிம்மன் என்ற மகனை த்வாரசமுத்திரத்திற்கும், ராமனாதன் என்ற மகனை தமிழகப் பகுதிக்கும் தலைவனாக நியமித்தான். ஆனால் ஜடாவர்ம சுந்தர பாண்டியரின் பராக்ரமத்தால் ராமனாதன் முறியடிக்கப்பட்டதோடு, அவனது உதவிக்கு வந்த நரசிம்மனும் குடகு வரை விரட்டப்பட்டான். இந்தத் தோல்வி நரசிம்மனை வெகுவாக பாதித்தது. அதைவிட அவனது மகனாகிய வல்லாளனை மிகவும் கொதிப்படைய வைத்தது. சமயம் பார்த்து பாண்டியர்களை வஞ்சம் தீர்க்க திட்டமிட்டிருந்தான். இந்தப் பின்னணியில்தான் மாலிக் கஃபூர் படையெடுப்புக்கான ஏற்பாடுகளும், சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியனுக்கிடையேயான அரசப் பிளவும் ஏற்பட்டிருந்தன.

மேற்கண்ட நிகழ்வுகளின் காரணம் பற்றி பாண்டியர்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகக் கருதினான் வல்லாளன். அதற்கான ஆதாரம் இருக்கவே செய்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இருந்தது பாண்டிய தேசம். சுற்றியுள்ள பகைவர்கள் யாரும் அந்த அளவுக்கு வலுவில்லாததே காரணம். அதனால் பாண்டிய வீரர்களுக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாண்டிய தேசம் இரண்டாகப் பிரிந்தது மேலும் பலவீனத்தைக் கூட்டியது. பாண்டியனைப் பழி தீர்க்க இதுதான் சமயமென்று கருதினான் வல்லாளன். ஆனால் மாலிக் கஃபூர் பற்றிய சிந்தனை அவன் மனதை விட்டகலவில்லை.

இவ்வாறாக பற்பல யோசனைகளில் இருந்ததால், இயற்கையில் கலா ரசிகனான வல்லாளன் அந்தச் சூழலிலிருந்து அன்னியப்பட்டுப்போனான். சூரியன் மலை வாயிலில் விழுந்து இருள் கவியத் தொடங்கி பந்தங்கள் ஏற்றப்பட்ட போதுதான் அவனது நினைவு இவ்வுலகிற்குத் திரும்பியது. நெடிய பெருமூச்சுடன் ஆசனத்தை விட்டெழுந்து கீழே இறங்கி மாளிகை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

=====

அரச மாளிகையானது கோட்டையின் மேற்குப் பகுதியை ஒட்டினார்ப்போல் அமைக்கப் பட்டிருந்தது. அதை ஒட்டி த்வாரசமுத்திரமென்னும் ஏரி இருந்ததால் அது இயற்கை அரணாக மட்டுமின்றி, சுகமான காற்றுக்கும் வழி செய்தது. ஏரியிலிருந்து வெட்டிவிடப்பட்ட கால்வாய் அந்தப்புரத்திலுள்ள நந்தவனத்திற்கு நீரைச் சேர்த்ததோடு அங்கே உள்ளே அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திற்கும் நீரைப் பாய்ச்சியது. அந்தப்புர வாசிகள் அங்கே நீராடுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குளமும் அதைச் சுற்றியுள்ள நந்தவனமும் வல்லாளனின் இல்லாளான நீலாவின் கைவண்ணத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.

இத்தகைய எழில் கொஞ்சும் சூழல் எதிலும் மனதைச் செலுத்தமுடியாமல் அந்தப்புரம் வந்த வல்லாளன் நேராக உள்மாளிகையை அடைந்து ஆகாரமும் அருந்தாமல் படுக்கையறைக்குச் சென்றான். உடை கூட மாற்றாமல் மஞ்சத்தில் அமர்ந்து தனது சிந்தையிலிருந்த சிந்தனைக் குதிரையை மீண்டும் விரட்டினான்.

அரசன் உள்ளே வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதுமே நீலா தனது பணிகளை முடித்துக் கொண்டு மகனை உறங்கச் செய்துவிட்டு, படுக்கையறைக்கு விரைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி புதிதாக இல்லை. கடந்த சில நாட்களாகவே வல்லாளனின் நிலை இதுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், ஒரு நெடிய மூச்சின் காரணமாக அவள் அவயவங்கள் எழும்பித் தாழ்ந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு மஞ்சம் நோக்கிச் சென்றவள், ஏதும் பேசாமல் அவனருகில் அமர்ந்தாள்.

பொதுவாகவே கலா ரசிகனும், இன்பப்பிரியனுமான வல்லாளன், நீலாவிடத்தில் அளவிடற்கரிய அன்பை வைத்திருந்தான். அவளருகாம அவனை எப்போதுமே இன்பத்தில் ஆழ்த்தும் திறமை படைத்தது. அப்படியிருந்தவனையும் மாற்றக்கூடிய பெருங்கவலை என்னவென்பதை அவளிடத்தில் தெரிவிக்காமலேயே இருந்தான் வல்லாளன். ஆனால் சிறந்த மதியூகியான நீலா அவன் மனதில் ஓடிய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். ஆயினும் அவனே சொல்லட்டுமென்று வாளாவிருந்துவிட்டாள். இப்போது அவனது நிலை மோசமாகிவிடவே இனி அப்படியே விடுவதில் ஒரு பயனுமில்லை என்ற முடிவிற்கு வந்தவளாய், அவனை சற்றே உலுக்கினாள்.

அவளது அருகாமையின் வாசம் அவனது நாசியைத் தொளைத்து அவனை இவ்வுலகிற்கு இழுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அந்த உலுக்கல் அவனை உடனே டுக்கையறையில் இறக்கியது. அவளை நோக்கித் திரும்பியவன், "நீலா" என்றான். புன்முறுவல் செய்ய முயன்று தோல்வியும் கண்டான்.

"சுவாமி. உங்களிடம் இந்த மாறுதலை கடந்த சில வாரங்களாகவே பார்த்து வருகிறேன். உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். ஆயினும் நீங்களே சொல்லாமல் நான் கேட்பது அவ்வளவு நன்றாயிராது என்பதாலேயே வாளாவிருந்துவிட்டேன். ஆனால் இப்போது உங்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இனி தாமதிப்பதில் பயனில்லை. சொல்லுங்கள்." என்றாள் ஆறுதலாக அவனை வருடியவாறு. நீலாவின் பேச்சும் வருடலும் வல்லாளனை இளக்கிவிட்டன. இவ்வளவு புரிதலுள்ள மனைவி அமையப்பெற்றிருக்க தான் வீணே வருந்திக்கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவன், "நீலா, எது எப்படியாயினும் உன் அருகாமையில் நான் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். ஆனால் என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாதது ஒன்றுண்டு. அதுதான் பாண்டியர்களிடம் என் தந்தை அடைந்த தோல்வி. தன் சகோதரனைத் தாக்க வந்தவனைத் தடுக்க வந்தவனிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்து கொள்ளாமல் மிகவும் மோசமாக நடந்து கொண்டான் பாண்டியன். அது நம் பரம்பரைக்கே அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. அதைத் துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இத்தனை நாளும் வாளாவிருந்துவிட்டேன். இப்போது காலம் கனிந்து விட்டது. பாண்டியர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம். கணக்கை நேர் செய்யவேண்டிய தருணம். பாண்டியர்களை அடியோடு அழித்து தமிழகத்தை ஹொய்சள ராஜ்ஜியத்துடன் சேர்த்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை முடித்துவிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் வடக்கில் மாலிக் கஃபூர் தண்டு இறங்கியிருக்கிறான். அவனைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனைக் கவனிப்பதா, இல்லை பிளவு பட்டிருக்கும் பாண்டியர்களுடனான பகையைத் தீர்த்துக் கொள்வதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய் நீலா". என்று கடகடவென பள்ளி சென்று திரும்பிய குழந்தை அனைத்தையும் தாயிடத்தில் ஒப்பிப்பது போல் கொட்டிவிட்டான். இப்போது அவனும் குழந்தையாகப் படுத்துவிட்டான் அவள் மடியில்.

இவையனைத்தும் நீலா அறிந்ததேயென்றாலும், உடனடியாக ஒன்றும் சொல்லாமல், அவனது தலையைக் கோதியவாறே மந்தகாசப் பார்வையை அவனது விழிகளோடு கலக்க விட்டாள். அது பூரணமாக அவனை கவலையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. "சுவாமி, ஆந்திரத்தில் அமைந்துள்ள காகதீய அரசின் மகாராணியார் ருத்ராம்பா தேவியிடத்தில் சில காலம் பழக நேர்ந்தது. கலை மகளும், அலை மகளும், மலை மகளும் ஒருங்கே இருப்பது போன்ற வடிவில் இருந்தார்கள் அந்த தேவி. ஆயினும் ஒரு அன்னையைப் போல் ஆதுரத்துடன் எங்களிடத்தில் பழகுவார்கள். ஒரு முறை அவர்களது அரசவைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அவர்களது அரசாட்சித் திறனைக் கண்டு வியந்திருக்கிறேன். நாமும் இது போல் ஒரு நாள் சிறந்த ராஜதந்திரியாவோம் என்றும் எண்ணியதுண்டு. அதற்கேற்றார்ப்போல், தாங்களும் அவ்வப்போது என்னிடத்தில் யோசனைகள் கேட்டு வருகிறீர்கள். தாங்கள் காஞ்சிக் கடிகையில் பயிலச் சென்றிருந்தபோது, இந்த நாட்டை என் சக்திக்கேற்றார்ப்போல் நிர்வகித்தேன். ருத்ராம்பா தேவி இந்த நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணுகிற போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்". என்று சொல்லி நிறுத்தியவள், அவன் கண்ணோடு கண்ணை மீண்டும் கலந்தாள்.

"சுவாமி, ஸ்தான பலம் என்று ஒன்று உண்டு. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையாதீர்கள். நமக்கருகில் இருக்கும் மாலிக் கஃபூர் தற்போதைக்கு அசையாவிட்டாலும், நம் அசைவுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். நெடுங்காலம் அவனால் தாமதிக்க முடியாது. விரைவில் நகர ஆரம்பித்துவிடுவான். அவனது கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது த்வாரசமுத்திரம். இதை நீங்கள் இப்போது விட்டகன்றால் உடனே படையெடுத்து வந்து அழித்துவிடுவான். ஆகவே, தாங்கள் இங்கே தாமதித்து, அவனை எதிர்கொள்வதே நல்லது. பாண்டியர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.அருகில் ஒரு எதிரியை வைத்துக் கொண்டு நெடுந்தூரம் செல்லாதீர்கள். உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். " என்று கூறி முடிக்கும் போது இருவரும் மஞ்சத்தில் சாய்ந்திருந்தனர். அவளது கடைசி வரிகளைக் கேட்ட வல்லாளனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. நீலாவின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், வல்லாளனது கைகள் அவளது அங்கங்களை ஆராய்ந்து கொண்டிருந்தன. அவை ஒன்றும் புதிதல்லவென்றாலும், ஒவ்வொருமுறையும் புதிதாய்த் தோன்றியது வல்லாளனுக்கு. அவனது ஆராய்ச்சியில் வெகுவாக மயங்கிய நீலா தான் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லிவிட்டாள்.

அவனது புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் என்னவென்று கேட்டாள். உனது கடைசி வரிகளில் குறிலும் நெடிலும் விளையாடுவதை எண்ணினேன். புன்னகை மலர்ந்தது, என்று கூறி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் விளக்கவும் செய்தான். அதன் பலனை உடனடியாகவும் பெற்றுக்கொண்டான்.

அதற்குப் பிறகு வந்த உம் என்ற ஒற்றை ஒலியைத் தவிர அந்த அறையில் புரியும்படியான ஓசை எதுவும் கேட்கவில்லை.


(தொடரும்)