Thursday, January 21, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 21

அத்தியாயம் 21 - உன்னுடன் சேர்ந்து போராட.

ஹொய்சளத் தலை நகர் தொரசமுத்திரத்தை நோக்கித் தனக்கு அளிக்கப்பட்ட படைகளுடன் புறப்பட்ட ஆதவனுக்கு, வல்லாளனே நேரில் வந்து வழியனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புறப்படும் முன், வல்லாளனின் கால்களில் விழுந்து ஆசி பெற வந்த ஆதவனைத் தடுத்து நிறுத்திய வல்லாளன்,

'ஆதவா, ஒரு நாட்டிற்குத் தலை நகரம் முக்கியமானது. என் கவனக் குறைவால் அதைப் போதிய பாதுகாப்பின்றி விட்டுவிட்டேன். அங்கே முக்கியமாக, ஹொய்சள வம்சத்தின் வாரிசு, என் மகன் இருக்கிறான். என்னைப் பற்றிய கவலை இல்லை. ஆனால் என்னுடன் ஹொய்சள வம்சம் முடிந்து விட்டதாக ஏற்படக்கூடாது. ஆகவே உன்னை அங்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம், என் மகனைக் கண்ணின் இமை போல் காத்துவர வேண்டும் என்பதுதான். அப்படியே கோட்டையையும் பலப்படுத்த வேண்டும். உன்னால் நிச்சயம் முடியும் என்று நம்பியே இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். அரசியாருக்கு ஒரு ஓலை தருகிறேன். அவர்கள் சொல்படியும் கேட்டு நடந்து கொள். வெற்றி உனதே போய்வா. இங்கிருந்து அவ்வப்போது ஓலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதே போன்று அங்கிருந்தும் எனக்குச் செய்திகள் வர வேண்டும்." என்று மிக சுருக்கமாக எடுத்துரைத்தான்.

இதைப் போன்று ஏதாவது இருக்கும் என்று நினைத்த ஆதவனும், அரசனின் உத்தரவைப்பெற்ற உடன், தனது படைகளை நடத்தத் துவங்கினான்.

=====

மதுரையைப் போர் மேகங்கள் சூழ்ந்திருக்க, அங்கே அரண்மனையில் அமைதியின்றி அமர்ந்திருந்த சுந்தர பாண்டியனுக்கு விக்ரம பாண்டியர் ஒரு தூது அனுப்பியிருந்தார். அவனைத் தனியாகச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் உள்ள நிலையில் விக்ரம பாண்டியரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் சுந்தர பாண்டியனை ஆட்கொண்டது. நீண்ட சிந்தனைக்குப் பின், விக்ரம பாண்டியரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தான்.

மதுரைக்கு வடமேற்கே தஞ்சை செல்லும் பெரு வழியில் அமைந்திருந்த ஒரு சத்திரத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

"சுந்தரா நலமா"

"நாடு உள்ள நிலையில் நல்ல கேள்வி." சுந்தரனின் பதிலில் வேதனை மிகுந்திருந்தது.

"சுந்தரா, அது நம் மனதைப் பொறுத்தது. எந்த நிலையிலும் நம்மை நாம் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எதிர்ப்பார்ப்பிற்கும், அதனால் ஏற்படும் ஏமாற்றத்திற்கும், நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாகாது. இது உனக்குத் தெரியாததா" குரலில் சற்று கனிவும், கண்டிப்பும் கூட்டிப் பேசினார் விக்ரம பாண்டியர்.

"மாமா, தங்கள் அறிவும், அனுபவமும் என்னை விட வீரபாண்டியனுக்கே அதிகம் பயன் படும் போது, எனக்குக் குறைவாகத் தெரிந்திருப்பதில் வியப்பில்லையல்லவா?"

"சுந்தரா, என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவருமே சமம் தான். உங்களுக்கு மேலாக இந்தப் பாண்டியப் பேரரசைப் பேணிக்காப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்பொழுது, வீர பாண்டியனுடன் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவ்வளவுதான். கூடிய விரைவில் உன்னுடனும் இருப்பேன். என்னை நீ நம்பலாம்"

"நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கிறேன். சரி. என்ன விஷயமாக வரச்சொல்லியிருந்தீர்கள்"

"நம்பிக்கைக்கு நன்றி சுந்தரா. ஒன்றை நன்றாக நினைவில் கொள். விக்ரம பாண்டியன் ஒரு போதும், பாண்டிய மண்ணிற்கோ, மன்னர்களுக்கோ துரோகம் செய்யமாட்டான். சரி விஷயத்திற்கு வருவோம். மதுரைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அறிவாயல்லவா?"

"ம். மதுரையை நோக்கித் திரிசூலம் குறிவைக்கப்பட்டிருக்கிறது." சுந்தர பாண்டியனின் பதிலில் அவனது இயலாமை வெளிப்பட்டது.

"அல்ல. திரிசூலம் அல்ல. ஒரு வேல், அதனுடன் ஒரு வால். அவ்வளவுதான்" என்றார் நகைச் சுவையாக.

"என்ன வேலும் வாலுமா."

"ஆம். வேல், மாலிக் கஃபூரைக் குறிக்கும். அவன் அடியொற்றி வந்த வல்லாளனைத்தான் வால் என்று அழைத்தேன். மாலிக் கஃபூர் மதுரையைத் தாக்கும் போது தானும் இடையில் புகுந்து பழைய கணக்கைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான் வல்லாளன். ஆனால் அந்த வேலையும் முறியடிக்க வேண்டும். வாலையும் நறுக்க வேண்டும்."

"அப்படியென்றால் வீர பாண்டியனின் படை?" சுந்தரனின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

விக்ரம பாண்டியரது உதட்டில் புன் முறுவல் மிகுந்தது. மிகுந்த நிதானத்துடனும், மெதுவாகவும் சொன்னார், அவனுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம். "ஆம். அது, உன்னுடன் சேர்ந்து போராட"

சுந்தர பாண்டியன் மயக்கமுறும் நிலையை எய்தினான். சற்றுத் தெளிந்தபின் விவரமாகக் கூறுமாறு விக்ரம பாண்டியரைக் கேட்டுக்கொண்டான். அவ்வாறே விக்ரம் பாண்டியர் அவரது வியூகத்தைப் பற்றி எடுத்துரைக்க, சுந்தர பாண்டியனது முகத்தில் பரவசம் கூடியது.

ஆனால் மாலிக் கஃபூர் அதுவரை வாளாவிருக்கவில்லை. இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே துவக்கிவிட்டான் அவனது ஆட்டத்தை.

(தொடரும்)

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

படித்துவிட்டேன்..,

இரவுப்பறவை said...

நல்லா இருக்குங்க... வார வாரம் கதை வேகமாகிட்டே இருக்கு..
பொறுமைதான் இல்ல....

Anonymous said...

innum evvalavu paagam paaki irukku thalaiva ! Nandraka ullathu.

Nandri
Ramanan

☀நான் ஆதவன்☀ said...

அருமை.... பேசாம மொத்தமா வெளியிட்டுருங்க தலைவா... காத்திருக்க முடியல!