Wednesday, January 6, 2010

சக்கரவியூகம் - இரண்டாம் பாகம் . . . 19

அத்தியாயம் 19 - சுந்தர பாண்டியன் திட்டம்

தென்னகத்தின் வரலாற்றில், குறிப்பாகத் தமிழகத்தின் வரலாற்றில் ஏற்பட்ட முக்கியத் திருப்பம் மாலிக் கஃபூரின் மதுரைப் படையெடுப்பு. இந்தப் படையெடுப்பைப் பற்றி வரலாற்றில் பல்வேறு விதமான குறிப்புகள் காணப்படுகின்றன. அமீர் குஸ்ரூ என்பவர், சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே பகை இருந்ததென்றும் அதைப் பயன் படுத்திக்கொண்டு மாலிக் கஃபூர் மதுரை மீது படையெடுத்தான் என்றும் தெரிவிக்கிறார். இதை வன்மையாக மறுக்கின்றனர் தமிழக வரலாற்றாய்வாளர்கள். வீர பாண்டியனும் சுந்தர பாண்டியனும் தனித்தனியாக அரசாண்டு வந்தாலும் அவர்களிடையே பகையில்லையென்றும், ஒரே நேரத்தில் இருவரும் அரசாள்வது பாண்டிய குலத்தின் வழமையான ஒன்றேயென்றும் தெரிவிக்கின்றனர். சுந்தர பாண்டியன் தன் தந்தை மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்திருந்தான் என்றும், தன் தந்தையின் உடல் நலம் பெற வேண்டி கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இப்புதினத்தைப் புரிந்து கொள்ள மேலும் வலு சேர்க்கும்.

=====

இரவு நன்றாக மலர்ந்து விட்டாலும், மதுரை வீதிகளில் கூட்டம் குறையாததால் ஆங்காங்கே ஏற்றப்பட்ட பந்தங்களால் நகரம் ஜொலித்தது. நகருக்கு வடக்கே சில காத தூரத்தில் எதிரிப் படைகள் தண்டு இறங்கியிருந்த செய்தி நகர மக்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்திருந்தாலும், அதைப் பற்றி அவர்கள் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவர்களது வழக்கமான கோலாகலத்திற்கும் குறைவில்லை.

ஆனால், அதேநேரத்தில் அரண்மனையின் மாடத்தில் அமைதியின்றி நின்றிருந்தான் சுந்தர பாண்டியன். அவன் திட்டம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவன் மனதில் எழுந்தது. ஆதரவுக்கரம் நீட்ட தகுதியான யாரும் இல்லாத நிலையில் தான் இருப்பதாகப் பட்டது அவனுக்கு. மாலிக் கஃபூரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சென்ற ஆட்களும் இன்னும் திரும்பவில்லை. ஒரு நெடிய பெருமூச்சில் தன் மனதிலிருந்த பாரத்தைக் குறைக்கப்பார்த்தான். அது கூடியதே தவிர குறையவில்லை.

எதிரிப்படைகள் தளம் அமைத்து சற்றேறக்குறைய பதினைந்து தினங்கள் ஆகிவிட்டன. எந்நேரமும் அவை முன்னேறக்கூடும். அவனது படைகளும் போருக்கு ஆயத்தமாகவே இருந்தன. ஆனால் ஒரே சமயத்தில் மூன்று பேர் தாக்கினால் அவை சிதறிவிடும் அபாயம் இருந்தது. இந்த வீர பாண்டியனும் சமயம் பார்த்து மூக்கை நுழைக்கிறானே என்ற கோபம் அவனை வாட்டியது. முதலில் அவனைத்தான் தாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். மேலும் சில நாழிகைகள் கடந்தும் அடுத்து செய்யவேண்டிய செயல் என்னவென்பது முடிவெடுக்க முடியாததாக இருந்தது. மன பாரத்தை இறுதியில் மீனாட்சியம்மையின் பாதத்தில் வைத்துவிடவேண்டியதுதான் என்று எண்ணினான்.

====

மாலிக் கஃபூருக்குத் திடீரென மர்மக் காய்ச்சல் ஏற்படவே, திருமலைக் காட்டிலேயே சில காலம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் சாதாரண உடையிலேயே இருந்ததால் அவனை யாரும் அடையாளம் காண முடியவில்லை. அவ்வப்போது இசுலாமிய வீரர்கள் அந்தப் பகுதியில் உலாவுவதால் யாருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. எங்கே என்ன நடக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. மனதில் இருப்புக் கொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். அவனுக்கு வைத்தியம் பார்ப்பவர்களோ, அவனை எங்கும் வெளியில் செல்ல விடாமல், மயக்க மருந்தைக் கொடுத்து சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னரே அவன் உடல் நிலை தேறியது. அதுவரையில் சிகிச்சை போதுமென்று பலவந்தமாக அங்கிருந்து கிளம்பி காஞ்சி வழியாகப் பயணப்பட்டான்.

காஞ்சியில் அப்போது திருவாதிரைத் திருநாளும், வைணவத் தலங்களில் பகல் பத்து உற்சவங்களும் நடைபெற்று வந்தன. வழியில் தென் பட்ட கோவில்களில் நடந்த இந்த உற்சவங்களும், தெய்வத்திருமேனிகளின் வீதியுலாக்களும் அத்திருமேனியில் படர்ந்திருந்த விலைமதிப்பில்லாத ஆபரணங்களும் நவரத்தினங்களும் அவன் உள்ளக்கிடைக்கைக்குப் பெரிதும் தூபம் போட்டன. ஆனால் ஏதும் செய்யவியலாத கையறு நிலையில் இருந்தான். ஆஹா... வடக்கே இருக்கும் ஆலயங்களைக் கொள்ளையடித்து மார்தட்டிக் கொண்டார்களே, இங்கேயல்லவா அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. இருக்கட்டும் இருக்கட்டும், இவையனைத்தும் ஒரு நாளைக்கு என் வசமாகும். அப்போது பார்க்கிறேன் தில்லி பாதுஷாவை.. என்று மனதில் கறுவிக்கொண்டான்.

அப்படி நினைத்துக் கொண்டே அந்தப் பக்கமாக வந்த ஒரு சிவனாரின் தெய்வத்திருமேனி மீது அவன் கண்கள் படர்ந்தன. அவன் எண்ணத்தைக் கண்டு கொண்டதாக இருந்தது சிவனாரின் கொவ்வைச் செவ்வாயிலிருந்து வெளிப்பட்ட குமிழ் சிரிப்பு!!!.

(தொடரும்)

5 comments:

☀நான் ஆதவன்☀ said...

மூன்று பக்கமும் எதிரிப்படைகள். அநேகமாக சக்கரவியூகத்திற்கு வேலை வந்திடுச்சுனு நினைக்கிறேன் பல்லவன்.

லேட் பண்ணாம சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க ப்ளீஸ்

இரவுப்பறவை said...
This comment has been removed by the author.
இரவுப்பறவை said...

வாரம் முழுவதும் புதன் கிழமையா இருந்தா நல்லா இருக்கும்.. வழக்கம்போல இந்த வாரமும் அருமை..

CA Venkatesh Krishnan said...

வாங்க ஆதவன். புதன் தவறாமல் நிச்சயம் பதிவிட்டு விடுகிறேன்!

CA Venkatesh Krishnan said...

//
இரவுப்பறவை said...

வாரம் முழுவதும் புதன் கிழமையா இருந்தா நல்லா இருக்கும்.. வழக்கம்போல இந்த வாரமும் அருமை..
//

தன்யனானேன் சுவாமி!!

மிக்க நன்றி இரவுப்பறவை அவர்களே!