Wednesday, October 15, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 2


அத்தியாயம் 2: அரசியலும், அர்ஜுனனும் ஆசாரியனும்


முன்னோட்டம் முதல் அத்தியாயம்

அனைவரின் கவனத்தையும் கண்டு மகிழ்ச்சியுற்ற பாஸ்கராசாரியார் மேலும் தொடர்ந்தார்.

'நீங்கள் அனைவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள். இப்போது நமது பாரதக் கண்டம் உள்ள நிலையை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அரச பரம்பரையின் கீழ் ஆளப்பட்டு வருகிறது. ஒருவர் மற்றவரைத் தாக்குவதும், மிகச் சிறந்த் குலங்கள் எழுவதும் வீழ்வதும் சாதாரணமாக நாம் காணக் கூடியதாக இருக்கிறது. இத்துணை பிரிவினைகள், தேசங்கள் இருந்தாலும், சனாதன தர்மம், ஒரு நூல் பிரிந்திருக்கும் முத்துக்களைச் சேர்த்துக் காப்பது போல இந்தப் பரந்த பாரதக் கண்டத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தற்போது, முகம்மதியர்கள், இந்த்ரப்ரஸ்தத்தைக் கைப்பற்றி ஆட்சி செலுத்தத் தொடங்கியுள்ளனர். நமக்குள் இருக்கும் சகோதர சண்டை தான் இதன் முக்கியமான காரணமாகத் தெரிகிறது.

அவர்கள் விந்தியாசலத்தைத் தாண்டி, தக்காணம் வரை வந்தாலும், தமிழகத்திற்குள் இது வரை வர வில்லை. அவர்கள் தமிழகத்திற்குள் வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை நாம் தள்ளிப் போடலாமே தவிர, தவிர்க்க முடியாது. நாமாக அழைக்காமல் இருந்தாலே நல்லது.



அரசியல், மதம் ஆகியவை - பாவும், ஊடும் ஒரு துணியில் இருப்பது போல நாட்டில் நிலவுகிறது. அரசனானவன் தன் நாட்டிற்குரிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற மதங்களும் இயைந்து வாழப் பாடு பட வேண்டும். அனைத்து மதங்களின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும், மக்களைப் பிரிக்க மதங்களைக் காலம் காலமாக அரசுகள் பயன் படுத்தி வந்திருக்கின்றன. இறுதியில் அத்தகைய மூடத்தனமான கொள்கைகளாலேயே அவ்வரசுகள் வீழ்ந்திருக்கின்றன.

இத்தகைய சரித்திரங்கள் நிதர்சனமாக இருந்தும் அரசுகள் மாற்று வழியைக் கடைப் பிடிக்காமல் முன்னேர் வழியில் பின்னேர் செல்வது போல் சென்று கொண்டிருக்கின்றன. நீங்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே என் அவா.' என்று சற்று நிறுத்தினார்.

சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்தவர் வேறு விஷயத்தைப் பற்றி பேசுகிறாரே என்று நினைத்தாலும், அவர் பேசுவதில் ஏதாவது காரணம் இருக்கும் என்று அனைவரும் தொடர்ந்து குழப்பத்துடன் கவனித்தவாறு இருந்தனர்.

மாதவனிடம் மட்டும் ஆசாரியர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்ததற்கான தெளிவு பிறந்தது. ஆயினும் அதை வெளிக்காட்ட வில்லை.

அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் ஆசாரியர் மேலும் தொடர்ந்தார்.


'மாணவச் செல்வங்களே, உங்கள் சிந்தனையை என்னால் கிரகித்துக் கொள்ள முடிகிறது. ஆயினும் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லி விட்டேன். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த பாரத தேசத்தையும், ஆதியந்தமில்லாத சனாதன தர்மத்தையும் காப்பாற்ற வேண்டும். நான் உங்கள் அனைத்து நற்காரியங்களிலும் துணையிருப்பேன். மாதவன் என்னிடத்தில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொண்டு விட்டான். அவன் யாருடன் இருக்கிறானோ அவர்கள் பக்கம் விஜயலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் வியாபித்து இருக்கும். சென்று வாருங்கள். ஜய விஜயீ பவ:' என்று கூறி ஆசீர்வதித்தார்.

வீரபாண்டியனும் கோப்பெருஞ்சிங்கனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வீர வல்லாளன் முகத்தில் ஒரு வித சலனமும் இல்லை. இளவழுதிக்கு ஆசாரியர் சொன்னது ஓரளவிற்கு விளங்கிற்று. ஹரிஹரனும், புக்கனும் முகத்தில் கேள்விக் குறிகளைத்தேக்கினர்.

ஆசாரியர், ' மேற்கொண்டு நீங்கள் மாதவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நேரமாவதால் நான் ஓய்வெடுக்கச் செல்ல வேண்டியது அவசியமாகிறது' என்றார்.

அனைவரும் ஆசாரியன் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ஆசிகளைப் பெற்று வெளியே வந்தனர்.

***

'ஆசிரியர் விளக்கியது, அபிமன்யுவிற்கு அர்ஜுனன் சொன்னது போல், பாதிதான் கூறியதாகத் தெரிகிறது' - இளவழுதி ஏமாற்றத்துடன் கூறினான்.

'நண்பர்களே, ஆசாரியர் முழுமையாகக் கூறாவிட்டாலும், அவரின் கருத்துக்கள் தெளிவாகவே இருக்கின்றன. நான் உங்களுக்கு அவசியம் ஏற்படும் போது அதை விளக்குவேன். கேள்வியில் தான் விடையிருக்கிறது. குழப்பத்தில் தான் தெளிவிருக்கிறது. எனினும் தற்போது இதைப் பற்றி மேலும் விவாதிக்கத் தேவையில்லை. காலம் வரும் போது நிச்சயமாக விளங்கும். கவலை வேண்டாம். நீங்கள் அனைவரும் நெடுங்காலம் இங்கு தங்கியிருக்கிறீர்கள். தற்போது உங்கள் கல்வி பூர்த்தியாகி விட்டதால் நீங்கள் உங்கள் இல்லம் திரும்புங்கள். வரும் மார்கழித் திருவாதிரை அன்று நாம் அனைவரும் தில்லையில் சந்திப்போம்.' என்றான் மாதவன்.

மாதவன் ஆசாரியப் பட்டத்திற்கு அடுத்து வரவேண்டியவன் என்றாலும், இவர்களை விட சற்றே மூத்தவன். எனவே எப்போதும் நண்பனைப் போல இவர்களோடு இணைந்திருப்பவன். அவன் சொல்வது சரியென்று படவே அனைவரும் தத்தம் ஊர் திரும்பும் பணிகளில் ஈடுபடத் துவங்கினர்.

* * * **

இரவு போஜனம் முடிந்த பிறகு ஆசாரியர் அழைப்பதாய் அவரது பணியாள் வந்து கூறவே, உடனே அவரது அறையை நோக்கிப் புறப்பட்டான் மாதவன். ஆசாரியாரது அறைக்குள் நுழைந்த போதுதான் அங்கே இன்னொருவர் அமர்ந்திருக்கக் கண்டான். மாதவன் வந்ததும் பேச்சை நிறுத்திய ஆசாரியர், 'வா மாதவா, இவர் யாரென்று தெரிகிறதா' என்று புன்முறுவலுடன் வினவினார்.

அந்த மனிதரும் இவன் பக்கம் திரும்பி புன்னகையுடன், 'நமஸ்காரம்' என்றார். அவரைப் பார்த்ததும், 'யாரது ? !, வேதாந்த தேசிகரா !' என்று வினவினான் ஆச்சரியத்துடன்.

'ஆம். ஆனால் இவர் எனக்கு எப்போதும், தூப்புல் வேங்கட நாதன் தான்' என்றார் பாஸ்கராசாரியார் பலத்த சிரிப்புடன்.


(தொடரும்)



10 comments:

☀நான் ஆதவன்☀ said...

me the 1st??

☀நான் ஆதவன்☀ said...

சுவராஸ்யம்.....சுவராஸ்யம்.....
சூப்பர் இளைய பல்லவன். அப்படியே கதை நடக்கும் நூற்றாண்டையும் தெரியப்படுத்தவும்.

CA Venkatesh Krishnan said...

//

நான் ஆதவன் கூறியது...
me the 1st??
//
yes :)

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
சுவராஸ்யம்.....சுவராஸ்யம்.....
சூப்பர் இளைய பல்லவன். அப்படியே கதை நடக்கும் நூற்றாண்டையும் தெரியப்படுத்தவும்.
//

மிக்க நன்றி ஆதவன்.

கதையின் காலமும், களமும் அடுத்த அத்தியாயத்தில் விரிவாக அலசப் படுகிறது. இது இத்தொடரைச் சுவைப்பதற்கு மேலும் உதவும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

Good going..

Anonymous said...

சூப்பர்

http://urupudaathathu.blogspot.com/ said...

அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)

http://urupudaathathu.blogspot.com/ said...

அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)

CA Venkatesh Krishnan said...

என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி அணிமா! ! !

உடனே பதிவிட்டுவிடுகிறேன்

Anonymous said...

TEST 1