Wednesday, October 29, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...4


அத்தியாயம் 4: ஆலோசனையும் ஆபத்தும்.

வீரபாண்டியனும், இளவழுதியும் அவ்வாறு பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பகுதியில், கோப்பெருஞ்சிங்கனும், வல்லாளனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.


'ஆசாரியாரின் சக்கரவியூகத்தின் அர்த்தம்தான் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்றான் கோப்பெருஞ்சிங்கன். சுருக்கமாக சிங்கன்.
'சிங்கா. எனக்கும் ஒரு சிறிய பொறிதான் தட்டியது. ஆசாரியர் நிச்சயமாக போர் வியூகத்தை மட்டும் சொல்ல வர வில்லை. அது மாதவனுக்கு முழுமையாகப் புரிந்திருக்கிறது. அவர்தான் நமக்குப் பிறகு தெரிவிப்பதாகக் கூறிவிட்டாரே. அதைப் பற்றி இப்போது என்ன கவலை. வேறு விஷயத்தைப் பற்றி பேசுவோம். நீ இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்.' என்று கேட்டான் வல்லாளன்.


'நான் இந்த ஊர்தானே, நேராக அரண்மனைக்குச் சென்று, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு, பிறகுதான் யோசிக்க வேண்டும். உன்னுடைய உத்தேசம் என்ன?'


'நான் தொரசமுத்திரத்திற்கு (ஹொய்சளர்களின் தலை நகரம்) செல்லப் போகிறேன். அதற்குமுன் திருவரங்கம் சென்று அரங்கனைத் தரிசித்து விட்டுச் செல்லலாம் என்றிருக்கிறேன்.'


'நல்லது. நாம் மீண்டும் தில்லையில் சந்திப்போம்' என்று கூறி வல்லாளனை ஆரத் தழுவிக் கொண்ட பின் தன் அரண்மனை திரும்பினான் கோப்பெருஞ்சிங்கன்.


====


மாதவன் ஆசாரியாரை அடுத்த நாள் சந்தித்தான்.


'குருவே, நேற்று நடந்தது...' என்று இழுக்க.


'மாதவே, காரணமாகவே அவ்வாறு பாதியில் நிறுத்தினேன். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் மிக நல்ல மாணவர்களாயினும் அரசியல் என்று வரும்போது அவ்வாறு இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் சக்கர வியூகத்தைப் பற்றித் தெரிந்துவிட்டால், இறுதியில் அனைவரும் அழிந்துவிடுவர். ஆகவே அவ்வாறு நிறுத்த நேரிட்டது'.


'அப்படியானால் அதைச் சொல்லாமலே இருந்திருக்கலாம் அல்லவா'


'மிக நல்ல கேள்வி. இவ்வாறு ஒன்று இருப்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் இதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் வரும். எது விதை, எது பதர் என்பது தெரிய வரும். ஒன்று மட்டும் நிச்சயம் மாதவா, இந்த சக்கர வியூகத்தைப் பற்றி நல்லவனுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும். இது சத்தியம்' என்றார்


'ஆனால் குருவே, வரும் மார்கழி திருவாதிரையன்று தில்லையில் அவர்களுக்கு இதைப் பற்றி விளக்குவதாக வாக்குக் கொடுத்து விட்டேனே'


'அப்படியா...' நீண்ட சிந்தனைக்குப் பின்.


'சற்று அவசரப் பட்டுவிட்டாயே மாதவா.. பரவாயில்லை. நான் சொல்வது போல் செய். எல்லாம் அந்த ஏகம்பன் அருளாலும் அன்னை காமாக்ஷியின் கருணையாலும் நன்மையாகவே முடியும்' என்றவர் மாதவனுக்கு மட்டும் கேட்குமாறு மிக நீண்ட நேரம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.


அவர் சொல்லச் சொல்ல மாதவனின் முகத்தில் சொல்லவொண்ணா திருப்தியும் சாந்தியும் நிலவத் தொடங்கியது.


'மிக்க நன்றி குருவே. அவ்வாறே செய்கிறேன். நம்மால் முடிந்த வரை மனித குலம் வாழவே பாடு படுவோம். அழிவென்று வந்தால் தீமையே அழியட்டும். குருவே, நானும் சற்று தேசாந்திரம் சென்று வரலாம் என்று உள்ளேன். உத்தரவு வேண்டும்'


'நல்லது. எங்கே செல்வதாக உத்தேசம்.'


'தெற்கே சென்று, தென் தமிழகத் திருத்தலங்களைத் தரிசித்த பின், கேரளம் சென்று, காலடி க்ஷேத்திரத்தைத் தரிசித்துத் திரும்பலாம் என்று எண்ணியுள்ளேன்.'


'அவ்வாறே செய். திருவரங்கத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகனைச் சந்திப்பதாக நேற்று இரவு கூறினாயே. மறந்து விட்டாயா?'


'இல்லை சுவாமி. அது மறக்கக் கூடிய சந்திப்பா. என் வாழ்வில் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்திய நிகழ்வல்லவா? அவரைத்தான் முக்கியமாக சந்திக்க வேண்டும். தில்லைக்கூட்டத்திற்கு முன் இந்த சந்திப்பு நிகழவேண்டும் என்று எண்ணுகிறேன்.' என்றவாறு மாதவன் கிளம்பினான்.


'ஆஹா.. இந்தத் தமிழகத்திற்கு வரப்போகும் ஆபத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது? இவர்களுக்குத் தேவையான பலத்தையும் யுக்தியையும் இறைவன் தான் அளிக்க வேண்டும். எல்லாம் இறைவன் செயல்' என்றெண்ணியவாறு நின்றார் பாஸ்கராசாரியார்.


(தொடரும்)

Saturday, October 25, 2008

நேற்று சென்னையில் கடும் போக்குவரத்து கூழ்

நேற்றைய டிராஃபிக் ஜாம் தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும். சென்னையில் நேற்று கடும் மழையுடன் டிராஃபிக் ஜாமும் சேர்ந்து கொண்டது.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல குறைந்தது 3 முதல் 5 மணி நேரங்களானது.

அம்பத்தூரில் மாலை 5 மணிக்குப் புறப்பட்ட ஒருவர் தாம்பரம் சேரும் போது மணி இரவு பனிரெண்டரை.


பலரும் பேருந்து, தொடர்வண்டி, விமானம் முதலியவற்றைத் தவறவிட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தீபாவளிக்காக ஊருக்குச் செல்பவர்களாவார்கள்.

இது தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும்.

அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.

Wednesday, October 22, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் ...3

அத்தியாயம் மூன்று: கதையின் வரலாறு

இரண்டு அத்தியாயங்கள் முடிந்து விட்ட நிலையில், இந்தத் தொடர் நடக்கும் காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இந்தக் கதை துவங்கும் ஆண்டு கி.பி. 1308 !. ஆம். சரியாக 700 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இக்கதை புனையப்பட்டுள்ளது. அதற்கு முன் வரையிலான தமிழக வரலாற்றையும், தென்னிந்திய வரலாற்றையும் சற்றே ஆராய்வோம்.

தமிழகமும், தமிழும் மிகப் பழமை வாய்ந்தவை என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை நிலவியது.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலவியது களப்பிரர்களின் ஆட்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும், இக்காலக் கட்டத்தில் யார் யார் மன்னர்கள், என்னென்ன இலக்கியங்கள் என்பன குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெளிவாகக் கிடைக்க வில்லை. எனவே, களப்பிரர்களின் காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடுகிறார்கள், வரலாற்று வல்லுனர்கள். இவர்கள் சமணர்கள் என்றும், இவர்களுக்குப் பின் ஏற்பட்ட சைவ சமய அரசுகளின் காரணமாக இவர்களைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் அழிக்கப் பட்டன என்றும் ஒரு சாரார் குறிப்பிடுகிறார்கள். களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல, இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்பது அவர்களின் வாதம்.

கி.பி. 6ம் நூற்றாண்டு முதல், இக்கதை நடைபெறும் 13ம் நூற்றாண்டு வரை தமிழகத்தையோ, தென்னிந்தியாவையோ, ஒரே வம்சம் தான் ஆட்சி செய்து வந்துள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என பெரும்பாலும் தமிழகத்தின் அரசுகளே தென்னிந்தியாவை ஆண்டு வந்துள்ளன.


ஆந்திரம், கர்னாடகம் ஆகிய பகுதிகளில் மேலைச் சாளுக்கியர்கள், காகதீயர்கள், ஹொய்சளர்கள், கடம்பர்கள் ஆகிய பல்வேறு வம்சங்கள் இருந்தாலும் அவற்றின் பலம் சிறிது குறைவுதான். 12ம் நூற்றாண்டு முதல் டெல்லி சுல்தானியர்களின் வரவு தெற்கே தக்காணம் வரை இருந்தது. சுல்தானியர்களின் வரவைத்தடுக்கும் பணியில் மேற்கண்டவர்கள் ஈடுபட்டிருந்ததால், தமிழகத்தின் பக்கம் அவர்களின் பார்வை சிறிது குறைவாகவே இருந்து வந்தது.

இன்னிலையில்தான், தமிழகத்தின் இறுதித் தமிழ் வம்சமான பிற்காலப் பாண்டியர்களின் சாம்ராஜ்யம், ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்னும் மாவீரன் தலைமையில் மறுபிறவி எடுத்தது. இந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் முதலில் ஹொய்சளர்களோடு இணைந்து சோழர்களை அடியோடு அழித்தான். பின்னர் ஹொய்சளர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகமாகிவிடவே, முதலில் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நாட்டிற்கே சென்று அவர்களைத் தோற்கடித்தான். சிறிது காலம் ஹொய்சளர்கள் நாடின்றி இருந்தனர். இவன் காலத்தில் கொங்கணக் கடற்கரை வரை பாண்டிய நாடு விரிந்திருந்தது. அது மட்டுமின்றி, முதலில் சோழர்களோடு இணைந்திருந்த காஞ்சியின் காடவப் பல்லவர்களையும் தோற்கடித்தான்.

இவனது செயல்களைப் பற்றியே இது போல் பற்பல புதினங்களை எழுதிவிடலாம். ஆயினும் தமிழகத்தின் தலைவிதி வேறு விதமாயிருந்தது, இவனுக்குப் பின் வந்தவர்கள் மட்டும் இவன் செயலில் பாதியாவது செய்திருப்பார்களேயானால் இன்றைய தமிழக வரலாறு வேறு விதமாயிருந்திருக்கும். இவன் சந்ததியர் யாருமே இவன் அளவுக்கு வீரமும் விவேகமும் இல்லாது போயினர். இந்தக் கதை நடைபெறும் காலத்தில், மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் மதுரையில் அரசாண்டு கொண்டிருந்தான். இவனது மூத்த மகன் தான் வீர பாண்டியன். ஆனால் பட்டத்து ராணிக்குப் பிறந்தவனல்லன் என்று முன்னமே பார்த்தோம். இவனது இளைய மகன் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் அவ்வளவாக ஆகாது.

சிங்கம் சிறுத்தால் சிறு நரிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போல், பாண்டிய அரசர்களின் திறமைக் குறைவால் தமிழகத்தின் வரலாறு அடியோடு மாறிப்போனது.

ஆகவே, பாண்டியர்களுக்கு உட்பகை, அதாவது பரம்பரை வைரிகளான சோழர்களின் தொல்லை இல்லாவிட்டாலும், வெளிப்பகையான, ஹொய்சளர்கள், காடவப் பல்லவர்கள் முதலானவர்களின் விரோதம் இருந்து கொண்டுதான் இருந்தது.

இன்னிலையில் தான், காஞ்சியின் கடிகாஸ்தானத்தில், பாண்டியனுடன், ஹொய்சள வீர வல்லாளன், காடவக் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரும் பயிற்சி எடுத்துக் கொண்டனர். இவர்களுடன் பயின்ற ஹரிஹர ராயனும், புக்க ராயனும் சங்கம வமிசத்தைத் தோற்றுவித்து, விஜய நகர அரசுக்கு அடிகோலியவர்கள். ஆக இவர்கள் அனைவரும் வரலாற்றுப் பாத்திரங்கள்.
மாதவன் என்பவர் தான் பின்னாளில், வித்யாரண்யர் என்ற பெயருடன் விஜய நகர அரசு தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்தார். இவர் விஜய நகர அரசின் குல குருவாக மட்டுமல்லாது, ஸ்ருங்கேரி சாரதா பீடத்தையும் அலங்கரித்தார்.

தூப்புல் வேங்கட நாதன் என்னும் வேதாந்த தேசிகரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஸ்ரீ இராமானுஜருக்குப் பிறகு ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை சீர் படுத்தியவர். ஸ்ரீ ரங்கத்தில் இவர் இருந்த காலத்தில் தான் மாலிக் கஃபூரின் தாக்குதல் நடைபெற்றது. இவரும் மாதவரும் இக்கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள்.
இவர்கள் தவிர இதுவரை அறிமுகப் படுத்தப் பட்ட பாஸ்கராசாரியாரும், நக்கன் இளவழுதியும் கற்பனைப் பாத்திரங்கள். ஒரு வரலாற்றுப் புதினத்தை நடத்திச் செல்ல இத்தகைய கற்பனைப் பாத்திரங்கள் மிகவும் அவசியம்.
மேலும் சில வரலாற்றுப் பாத்திரங்களும், கற்பனைப் பாத்திரங்களும் கதையின் வழியில் நம்முடன் இணைவார்கள்.

மொத்தத்தில், பாண்டியர்களின் உரிமைப் போரில் பிற தேசத்தவர் தலையீட்டையும், அதனால் தமிழகத்திற்கு விளைந்த தீங்குகளையும், பின்னர் விஜய நகர சாம்ராஜ்யம் நிறுவப் பட்ட வரலாற்றையும், சுவாரசியமாக விளக்கும் முயற்சியே இந்தப் புதினம்.

மேற்கண்ட தகவல்களுடன் இத்தொடரைப் படிப்பது சுவையாக இருக்கும் என்பது என் எண்ணம். இனி தொடர் தொடர்கிறது.

======

தன் அறைக்குத் திரும்பிய வீர பாண்டியன் சுரத்தின்றியே காணப்பட்டான். அவன் செய்கைகளைக் கண்ட நக்கன் இளவழுதி,

'என்ன வீரா, ஒரு மாதிரியாக இருக்கிறாயே? கடிகையை விட்டுப் போகிறோம் என்ற கவலையா அல்லது ஆசாரியர் சக்கர வியூகத்தைப் பற்றி சரியாகச் சொல்லவில்லையே என்ற எண்ணமா?'

'அதெல்லாம் ஒன்றுமில்லை இளவழுதி. எனக்குத்தான் தற்போது மதுரைக்குச் செல்ல விருப்பமில்லை. அங்கிருக்கும் நிலைமைதான் உனக்குத் தெரியுமே. சென்றால் வீணாக வம்பு வரும் என்று நினைக்கிறேன். இங்கேயே இருந்துவிடலாமா, அல்லது, மல்லையிலிருந்து கடல் மார்க்கமாக எங்காவது சென்றுவிட்டு வரலாமா என்று எண்ணுகிறேன்.

'சரிதான். அதனால் மனம் ஒடிந்து போய் விட வேண்டுமா. என்னுடன் திருவெள்ளரைக்கு வந்துவிடு. அங்கு சில காலம் தங்கியிருந்து உன் மனதை மாற்றிக்கொள். அருகே கொல்லி மலை இருக்கிறது. அங்கே சில ஆச்சரியமான விஷயங்களும் இருக்கின்றன. என்ன சொல்கிறாய்?'

'ஆம். அவ்வாறுதான் செய்ய வேண்டும். சரி உன்னுடனே வருகிறேன். மிக்க நன்றி இளவழுதி.'

'இதற்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. சரி சரி, நாளை விடியும் முன்னரே கிளம்பி விடுவோம். அப்பொழுதுதான் களைப்பின்றி நீண்ட தூரத்தைக் கடந்து விடலாம். இப்பொழுது நிம்மதியாகத் தூங்கு.'

'நான் தூங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்று உனக்குத் தெரியாது' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட வீரபாண்டியன் 'அவ்வாறே ஆகட்டும் இளவழுதி' என்றான்.

(தொடரும்)

Sunday, October 19, 2008

மெய்ப்புல அறைகூவலர்-னா இன்னாங்க?

இது ஒரு ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ப்படுத்தப் பட்ட சொல். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா... யாராவது சொல்லுங்களேன்.

சென்னையின் ஒரு முக்கியமான இடத்தில் இந்த தமிழாக்கத்தைப் பார்த்தேன். முதலில் ஆங்கில சொல்லுக்கும் இதற்கும்
சம்பந்தமே இல்லாதது போல் தெரிந்தாலும், மண்டையைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து யோசித்ததில் திடீரென இதன் தமிழாக்கப் பின்னணி புரிந்தது.

அதாவது 'ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' என்பதைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறார்கள்.

ஃபிசிகல்லி - ' ஃபிசிகல்' - மெய். ஆகவே ஃபிசிகல்லி - மெய்ப்புல.

சேலஞ்ச்டு - 'சேலஞ்' - அறைகூவல் - ஆகவே சேலஞ்ச்டு - அறைகூவலர்.

எனவே,' ஃபிசிகல்லி சேலஞ்ச்டு' - மெய்ப்புல அறைகூவலர். நேரடித் தமிழாக்கம்.
அடங்கொக்கா மக்கா... இப்படியெல்லாமா தமிழ்ப் படுத்துவாங்க.

அதனாலதான் கேக்கறேன். இது தமிழ்ப்படுத்துவதா... இல்லைன்னா தமிழைப் படுத்துவதா.

யாராவது சொல்லுங்களேன்.

Thursday, October 16, 2008

சினிமா - கேள்வி பதில் தொடர்


என்னை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்த அணிமாவுக்கு நன்றிகள் பல. இந்த நேரத்தில் என்னுடைய சினிமா பற்றிய ஒரு தொடர் அதாவது 'பழைய படம் - புதிய பார்வை' பற்றிய அறிவிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி.இனி நேரடியாகக் கேள்வி பதில்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது ஞாபகம் இல்லை. ஆனால் நினைவு தெரிந்து பார்த்தது புரட்சித் தலைவரின் முகராசி. வந்தவாசி பாலன் திரையரங்கம் என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளைக் கைத்தட்டி ரசித்தது நினைவில் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். சத்யம் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்பதற்காக இ-புக்கிங் செய்து பார்த்தேன். செலவுதான் கையைக் கடித்து விட்டது :((

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


என்னுடைய மடிக் கணினியில், ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் பார்த்தேன். ஐரோப்பாவில் எடுக்கப் பட்ட முதல் படம் என்று நினைக்கிறேன். அருமையான கதை. ஆனால் தவறான கதா நாயகன். எம்.ஜி.ஆர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சட்டென்று நினைவிற்கு வருவது உன்னால் முடியும் தம்பி.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவமும் தாக்கியதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றும் வாலிபன், அண்ணாமலை, பாபா முதலியவை காலம் காலமாக நடந்து வருபவை. அவை மேலும் தொடரக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.

திருவிளையாடல் தருமியைப் போல் சொன்னால் சேர்ந்தே இருப்பது, தமிழ் சினிமாவும் அரசியலும். ;-))

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில் நுட்பம் என்பது 'ரிலேடிவிடி தியரி' அல்லது 'இரு கோடுகள்' தத்துவம் போன்றது.

சரியான தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வந்த கர்ணனின் படங்கள் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். கர்ணனின் ஒளிப்பதிவுத் திறமை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் :0). ஜம்பு, எங்க பாட்டன் சொத்து முதலிய படங்கள் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா


வண்ணத்திரை, சினிமா எக்ஸ்ப்ரஸ் ஆகிய சினிமா சம்பந்தப் பட்ட பத்திரிகைகளை வாசிக்காவிட்டாலும், எங்கே எப்போது சினிமா பற்றிய செய்தி வந்தாலும் வாசிக்கத் தவறுவதில்லை. அது, கிசுகிசுவாகட்டும் அல்லது புதுப்படம் பற்றிய தகவலாகட்டும்.

7.தமிழ்ச்சினிமா இசை?


நிச்சயமாக இளையராஜா.
தமிழ்ச் சினிமா இசை என்றாலே நம் நினைவுக்கு வருவது பாடல்கள்தான். அதையும் தாண்டி, பின்னணி என்று ஒன்று இருப்பதைக் காட்டியவர் இளையராஜாதான். இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் பாமரனும் ரசிக்கும் வண்ணம் காட்டியதில் அவருக்கு நிகர் அவர்தான்.
ஒரு பார்த்திபன் படத்தில் 'இசை அலயஸ் இளையராஜா' என்று போட்டிருப்பார்கள். இது உண்மை.
மற்றபடி தமிழ்ச் சினிமாவும், தமிழ்ச்சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு மிகச் சிறந்த பரிணாம வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகள்.
60-70 பாடல்களாக இருந்தது, 10-12 பாடல்களாகக் குறைந்து, இப்பொழுது 5 பாடல்கள் இருந்தாலே அதிகம் என்ற நிலையில் இருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆந்திராவில் இருந்த போது அதிகமாகத் தெலுங்குப் படங்கள் பார்த்திருக்கிறேன். சி.ஏ. படிக்கும் போது தில்வாலே துலனியா லே ஜாயேங்கே மொழியே தெரியாமல் 6 முறை பார்த்திருக்கிறேன் :)
உலகச் சினிமாக்கள் என்ற வரிசையில் பார்க்க ஆரம்பித்தது குங்க் ஃபூ படங்களைத்தான்.

சமீபத்தில் வேர்ல்ட் சினிமா சேனலில் தி வொயிட் பலூன் என்ற ஈரானிய மொழிப்படம் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த படம். இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு நிச்சயம் உண்டு.



9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்கள் ஊரில் நடைபெற்ற வைதேகி காத்திருந்தாள் ஷூட்டிங்கை எட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். பிறகு ஏகாம்பர நாதர் கோவிலில் நடைபெற்ற இன்னொரு விஜயகாந்த் ஷூட்டிங்கையும் பார்த்திருக்கிறேன். விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற ரமணா ஷூட்டிங்கின் ஃபைட் காட்சியை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். (அட. எல்லாமே விஜயகாந்த் படங்கள்.;-))
மீண்டும் ஷூட்டிங்க் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நேரமிருந்தால் செய்யலாம்.

தமிழ் சினிமா மேம்பட இது உதவுமா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒன்றும் தோன்ற வில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு பெரிதாக ஒன்றும் நேராது. சன் டிவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் (கலைஞர் டி விக்கு புதுப்படம் கிடைக்காதே). நாடகத்துறை வளர்ச்சியுறும் என்று நினைக்கிறேன். மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.


இந்தச் சங்கிலியைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

1. நான் ஆதவன்

2. வெங்கடராமன்

3. டாக்டர் ப்ரூனோ

4. கோவியார்

5. வாத்தியார்

நன்றி ! ! !

Wednesday, October 15, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 2


அத்தியாயம் 2: அரசியலும், அர்ஜுனனும் ஆசாரியனும்


முன்னோட்டம் முதல் அத்தியாயம்

அனைவரின் கவனத்தையும் கண்டு மகிழ்ச்சியுற்ற பாஸ்கராசாரியார் மேலும் தொடர்ந்தார்.

'நீங்கள் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள். இப்போது நமது பாரதக் கண்டம் உள்ள நிலையை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அரச பரம்பரையின் கீழ் ஆளப்பட்டு வருகிறது. ஒருவர் மற்றவரைத் தாக்குவதும், மிகச் சிறந்த் குலங்கள் எழுவதும் வீழ்வதும் சாதாரணமாக நாம் காணக் கூடியதாக இருக்கிறது. இத்துணை பிரிவினைகள், தேசங்கள் இருந்தாலும், சனாதன தர்மம், ஒரு நூல் பிரிந்திருக்கும் முத்துக்களைச் சேர்த்துக் காப்பது போல இந்தப் பரந்த பாரதக் கண்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தற்போது, முகம்மதியர்கள், இந்த்ரப்ரஸ்தத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தத் தொடங்கியுள்ளனர். நமக்குள் இருக்கும் சகோதர சண்டை தான் இதன் முக்கியமான காரணமாகத் தெரிகிறது.

அவர்கள் விந்தியாசலத்தைத் தாண்டி, தக்காணம் வரை வந்தாலும், தமிழகத்திற்குள் இது வரை வர வில்லை. அவர்கள் தமிழகத்திற்குள் வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை நாம் தள்ளிப் போடலாமே தவிர, தவிர்க்க முடியாது. நாமாக அழைக்காமல் இருந்தாலே நல்லது.



அரசியல், மதம் ஆகியவை - பாவும், ஊடும் ஒரு துணியில் இருப்பது போல நாட்டில் நிலவுகிறது. அரசனானவன் தன் நாட்டிற்குரிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற மதங்களும் இயைந்து வாழப் பாடு பட வேண்டும். அனைத்து மதங்களின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும், மக்களைப் பிரிக்க மதங்களைக் காலம் காலமாக அரசுகள் பயன் படுத்தி வந்திருக்கின்றன. இறுதியில் அத்தகைய மூடத்தனமான கொள்கைகளாலேயே அவ்வரசுகள் வீழ்ந்திருக்கின்றன.

இத்தகைய சரித்திரங்கள் நிதர்சனமாக இருந்தும் அரசுகள் மாற்று வழியைக் கடைப் பிடிக்காமல் முன்னேர் வழியில் பின்னேர் செல்வது போல் சென்று கொண்டிருக்கின்றன. நீங்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே என் அவா.' என்று சற்று நிறுத்தினார்.

சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்தவர் வேறு விஷயத்தைப் பற்றி பேசுகிறாரே என்று நினைத்தாலும், அவர் பேசுவதில் ஏதாவது காரணம் இருக்கும் என்று அனைவரும் தொடர்ந்து குழப்பத்துடன் கவனித்தவாறு இருந்தனர்.

மாதவனிடம் மட்டும் ஆசாரியர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்ததற்கான தெளிவு பிறந்தது. ஆயினும் அதை வெளிக்காட்ட வில்லை.

அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் ஆசாரியர் மேலும் தொடர்ந்தார்.


'மாணவச் செல்வங்களே, உங்கள் சிந்தனையை என்னால் கிரகித்துக் கொள்ள முடிகிறது. ஆயினும் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்டேன். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பாரத தேசத்தையும், ஆதியந்தமில்லாத சனாதன தர்மத்தையும் காப்பாற்ற வேண்டும். நான் உங்கள் அனைத்து நற்காரியங்களிலும் துணையிருப்பேன். மாதவன் என்னிடத்தில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொண்டு விட்டான். அவன் யாருடன் இருக்கிறானோ அவர்கள் பக்கம் விஜயலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் வியாபித்து இருக்கும். சென்று வாருங்கள். ஜய விஜயீ பவ:' என்று கூறி ஆசீர்வதித்தார்.

வீரபாண்டியனும் கோப்பெருஞ்சிங்கனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வீர வல்லாளன் முகத்தில் ஒரு வித சலனமும் இல்லை. இளவழுதிக்கு ஆசாரியர் சொன்னது ஓரளவிற்கு விளங்கிற்று. ஹரிஹரனும், புக்கனும் முகத்தில் கேள்விக் குறிகளைத்தேக்கினர்.

ஆசாரியர், ' மேற்கொண்டு நீங்கள் மாதவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நேரமாவதால் நான் ஓய்வெடுக்கச் செல்ல வேண்டியது அவசியமாகிறது' என்றார்.

அனைவரும் ஆசாரியன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ஆசிகளைப் பெற்று வெளியே வந்தனர்.

***

'ஆசிரியர் விளக்கியது, அபிமன்யுவிற்கு அர்ஜுனன் சொன்னது போல், பாதிதான் கூறியதாகத் தெரிகிறது' - இளவழுதி ஏமாற்றத்துடன் கூறினான்.

'நண்பர்களே, ஆசாரியர் முழுமையாகக் கூறாவிட்டாலும், அவரின் கருத்துக்கள் தெளிவாகவே இருக்கின்றன. நான் உங்களுக்கு அவசியம் ஏற்படும் போது அதை விளக்குவேன். கேள்வியில் தான் விடையிருக்கிறது. குழப்பத்தில் தான் தெளிவிருக்கிறது. எனினும் தற்போது இதைப் பற்றி மேலும் விவாதிக்கத் தேவையில்லை. காலம் வரும் போது நிச்சயமாக விளங்கும். கவலை வேண்டாம். நீங்கள் அனைவரும் நெடுங்காலம் இங்கு தங்கியிருக்கிறீர்கள். தற்போது உங்கள் கல்வி பூர்த்தியாகி விட்டதால் நீங்கள் உங்கள் இல்லம் திரும்புங்கள். வரும் மார்கழித் திருவாதிரை அன்று நாம் அனைவரும் தில்லையில் சந்திப்போம்.' என்றான் மாதவன்.

மாதவன் ஆசாரியப் பட்டத்திற்கு அடுத்து வரவேண்டியவன் என்றாலும், இவர்களை விட சற்றே மூத்தவன். எனவே எப்போதும் நண்பனைப் போல இவர்களோடு இணைந்திருப்பவன். அவன் சொல்வது சரியென்று படவே அனைவரும் தத்தம் ஊர் திரும்பும் பணிகளில் ஈடுபடத் துவங்கினர்.

* * * **

இரவு போஜனம் முடிந்த பிறகு ஆசாரியர் அழைப்பதாய் அவரது பணியாள் வந்து கூறவே, உடனே அவரது அறையை நோக்கிப் புறப்பட்டான் மாதவன். ஆசாரியாரது அறைக்குள் நுழைந்த போதுதான் அங்கே இன்னொருவர் அமர்ந்திருக்கக் கண்டான். மாதவன் வந்ததும் பேச்சை நிறுத்திய ஆசாரியர், 'வா மாதவா, இவர் யாரென்று தெரிகிறதா' என்று புன்முறுவலுடன் வினவினார்.

அந்த மனிதரும் இவன் பக்கம் திரும்பி புன்னகையுடன், 'நமஸ்காரம்' என்றார். அவரைப் பார்த்ததும், 'யாரது ? !, வேதாந்த தேசிகரா !' என்று வினவினான் ஆச்சரியத்துடன்.

'ஆம். ஆனால் இவர் எனக்கு எப்போதும், தூப்புல் வேங்கட நாதன் தான்' என்றார் பாஸ்கராசாரியார் பலத்த சிரிப்புடன்.


(தொடரும்)