Friday, January 29, 2010

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 22

அத்தியாயம் 22 : இவை போதாது.

கொல்லி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த மாலிக்கின் படைகளை நடத்தி வந்த ஜலாலுதீன், மாலிக்கிடமிருந்து ஒரு தகவலும் வராமல் போகவே என்ன செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். கொள்ளைக் கூட்டத்தின் கலவையாக அமைந்திருந்த அந்தப் படையினர் நீண்ட காலம் அமைதியாக இருந்து அறியாதவர்கள். அப்போதே அவர்களிடத்தில் சிறு சலசலப்பு ஏற்படத் துவங்கியிருந்தது.

ஆயினும் விஷயம் கைமீறிச் செல்வதற்குள் மாலிக் வந்து சேர்ந்தான். வந்தவன் முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குக் கோபத்தின் உச்சியில் இருந்ததைக் கண்ட ஜலாலுதீனுக்கு அவனை அண்டவும் அச்சமாக இருந்தது. மாலிக்கின் அழைப்பிற்காகக் காத்திருந்தவன் படைகளிடையே மாலிக்கின் வருகையை அறிவிக்கும் படி பணித்துவிட்டு, அவைகளை வரிசைப்படுத்தவும் உத்தரவிட்டான்.

ஜலாலுதீனின் இந்த ஏற்பாடுகள் மாலிக்கின் மனதை ஓரளவு சாந்தப்படுத்தின. அவனை அருகில் அழைத்து, "மிகச் சிறப்பாகப் படையை அழைத்து வந்திருக்கிறாய், ஜலாலுதீன். இத்தகைய முரட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எனக்கே சில காலம் பிடித்தது. உன்னிடத்தில் விரைவாக பணிந்துவிட்டார்கள்." என்றான்.

"எல்லாம் உங்கள் உத்தரவுப்படியே நடந்தது, ஹுசூர். தாங்கள் சொல்லியபடியே செய்ததால் ஒரு குறைவும் இல்லை. இனியும் உங்கள் ஹுக்குமிற்காகக் காத்திருக்கிறோம்." என்றான் பணிவுடன்.

"அச்சா. ஜலாலுதீன், நம்மைத் தக்காணத்திற்கு, சுல்தான் அனுப்பிய போது என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா"

"நிச்சயமாக ஹுசூர். அதை மறக்க முடியுமா. தக்ஷிண பாரதத்தின் முக்கியமாக மாபாரின் (மதுரையை மாபார் என்று அழைத்தனர் சுல்தானியர்கள். பின்னர் அதுவே திரிந்து மலபார் ஆனது) உயர்ந்த செல்வங்களைப் பற்றி தான் அறிந்தவற்றைக் கூறினார். அந்தப் பகுதி தன் ஆளுகைக்குட்பட்டு இருக்கவேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினார். அதற்கான தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர்கள். இறைவன் அந்த சந்தர்ப்பத்தையும் தங்களுக்குக் காட்டியுள்ளான்" என்று நிதானமாக அதே சமயத்தில் தீர்க்கமாக எடுத்துரைத்தான் ஜலாலுதீன்.

"அத்தகைய பெரும் பொறுப்பை எனக்கு அளித்ததன் காரணம் என்ன?" என்று வினவினான் ஜலாலுதீனின் அறிவைச் சோதிக்க எண்ணி.

"சுல்தானுக்காக முதலிலேயே தேவகிரியைப் பிடித்தீர்கள். அவர்களிடமிருந்து வரியையும் வசூலித்து வருகிறீர்கள். தக்காணம் தங்களுக்குத் தலைகீழ்ப்பாடம். சிறிய படையையும் வைத்துக் கொண்டு பெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளீர்கள். இவை போதாதா. உங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க"

"ம். ஆம். இவை போதாது. ஜலாலுதீன், இவை போதாதுதான்" என்றான் மாலிக் சற்று விரக்தியுடன்.

"ஹுசூர். மன்னிக்க வேண்டும். புரியவில்லை"

"ஜலாலுதீன். சுல்தானுக்கு மாபாரைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், தன்னிடம் இருக்கும் 4,75,000 வீரர்களையும் என்னுடன் அனுப்பியிருப்பார். அத்துணை பேர் இங்கு வந்திருந்தாலும், அவர்களால் இங்கே இருக்கும் செல்வத்தைக் கவர்ந்து செல்வது மிகக் கடினமான செயல். அவ்வளவு செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது. ஹும். நான் வந்து கவர்ந்து செல்வதென்பது, ஆற்று நீரை நாய் நக்கிக் குடிப்பது போன்றது. ஆனாலும் பரவாயில்லை. வந்ததற்குச் சிலவற்றைக் கவர்ந்து சென்று மீண்டும் வரவேண்டும் என்று சுல்தானிடம் கூறுவேன். அப்போது நீ தனியாக வர வேண்டியிருக்கலாம். ஆகவே, இந்தப் பகுதிகளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்."

"உத்தரவு ஹுசூர். இப்போது படை நடத்த அனுமதி உண்டா."

"படையெடுப்பை மேற்கொண்டு நடத்துவது, மதுரையில் பாண்டியப் படையின் நிலையைப் பொறுத்தது. அருகில் உறையூரில் வந்து இறங்கியிருக்கும் வல்லாளனைச் சந்திக்க வேண்டும். அவன் நிலை என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பாவம். என்னை நன்றாக நம்பிவிட்டான் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், தன் தலை நகரை நிர்க்கதியாக விட்டுவிட்டு வந்திருப்பானா. இந்தப் படையெடுப்பை முடித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்று, துவாரசமுத்திரத்தைத் தாக்க வேண்டும். ஆகவே, நமது படைகளில் குதிரைப் படையையும், மங்கோலிய வில்லாளிகளையும் இப்போதே பிரித்துவிடு. துவார சமுத்திரத்தை நீதான் தாக்க வேண்டும். அது உன் பயிற்சிக் களமாக இருக்கும். புரிந்ததா." என்று கூறி நிறுத்தினான் மாலிக்.

"அவ்வாறே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றான் பலமாகத் தலையைத் தாழ்த்தி.

"இன்ஷா அல்லாஹ். இப்போதைக்கு படையைப் பிரிப்பதற்குக் காரணம், வியூகம் அமைப்பதுதான் என்று சொல்லிவிடு. துவார சமுத்திரத்தைத் தாக்கும் திட்டம் மிக ரகசியமாக இருக்கட்டும். மீண்டும் மாலைத் தொழுகைக்குப் பின் என்னை வந்து பார்." என்று அவனை அனுப்பினான்.

=====

தென்னிந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என்று கூறுவர். ஆனால் மாலிக் கஃபூர் படையெடுத்து வந்து தமிழகச் செல்வங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி அவ்வளவாக பாராட்டப்படுவது கிடையாது. களப்பிரர்கள் சில நூற்றாண்டுகளில் செய்த செயல்களை மாலிக் ஒரு சில மாதங்களிலேயே செய்ய முற்பட்டான். அதில் வெற்றி பெற்றானா? அவன் எண்ணம் ஈடேறியதா? மாபார் சுல்தானின் ராஜ்ஜியத்தில் இணைந்ததா?.

(தொடரும்...)

4 comments:

☀நான் ஆதவன்☀ said...

தாமத பின்னூட்டம்..

க்ரேட்! களப்பிரர்கள் ஆறு நூற்றாண்டுகளாக ஆட்சி செய்ததாக படித்த ஞாபகம். அப்படியென்றால் அவர்கள் ஆட்சி செய்யவில்லை...நாசவேலைகள் மட்டும் தான் செய்தனரா? அவர்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லையா என்ன?

Anonymous said...

innum vegama eluthunga boss.

Anonymous said...

Hello Illaya Pallavan,

I am eagerly waiting for the next part #23.

Regards

Anonymous said...

Hi

When will be you are posting the next part 23