Wednesday, August 18, 2010

திரைக்கதை எழுதுவது எப்படி - 7 : கனவு காணுங்கள்!

முன்னுரை:- சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நின்று விட்ட இந்தத் தொடரை மீண்டும் இப்போது தொடர்கிறேன். தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை பழைய பதிவுகளைப் படித்தல் நலம்.

===

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு செயல் அல்ல. அது பல செயல்களின் தொகுப்பு. A series of events. நான் ஒரு நவீன கட்டிடத்தில் பணி புரிகிறேன். 24லட்சம் சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள் கட்டிடம் அது. இந்தக் கட்டிடத்தை கட்டி முடிப்பது என்பது ஒருவர் மட்டுமே செய்யக் கூடியதல்ல. பல்வேறு துறை வல்லுனர்களின் பங்களிப்பும் தேவைப்படும்.

அடிப்படையாக, ஒரு rendering அளிப்போம். அதாவது கட்டிடம் முடியும் போது அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் படம். இனி Backwork செய்ய வேண்டும். பிறகு, கட்டிட வரைபடம். வரைபடத்தின் டீட்டெயில்கள். பல்வேறு கோணங்களில் அதே வரைபடத்தின் நகல்கள் ஆகியவை தயாரிக்கப்படும்.

Facade எனப்படும் வெளிப்புறம் எவ்வாறு இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சப்போர்ட் என்ன? கட்டிடத்தின் strength, column, pillar, beam, post tensioning ஆகிய சிவில் எஞ்சினீரிங் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் தேவைகளும், விவரமாக எழுதப்பட வேண்டும். பிறகு இவை எவ்வாறு எப்போது கிடைக்க வேண்டும் என்பதும் முடிவு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு, அதை எப்படி செய்வது? கடன் வாங்க வேண்டுமா? சொந்தப்பணத்திலா? ஆகிய பல்வேறு கேள்விகள், பதில்கள், விளக்கங்கள். ஏனைய, ஏனைய...

இதே போல்தான் திரைப்படம் எடுப்பதும். திரைக்கதை ஒரு கதையை சொல்லும் விதம். கதை என்பது ஒரு கட்டிடம் என்று எடுத்துக்கொண்டால் நமது கட்டிடத்தை தனித்துவமாகத் தெரிய வைக்கும் செயல் திரைக்கதை எனலாம். அப்படித் தனித்துவமாகத் தெரிய வைக்க அதிக செலவும் செய்யலாம். அல்லது ஒரு சில சிறிய மாற்றங்கள் மூலம் மிக அழகாகவும் தெரியச் செய்யலாம்.

ஆனால் ஒன்று, திரைக்கதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதன் வரையறைக்குட்பட்டே அனைவரும் திரைக்கதை எழுதுகின்றனர். ஒரு சிலர் புதிய முயற்சிகளைச் செய்தாலும், முன்னர் நான் கூறிய முறைகளில் திரைக்கதைகளை அமைக்கிறார்கள்.

ஃ ஃ ஃ ஃ ஃ

திரைக்கதை எழுத மிக முக்கியத் தேவை உங்கள் visualization திறமை. காட்சிப்படுத்துதல் அல்லது கனவு காணுதல். ஒரு இயக்குனர் தன் நடிகர் நடிகையிடம் தான் நினைப்பதை எதிர்ப்பார்க்கிறார். அதனால்தான் அவரது திருப்திக்கு ஏற்றார்ப்போல் காட்சி அமையும் வரை ரீடேக் வாங்குகிறார்.

தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி. இயக்குனர் வசன கர்த்தாவிடம், தங்கை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை காட்சிப் படுத்துமாறு கேட்க அந்த வசன கர்த்தா பழைய முறையில் தூக்கு, விஷம் என்று எழுதுவார். அதை மறைவிலிருந்து பார்க்கும் பாக்கியராஜ் அருமையாக 'டபுள் பிரமோஷன்' கான்சப்டை இதில் புகுத்துவார். அங்கே நிற்கிறது திரைக்கதையாசிரியரின் தனித்துவமும் விஷுவலைசேஷனும். ஆனால் அதே டயலாக் இன்றைய காலகட்டத்தில் எடுபடாதென்பது வேறு விஷயம்! அதனால்தான் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை!!

இன்று செண்டிமெண்ட் சீன் ஒன்று வைத்தாலும் படம் அவுட்டாகிவிடும் என்ற நிலை உள்ளது. இன்றைய தேதியில் கடைசியில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் கிழக்குச் சீமையிலே. அது கூட புதிய கதைக் களத்திற்காகத்தான் வெற்றி பெற்றது.

ஒரு காலத்தில் புராணப்படங்களும், பக்திப் படங்களும் வந்தன (எம்.கே.டி, பி.யூ.சி). அடுத்து ஏழ்மை ஒழிப்பு (எம்.ஜி.ஆர்), அடுத்து புரட்சிகர கருத்துக்கள், கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான படங்கள்(ருத்ரைய்யா, பாலச்சந்தர்), கிராமத்துக் கதைகள் (பாரதிராஜா, பாக்கியராஜ், ராமராஜன்). ஆனால் இவை யாவும் ஒரு காலத்திற்கு மேல் தொடர்ந்து நிலைக்க வில்லை.

இன்று வரும் கிராமத்துப் படங்களும் அன்று வந்த கிராமத்துப் படங்களும், வெவ்வேறான கிராமங்களை வெளிக்கொணர்கின்றன. ராவணன் வெற்றிபெறாததற்குக் காரணம் அந்த கிராமத்தை நம்மோடு தொடர்பு படுத்த முடியவில்லை.

ஆக, விஷுவலைசேஷனும் காலத்திற்கேற்ப இருக்கவேண்டுமே ஒழிய பழையதைப் போட்டால் யாரும் காசு கொடுத்து சாப்பிட மாட்டார்கள்!

அன்றும், இன்றும், என்றும் வற்றாத ஜீவ நதிகள் மூன்று. அவை, காதல், ஆக்ஷன், காமெடி...

ஆக உங்கள் கதையை

1. விஷுவலைஸ் செய்யுங்கள்.
2. நிகழ் காலத்திற்கு ஏற்ப கதைக்களனைத் தேர்ந்தெடுங்கள்.
3. மூன்று ஜீவ நதிகளையும் இணையுங்கள்!!

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர். ஆனா பழைய பதிவெல்லாம் சுத்தமா மறந்து போச்சு. ஒரு கண்டினியூட்டி வரமாட்டேங்குது. :( திரும்பி படிக்கனும் போல


ம்ம்ம்ம்ம்ம்ம் ‘சக்கர வியூகம்’ எப்படியிருக்குமோ?

தமிழ்பாலா said...

தங்களின் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறைக்கு எந்தன் வாழ்த்துக்கள் உங்கள் பணிதொடரட்டும் நல்ல திரைக்கதை ஆசிரியரை உருவாக்கி ஒரு புதிய நல்ல எல்லோரும் எல்லாம் பெற்று அன்றாட தேவை நிறைவுற்று வாழும் சமுதாயத்திற்கான களத்தை ஏற்படுத்தட்டும் !வாழ்க உந்தன் பணி! வளர்க நல்ல திரைப்படத்துறை!