Wednesday, October 8, 2008
சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் (1)
காஞ்சியின் புகழ்பெற்ற கடிகாஸ்தானத்தின்(பல்கலைக் கழகம்) ப்ரதானாசாரியார் (தலைமை ஆசான்) அறையில் குழுமியிருந்தவர்களின் எண்ணிக்கை அந்த கடிகையிலேயே பெரிய அறையை சிறிதாக்கிக் காட்டியது.
விஜயதசமி நன்னாளில் வழக்கமான பூஜைகள் மற்றும் நிவேதனங்களின் முடிவில் அங்கு குழுமியிருந்தோரை தனியாக அழைத்திருந்தார் ப்ரதானாசாரியாராகிய பாஸ்கராசாரியார். பார்வைக்கு எண்பது வயதானவராகக் காணப்பட்டாலும், பேச்சிலும் பார்வையிலும் தீக்ஷண்யம் மிகுந்து காணப்பட்டது.
அங்கு குழுமியிருந்தவர்களை பார்த்துக்கொண்டே அவர்களின் பின்னணியை நினைத்துக் கொண்டார்.
முதலாக நின்றவன் வீர பாண்டியன். மதுரை மன்னன் மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் முதல் புதல்வன். எனினும் பட்டத்து ராணிக்குப் பிறந்தவனல்லன். அவன் பாட்டனார் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் வீரமும் விவேகமும் இவனிடம் நிறைந்திருக்கக் கண்டார். இவனது சகோதரன் சுந்தர பாண்டியன் பட்டத்து இளவரசனாக வரவேண்டியவன் என்றாலும், தகுதியிலும் திறமையிலும் வீர பாண்டியனுக்கு சற்றும் பொருந்தாதவன்.
அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கன். காஞ்சியைத் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் காடவர் குலக்கொழுந்து. இவன் பெயர் கொண்ட இவனது பாட்டனார், சோழ மன்னனான இரண்டாம் ராஜாதிராஜனையே மூன்றாண்டுகள் சிறை வைத்து சாதனை படைத்தவர். கலைகளையும், கோவில்களையும் போஷிப்பதில் நிகரற்றவர். இவர் காலத்தில் மீண்டும் காஞ்சி தலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தாலும் அது முடியாமலே போனது. காடவர் குலம் இந்த கோப்பெருஞ்சிங்கனைத்தான் தற்போது நம்பியிருக்கிறது.
வீர வல்லாளன். ஹொய்சள தேச இளவல். தமிழகத்தில் நிலவி வரும் தற்காலிக சமரசத்திற்கு காரணம் இவன் முப்பாட்டன் வீர சோமேஸ்வரன். தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும் ஹொய்சள நாட்டின் அடுத்த பட்டத்தரசன்.
ஹரிஹர ராயன். இவன் தந்தை ஏகாம்பர நாதன் காஞ்சியைச் சேர்ந்த ஒரு சாதாரண வணிகன். இந்தக் கடிகையின் மிகச் சிறந்த மாணாக்கன்.
புக்க ராயன். ஹரி ஹரனின் சகோதரன். அவனைப் போலவே மிகச் சிறந்த அறிவாளி.
நக்கன் இளவழுதி. சிராப் பள்ளியை அடுத்த திரு வெள்ளரையைச் சேர்ந்தவன். வேளிர் குடியினன். பாஸ்கராசாரியாரின் அத்யந்த சீடன்.
தற்போது, தனது அருகிலுள்ள மாதவனைப் பார்த்தார். தனக்கு அடுத்து இந்தக் கடிகையை நடத்தப் போகும் வாரிசாக நியமித்து விட்டாலும், இன்னும் அவனிடத்தில் இருக்கும் பணிவும், எதனையும் நொடியில் ஆராய்ந்து கிரகித்து விடக்கூடிய அறிவும் அவரைக் கவர்ந்ததென்றால் மிகையாகாது.
இவ்வாறு அனைவரையும் ஒரு க்ஷணத்தில் நோக்கிவிட்டாரானாலும், அவர்களைத் தனியாக அழைத்ததின் நோக்கத்தை விளக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.
'எனதருமை மாணாக்கர்களே, இன்று விஜயதசமி. ஸ்ரீ ராம பிரான் தர்மத்தை நிலை நாட்டிய நாள். தர்மோ ரக்ஷதி ரக்ஷித:. அதாவது தர்மத்தைக் காப்பவரை தர்மமே காக்கும் என்பது இதன் சாரம். ஸ்ரீ ராமன் ஒவ்வொரு செயலிலும் தர்மத்தைக் கடைபிடித்தான். எனவே தர்மம் அவனைக் காத்தது.
இந்த கடிகாஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு விஜய தசமியன்றும் வித்யாப்யாசம் முடிந்து மாணவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்புதல் வழக்கமான நடைமுறையாகும். அதைப் போலவே இவ்வருடமும் காலையில் அனைவருக்கும் வித்யாப்யாச நிறைவு சிறப்பாக நடைபெற்றது. நீங்களும் கற்க வேண்டியதெல்லாம் சிறப்பாகக் கற்றுக் கொண்டீர்கள்.
ஒரு ஆசிரியன் தன்னிடத்தில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் தனது மாணாக்கர்களிடம் அளிக்கவே விரும்புவான். ஆனால் அத்தகைய திறமையும் தகுதியும் வாய்ந்த மாணாக்கர்கள் கிடைப்பது துர்லபம் என்பது எனது கருத்து. இத்துணை காலமாக இந்த கடிகாஸ்தானம் பல்வேறு மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்து வந்துள்ளது. நானே இங்கு ஒரு மாணவனாக நுழைந்தவன் தான். எனது ஆசிரியர் என்னைக் கண்டெடுத்து அவர் அறிந்ததெல்லாம் எனக்குப் பயிற்றுவித்தார். அதே போன்று நானும் அந்த வித்யைகளை சரியான மாணவனுக்கு கற்பிக்க வேண்டும் என்பதே அவரது அவா.
ஆனால் குழந்தைகளே, எனக்கு இத்துணை வருடமாக அத்தகைய மாணவர்கள் யாரும் கிடைக்க வில்லை. இப்போது தான் நீங்கள் அனைவரும் ஒன்று போல் கிடைத்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தக் கடிகை கண்ட ரத்தினங்கள். ஆகவேதான் உங்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகளும், பற்பல ரகசிய தந்திரங்களும் கற்றுக் கொடுத்தேன். ஆயினும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.
அது தான் சக்கர வியூகம்...
நான் இது வரை சொன்னது பொதுவான கருத்துக்கள் தான். இனிமேல் சற்று கவனமுடன் கேளுங்கள்'
இவ்வாறாக ஆசாரியர் சொல்லவும் அது வரையும் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மேலும் சிரத்தை காட்டத் தொடங்கினார்கள்.
(தொடரும்)..
Monday, October 6, 2008
சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்
இந்த நாவலை எழுதத்தூண்டிய கேள்வி இதுதான்.
நகரேஷு காஞ்சி என்று வர்ணிக்கப்பட்டும், பல்லவப் பேரரசின் தலை நகரமாய் விளங்கியும், ஆதித்த கரிகாலன் எடுப்பித்த பொன் மாளிகையை தன்னகத்தே கொண்டும், சோழர்களின் வடதிசை மாதண்ட நாயகத்தின் தலைமையகமாகத் திகழ்ந்தும், குலோத்துங்கன் காஞ்சியில் இருந்து, கலிங்கத்தைக் குலைத்துப் பெற்ற வெற்றியும் இன்ன பிற அரசியல் நிகழ்வுகளின் ஆதாரமாக விளங்கி கச்சி என்றும், காஞ்சி என்றும் பெயர் பெற்ற காஞ்சிபுரம் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்து மற்றுமொரு சாதாரணமான நகரமாக மாறக் காரணம் என்ன?
இதற்காக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்த போது என் கண் முன் விரிந்தது இக் கேள்விக்கான விடை மட்டுமல்ல. தற்காலத் தமிழக நிலையின் அடித்தளமான நிகழ்வுகளுமாகும்.
நண்பர்களே, கடந்த 700 ஆண்டுகளில் தமிழகத்தை தமிழர்கள் ஆண்டது 70 ஆண்டுகள் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது மிகப் பிரபலமான கருத்து.
இன்றைய அரசியல் சூழ் நிலையில் தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் தம் தாய் மொழியல்லாத மற்றவர் ஆட்சிக் கட்டில் ஏறிடல் சாத்தியமா? தமிழகத்தில் மட்டும் இந்த நிலையினை சர்வ சாதாரணமாக நாம் ஏற்றுக் கொண்டோமே, எதனால் என்று சிந்தித்திருக்கிறீர்களா?
தமிழகத்தில் ஏற்பட்ட கலாசார மாற்றமும், சாரி சாரியான பிறமொழியினத்தவர்களின் (குறிப்பாகத் தெலுங்கர்கள்) குடியேற்றத்தினால் ஏற்பட்ட மாற்றங்களென்ன? கர்னாடக இசையின் மும்மூர்த்திகள் காவிரி டெல்டாவில் தோன்றிய அதிசயமென்ன? அவ்வாறு பெயர் சொல்லக் கூடிய தமிழிசை அறிஞர்களோ, புலவர்களோ தோன்றாததன் காரணம் என்ன?
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் வாழ்ந்து வருவதன் காரணமென்ன?
கேள்விகள், கேள்விகள், கேள்விகள் . . . .
விடைகள் எங்கே? ஒன்றா, இரண்டா?.
இந்தக் கேள்விகளுக்கான ஆதார சுருதியாய் விளங்கும் விடைகளை எடுத்தியம்பும் முயற்சிதான் இந்தப் புதினம்.
ஆம். இவை அனைத்துக்கும் காரணமான சம்பவங்கள் நிகழ்ந்தது 13ம் - 14ம் நூற்றாண்டில்.
இந்தக் கதையும் அந்த மாற்றம் நிகழத் துவங்கிய காலத்திலிருந்து மாற்றம் முழுமையடைந்த காலம் வரை பயணிக்கிறது.
தமிழகத்தின் கடைசித் தமிழ் மாமன்னன் ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன். இவன் ஆட்சியில்தான் தென்னிந்தியா முழுவதும் ஒரே நாடாக அதாவது தமிழ் நாடாக இருந்தது. இவனுக்குப் பிறகு இவன் வாரிசுகளுக்குள் ஏற்பட்ட பதவி ஆசைதான் தமிழகத்தில் அதுவரை நுழையாமல் இருந்த தில்லி சுல்தான் ஆட்சிக்கும் அதன் பின் ஆற்காட்டு நவாபின் ஆட்சிக்கும் அடி கோலியது. மேலும், அப்போதுதான் மலரத் துவங்கிய விஜய நகரப் பேரரசுக்கு பட்டுக் கம்பளம் விரித்துத் தங்கத் தாம்பாளத்தில் தமிழகத்தை தாரை வார்த்துக் கொடுத்ததும் நிகழக் காரணமாயிருந்தது.
இந்தக் கதை காஞ்சி, மதுரை, விஜய நகரம், திருச்சி, ஆற்காடு, வேலூர், செஞ்சி முதலிய இடங்களில் நடைபெறுகிறது.
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன், மாலிக் கஃபூர், கோப்பெருஞ்சிங்கன், எகாம்பர நாதன், ஹரிஹர சங்கமன், புக்க சங்கமன் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள். மேலும் சில வரலாற்றுப் பாத்திரங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.
காதல், கிளு கிளு, இளவரசி முதலிய விஷயங்கள் புதினத்தின் சுவையைக் கூட்டவே பெரும்பாலும் பயன் பட்டிருக்கின்றன. இப் புதினத்திலும் இவற்றை இணைக்கக் கூடுமான வரையில் முயல்கிறேன்.
திரு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியாரின் ஹிஸ்டரி ஆஃப் சவுத் இந்தியா வும், பற்பல விக்கி இணைப்புகளும் இவ்வரலாற்றுப் புதினத்தை இயற்றுவதற்குப் பெரிதும் துணையாயிருந்தன.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று வெளியிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். உங்கள் நண்பர்களிடமும் இம்முயற்சியைப் பற்றி எடுத்துச் சொல்லி, எனக்கு ஊக்கமளிக்க வேண்டுகிறேன்.
உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிகள் பல.
Sunday, October 5, 2008
எனது இடுகைகளை தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை
நேற்று ஒரு இடுகையை சேர்த்து விட்டு அடுத்த இரு இடுகைகளை சேர்க்கலாம் என்று தமிழ்மணக் கருவிப் பட்டையை அழுத்திய போது 'உங்கள் பதிவில் புதிய இடுகைகள் எதுவும் இல்லை' என்று வந்தது:(
இது போல் நிகழாமல் இருக்க என்ன செய்யலாம்?
Saturday, October 4, 2008
விவசாய சி.பொ.ம (SEZ)
நேற்று ஒரு சொந்தப்பணி நிமித்தமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருந்தது.
எப்பொழுதும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகி விடுகிறது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.
இப்போதோ, மருந்துக்குக் கூட ஒரு வயல் காடு கூட இல்லை.:-((
முதலில், ஹுன்டாய் வந்தது, பிறகு செயின்ட் கோபேய்ன். அதன் பின் நோக்கியா, மோட்டரோலா, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், டெல், கபரோ என்று உலகத்தின் 'பெத்த' பேர்கள் எல்லாம் வரிசையாகத் தென் படத்துவங்கியது.
இதே நிலைதான் செங்கல்பட்டு வரையிலும்.:(இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்காவது விவசாயம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.
இது எங்கு சென்று விடும் என்பதும் புரிய வில்லை.இந்நிலையில் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி என்பது கடினமாகி விடும்.
நான் எதிர் பார்ப்பது எல்லாம் இதுதான்.
.
.
அக்ரிகல்சுரல் எஸ்.இ.இஜட் களை......
ஆம் விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்.
நாம் எல்லோரும் இதை வரவேற்கத் தயாராக இருப்போம்..
.
நீங்க என்ன சொல்றீங்க ! ! !
இது ஒரு மீள் பதிவு.
Friday, October 3, 2008
வானவில் 03-10-2008
வருக வருக நண்பர்களே. இது என் எண்ணங்களின் வண்ணங்கள்.
காஞ்சிபுரத்திற்குச் சிறந்த வண்டி, 76 பி என்னும் பேருந்து. கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வழியாகப் பூந்தமல்லியை அடைந்து அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் காஞ்சிபுரம் சேர்ந்து விடலாம். 76 சி என்று ஒரு ரூட் இருக்கிறது. இது கோயம்பேட்டிலிருந்து 100 அடி சாலை வழியாக மவுன்ட், போரூர் என்று சுற்றி பூந்தமல்லிக்கு செல்கிறது. மூன்றாவது ரூட் 79. இது தாம்பரம் சென்று அங்கிருந்து வண்டலூர் வழியாகவோ, முடிச்சூர் வழியாகவோ படப்பை, வாலாஜாபாத் என்று சுற்றிக்கொண்டு காஞ்சிபுரம் சேரும். ஒவ்வொரு ரூட்டிற்கும் ஒவ்வொரு பயன். எனவே, நமது தேவையைப் பொறுத்து ரூட் செலக்ட் செய்து கொள்ளலாம். பெரும்பாலான மக்கள் நாடுவது 76 பி-யைத்தான். இந்த ரூட்டில் தான் சர்வீஸ் அதிகம்.
***********
சமீபத்தில் (1960களில் அல்ல), அதாவது கடந்த இரண்டு - மூன்று மாதங்களில் எங்காவது ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறீர்களா? அப்படி ஓட்டலுக்குப் போனால் சுற்றி முற்றிப் பார்க்கும் வழமை உண்டா? ஏதாவது மாற்றத்தைப் பார்த்தீர்களா..
நான் ஒரு மாற்றத்தைக் கவனித்தேன். பெரும்பாலான ஓட்டல்களில் விலைப் பட்டியலை நிரந்தரமாக எடுத்து விட்டார்கள். சில ஓட்டல்களில் அயிட்டங்களின் பெயர் மட்டுமே இருக்கிறது. விலை இல்லை.
பொருட்களின் விலையோ ஒவ்வொரு வாரமும் ஏறிக் கொண்டே இருக்கிறது.
*********
சென்னையின் போக்குவரத்தில் டூ வீலர் ஓட்டுவது என்பது, 'ரோட் ரேஷ்' கணிணி விளையாட்டு விளையாடுவது போல உள்ளது. சிக்னல் போடாவிட்டாலும் டுர் ர் ர் ர் என்று அனைத்து டூ வீலர்களும் பறக்கின்றன.
100 அடி சாலையில் அசென்டாஸ், காசி தியேட்டர், அஷோக் பில்லர் ஆகிய இடங்களில் பாதசாரிகள் கடப்பதற்காக சிக்னல் போடுகிறார்கள். இதனால் டிராபிக் ஜாம் ஏற்படுவது ஒரு புறம் இருக்க, எக்கச்சக்கமான எரிபொருள் வீணாகிறது. இந்த வீணாகும் எரிபொருளைக் கணக்கிட்டால் இந்த இடங்களில் எஸ்கலேட்டருடன் கூடிய மேம்பாலங்களை அமைக்கலாம். இதனால் எரி பொருளும், நேரமும் மிச்சமாகும்.
உங்கள் கருத்தென்ன.
*******
நான் எழுத நினைப்பதெல்லாம் . . . .
எனக்குத்தான் இப்படி நடக்கிறதா...
நான் என்ன எழுத நினைக்கிறேனோ அதையே மற்றவர்கள் செய்து விடுகின்றனர்.
உதாரணமாக, நான் ஒரு சரித்திரத் தொடர் கதை எழுதலாம் என்றிருந்தேன்.
ஆனால் பாருங்கள், நர்சிமும், லக்கியும் முதலிலேயே துவக்கி விட்டனர்.:-((
ஆனாலும் நான் ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதப் போகிறேன்.
கதைக் களம்.. முக்கியமாகக் காஞ்சிபுரம். இதைப் பற்றிய கர்டெயின் ரைசரைப் படிக்கத்தவறாதீர்கள்.
கதைக் காலம்.. 14-15ம் நூற்றாண்டு.
கதைக் கரு... நகரேஷு காஞ்சி என்று, புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல்வேறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இந்நகரம், தன் பெருமையை ஆற்காட்டிடமும், செஞ்சியிடமும், வேலூரிடமும், சென்னையிடமும் இழந்த்தது ஏன்?
பொருத்தமான தலைப்பைக் கூறுங்களேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * *
கூட்டாஞ்சோறு, அவியல், பொரியல் என்று ஆளாளுக்கு கலந்து கட்டுகிறார்களே என்று நானும், கதம்பம் என்று ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் பாருங்கள், ஒருவர் கதம்பம் என்று எழுத ஆரம்பித்து விட்டார் :-((
நானும் விடப் போவதில்லை. என்ன தலைப்பு வைக்கலாம் ? என்று யோசித்த போது,
மினி மீல்ஸ்
மினி டிபன்
மிக்சர்
ஃப்ரூட் சாலட்
என்றெல்லாம் யோசனை வந்தது. ஆனால் பாருங்கள், இவற்றில் எதுவும்
தமிழ்ப் பெயர் இல்லை. தமிழ்ப் படுத்தினால், சிறு சாப்பாடு என்றோ, சிறு சிற்றுண்டி என்றோ, கலவை என்றோ, பழக்குழவி என்றோ எழுத வேண்டும்..:-))
என்ன செய்வது?
.
.
.
.
உம்... மாத்தி யோசி....
.
.
.
மாத்தி யோசிக்கும் போது தான் , வானவில் என்று தோன்றியது.
ஆம். நான் எழுதப் போகும், கூட்டாஞ்சோறு, அவியல், கதம்ப மேட்டருக்குப் பெயர்,
'வான வில்'.
இது வானவில் .. என் எண்ணங்களின் வண்ணங்கள்.
வழக்கம் போல் உங்கள் மேலான ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்.