Wednesday, October 8, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் (1)

அத்தியாயம் 1 : காஞ்சிக் கடிகையில் கண்டெடுத்த ரத்தினங்கள்

காஞ்சியின் புகழ்பெற்ற கடிகாஸ்தானத்தின்(பல்கலைக் கழகம்) ப்ரதானாசாரியார் (தலைமை ஆசான்) அறையில் குழுமியிருந்தவர்களின் எண்ணிக்கை அந்த கடிகையிலேயே பெரிய அறையை சிறிதாக்கிக் காட்டியது.
விஜயதசமி நன்னாளில் வழக்கமான பூஜைகள் மற்றும் நிவேதனங்களின் முடிவில் அங்கு குழுமியிருந்தோரை தனியாக அழைத்திருந்தார் ப்ரதானாசாரியாராகிய பாஸ்கராசாரியார். பார்வைக்கு எண்பது வயதானவராகக் காணப்பட்டாலும், பேச்சிலும் பார்வையிலும் தீக்ஷண்யம் மிகுந்து காணப்பட்டது.

அங்கு குழுமியிருந்தவர்களை பார்த்துக்கொண்டே அவர்களின் பின்னணியை நினைத்துக் கொண்டார்.

முதலாக நின்றவன் வீர பாண்டியன். மதுரை மன்னன் மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் முதல் புதல்வன். எனினும் பட்டத்து ராணிக்குப் பிறந்தவனல்லன். அவன் பாட்டனார் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் வீரமும் விவேகமும் இவனிடம் நிறைந்திருக்கக் கண்டார். இவனது சகோதரன் சுந்தர பாண்டியன் பட்டத்து இளவரசனாக வரவேண்டியவன் என்றாலும், தகுதியிலும் திறமையிலும் வீர பாண்டியனுக்கு சற்றும் பொருந்தாதவன்.

அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கன். காஞ்சியைத் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் காடவர் குலக்கொழுந்து. இவன் பெயர் கொண்ட இவனது பாட்டனார், சோழ மன்னனான இரண்டாம் ராஜாதிராஜனையே மூன்றாண்டுகள் சிறை வைத்து சாதனை படைத்தவர். கலைகளையும், கோவில்களையும் போஷிப்பதில் நிகரற்றவர். இவர் காலத்தில் மீண்டும் காஞ்சி தலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தாலும் அது முடியாமலே போனது. காடவர் குலம் இந்த கோப்பெருஞ்சிங்கனைத்தான் தற்போது நம்பியிருக்கிறது.

வீர வல்லாளன். ஹொய்சள தேச இளவல். தமிழகத்தில் நிலவி வரும் தற்காலிக சமரசத்திற்கு காரணம் இவன் முப்பாட்டன் வீர சோமேஸ்வரன். தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் நிலையில் இருக்கும் ஹொய்சள நாட்டின் அடுத்த பட்டத்தரசன்.

ஹரிஹர ராயன். இவன் தந்தை ஏகாம்பர நாதன் காஞ்சியைச் சேர்ந்த ஒரு சாதாரண வணிகன். இந்தக் கடிகையின் மிகச் சிறந்த மாணாக்கன்.

புக்க ராயன். ஹரி ஹரனின் சகோதரன். அவனைப் போலவே மிகச் சிறந்த அறிவாளி.

நக்கன் இளவழுதி. சிராப் பள்ளியை அடுத்த திரு வெள்ளரையைச் சேர்ந்தவன். வேளிர் குடியினன். பாஸ்கராசாரியாரின் அத்யந்த சீடன்.

தற்போது, தனது அருகிலுள்ள மாதவனைப் பார்த்தார். தனக்கு அடுத்து இந்தக் கடிகையை நடத்தப் போகும் வாரிசாக நியமித்து விட்டாலும், இன்னும் அவனிடத்தில் இருக்கும் பணிவும், எதனையும் நொடியில் ஆராய்ந்து கிரகித்து விடக்கூடிய அறிவும் அவரைக் கவர்ந்ததென்றால் மிகையாகாது.

இவ்வாறு அனைவரையும் ஒரு க்ஷணத்தில் நோக்கிவிட்டாரானாலும், அவர்களைத் தனியாக அழைத்ததின் நோக்கத்தை விளக்க சற்று நேரம் எடுத்துக் கொண்டார்.

'எனதருமை மாணாக்கர்களே, இன்று விஜயதசமி. ஸ்ரீ ராம பிரான் தர்மத்தை நிலை நாட்டிய நாள். தர்மோ ரக்ஷதி ரக்ஷித:. அதாவது தர்மத்தைக் காப்பவரை தர்மமே காக்கும் என்பது இதன் சாரம். ஸ்ரீ ராமன் ஒவ்வொரு செயலிலும் தர்மத்தைக் கடைபிடித்தான். எனவே தர்மம் அவனைக் காத்தது.

இந்த கடிகாஸ்தானத்தில் இருந்து ஒவ்வொரு விஜய தசமியன்றும் வித்யாப்யாசம் முடிந்து மாணவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்புதல் வழக்கமான நடைமுறையாகும். அதைப் போலவே இவ்வருடமும் காலையில் அனைவருக்கும் வித்யாப்யாச நிறைவு சிறப்பாக நடைபெற்றது. நீங்களும் கற்க வேண்டியதெல்லாம் சிறப்பாகக் கற்றுக் கொண்டீர்கள்.

ஒரு ஆசிரியன் தன்னிடத்தில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் தனது மாணாக்கர்களிடம் அளிக்கவே விரும்புவான். ஆனால் அத்தகைய திறமையும் தகுதியும் வாய்ந்த மாணாக்கர்கள் கிடைப்பது துர்லபம் என்பது எனது கருத்து. இத்துணை காலமாக இந்த கடிகாஸ்தானம் பல்வேறு மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்து வந்துள்ளது. நானே இங்கு ஒரு மாணவனாக நுழைந்தவன் தான். எனது ஆசிரியர் என்னைக் கண்டெடுத்து அவர் அறிந்ததெல்லாம் எனக்குப் பயிற்றுவித்தார். அதே போன்று நானும் அந்த வித்யைகளை சரியான மாணவனுக்கு கற்பிக்க வேண்டும் என்பதே அவரது அவா.

ஆனால் குழந்தைகளே, எனக்கு இத்துணை வருடமாக அத்தகைய மாணவர்கள் யாரும் கிடைக்க வில்லை. இப்போது தான் நீங்கள் அனைவரும் ஒன்று போல் கிடைத்திருக்கிறீர்கள். நீங்கள் இந்தக் கடிகை கண்ட ரத்தினங்கள். ஆகவேதான் உங்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகளும், பற்பல ரகசிய தந்திரங்களும் கற்றுக் கொடுத்தேன். ஆயினும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு.

அது தான் சக்கர வியூகம்...

நான் இது வரை சொன்னது பொதுவான கருத்துக்கள் தான். இனிமேல் சற்று கவனமுடன் கேளுங்கள்'

இவ்வாறாக ஆசாரியர் சொல்லவும் அது வரையும் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மேலும் சிரத்தை காட்டத் தொடங்கினார்கள்.

(தொடரும்)..

13 comments:

Anonymous said...

முதல் அத்தியாயமே மிக அருமையாக இருக்கிறது.
அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று ஆவலாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

CA Venkatesh Krishnan said...

//

ஸூபா கூறியது...
முதல் அத்தியாயமே மிக அருமையாக இருக்கிறது.
அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று ஆவலாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
//

Thanks

புருனோ Bruno said...

//எனதருமை மாணாக்கர்களே, இன்று விஜயதசமி. //

நச் !!!

CA Venkatesh Krishnan said...

// புருனோ Bruno கூறியது...

நச் !!!
//

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி டாக்டர் ! ! !

CA Venkatesh Krishnan said...

test

narsim said...

சுவாரஸ்மாய் உள்ளது.. நீங்கள் எழுதுவதுதான் சரித்திர தொடர்.. தொட‌ருங்கள்!!

நர்சிம்

CA Venkatesh Krishnan said...

//
narsim கூறியது...
சுவாரஸ்மாய் உள்ளது.. நீங்கள் எழுதுவதுதான் சரித்திர தொடர்.. தொட‌ருங்கள்!!

நர்சிம்
//

பாராட்டுகளுக்கு நன்றி நர்சிம் ! ! !

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் தொடக்கம் பல்லவன். நாளை அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
சூப்பர் தொடக்கம் பல்லவன். நாளை அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்
//

நன்றி ஆதவன்.

வெங்கட்ராமன் said...

அருமையான தொடக்கம்.
தொடருங்கள்.

CA Venkatesh Krishnan said...

//
வெங்கட்ராமன் கூறியது...
அருமையான தொடக்கம்.
தொடருங்கள்.
//

மிக்க நன்றி வெங்கட்ராமன்

Bee'morgan said...

முதல் அத்தியாயம் படிச்சாச்சு.. நன்று..

CA Venkatesh Krishnan said...

//
Bee'morgan கூறியது...
முதல் அத்தியாயம் படிச்சாச்சு.. நன்று..
//

நன்றி Bee'morgan