Wednesday, October 22, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் ...3

அத்தியாயம் மூன்று: கதையின் வரலாறு

இரண்டு அத்தியாயங்கள் முடிந்து விட்ட நிலையில், இந்தத் தொடர் நடக்கும் காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது.

இந்தக் கதை துவங்கும் ஆண்டு கி.பி. 1308 !. ஆம். சரியாக 700 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இக்கதை புனையப்பட்டுள்ளது. அதற்கு முன் வரையிலான தமிழக வரலாற்றையும், தென்னிந்திய வரலாற்றையும் சற்றே ஆராய்வோம்.

தமிழகமும், தமிழும் மிகப் பழமை வாய்ந்தவை என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை நிலவியது.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலவியது களப்பிரர்களின் ஆட்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும், இக்காலக் கட்டத்தில் யார் யார் மன்னர்கள், என்னென்ன இலக்கியங்கள் என்பன குறித்த எந்தத் தகவலும் இதுவரை தெளிவாகக் கிடைக்க வில்லை. எனவே, களப்பிரர்களின் காலத்தை இருண்ட காலம் என்று குறிப்பிடுகிறார்கள், வரலாற்று வல்லுனர்கள். இவர்கள் சமணர்கள் என்றும், இவர்களுக்குப் பின் ஏற்பட்ட சைவ சமய அரசுகளின் காரணமாக இவர்களைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் அழிக்கப் பட்டன என்றும் ஒரு சாரார் குறிப்பிடுகிறார்கள். களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல, இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்பது அவர்களின் வாதம்.

கி.பி. 6ம் நூற்றாண்டு முதல், இக்கதை நடைபெறும் 13ம் நூற்றாண்டு வரை தமிழகத்தையோ, தென்னிந்தியாவையோ, ஒரே வம்சம் தான் ஆட்சி செய்து வந்துள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என பெரும்பாலும் தமிழகத்தின் அரசுகளே தென்னிந்தியாவை ஆண்டு வந்துள்ளன.


ஆந்திரம், கர்னாடகம் ஆகிய பகுதிகளில் மேலைச் சாளுக்கியர்கள், காகதீயர்கள், ஹொய்சளர்கள், கடம்பர்கள் ஆகிய பல்வேறு வம்சங்கள் இருந்தாலும் அவற்றின் பலம் சிறிது குறைவுதான். 12ம் நூற்றாண்டு முதல் டெல்லி சுல்தானியர்களின் வரவு தெற்கே தக்காணம் வரை இருந்தது. சுல்தானியர்களின் வரவைத்தடுக்கும் பணியில் மேற்கண்டவர்கள் ஈடுபட்டிருந்ததால், தமிழகத்தின் பக்கம் அவர்களின் பார்வை சிறிது குறைவாகவே இருந்து வந்தது.

இன்னிலையில்தான், தமிழகத்தின் இறுதித் தமிழ் வம்சமான பிற்காலப் பாண்டியர்களின் சாம்ராஜ்யம், ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்னும் மாவீரன் தலைமையில் மறுபிறவி எடுத்தது. இந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் முதலில் ஹொய்சளர்களோடு இணைந்து சோழர்களை அடியோடு அழித்தான். பின்னர் ஹொய்சளர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகமாகிவிடவே, முதலில் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நாட்டிற்கே சென்று அவர்களைத் தோற்கடித்தான். சிறிது காலம் ஹொய்சளர்கள் நாடின்றி இருந்தனர். இவன் காலத்தில் கொங்கணக் கடற்கரை வரை பாண்டிய நாடு விரிந்திருந்தது. அது மட்டுமின்றி, முதலில் சோழர்களோடு இணைந்திருந்த காஞ்சியின் காடவப் பல்லவர்களையும் தோற்கடித்தான்.

இவனது செயல்களைப் பற்றியே இது போல் பற்பல புதினங்களை எழுதிவிடலாம். ஆயினும் தமிழகத்தின் தலைவிதி வேறு விதமாயிருந்தது, இவனுக்குப் பின் வந்தவர்கள் மட்டும் இவன் செயலில் பாதியாவது செய்திருப்பார்களேயானால் இன்றைய தமிழக வரலாறு வேறு விதமாயிருந்திருக்கும். இவன் சந்ததியர் யாருமே இவன் அளவுக்கு வீரமும் விவேகமும் இல்லாது போயினர். இந்தக் கதை நடைபெறும் காலத்தில், மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் மதுரையில் அரசாண்டு கொண்டிருந்தான். இவனது மூத்த மகன் தான் வீர பாண்டியன். ஆனால் பட்டத்து ராணிக்குப் பிறந்தவனல்லன் என்று முன்னமே பார்த்தோம். இவனது இளைய மகன் சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் அவ்வளவாக ஆகாது.

சிங்கம் சிறுத்தால் சிறு நரிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போல், பாண்டிய அரசர்களின் திறமைக் குறைவால் தமிழகத்தின் வரலாறு அடியோடு மாறிப்போனது.

ஆகவே, பாண்டியர்களுக்கு உட்பகை, அதாவது பரம்பரை வைரிகளான சோழர்களின் தொல்லை இல்லாவிட்டாலும், வெளிப்பகையான, ஹொய்சளர்கள், காடவப் பல்லவர்கள் முதலானவர்களின் விரோதம் இருந்து கொண்டுதான் இருந்தது.

இன்னிலையில் தான், காஞ்சியின் கடிகாஸ்தானத்தில், பாண்டியனுடன், ஹொய்சள வீர வல்லாளன், காடவக் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரும் பயிற்சி எடுத்துக் கொண்டனர். இவர்களுடன் பயின்ற ஹரிஹர ராயனும், புக்க ராயனும் சங்கம வமிசத்தைத் தோற்றுவித்து, விஜய நகர அரசுக்கு அடிகோலியவர்கள். ஆக இவர்கள் அனைவரும் வரலாற்றுப் பாத்திரங்கள்.
மாதவன் என்பவர் தான் பின்னாளில், வித்யாரண்யர் என்ற பெயருடன் விஜய நகர அரசு தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்தார். இவர் விஜய நகர அரசின் குல குருவாக மட்டுமல்லாது, ஸ்ருங்கேரி சாரதா பீடத்தையும் அலங்கரித்தார்.

தூப்புல் வேங்கட நாதன் என்னும் வேதாந்த தேசிகரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ஸ்ரீ இராமானுஜருக்குப் பிறகு ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை சீர் படுத்தியவர். ஸ்ரீ ரங்கத்தில் இவர் இருந்த காலத்தில் தான் மாலிக் கஃபூரின் தாக்குதல் நடைபெற்றது. இவரும் மாதவரும் இக்கதையின் முக்கியப் பாத்திரங்கள். இவர்கள் இருவரும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள்.
இவர்கள் தவிர இதுவரை அறிமுகப் படுத்தப் பட்ட பாஸ்கராசாரியாரும், நக்கன் இளவழுதியும் கற்பனைப் பாத்திரங்கள். ஒரு வரலாற்றுப் புதினத்தை நடத்திச் செல்ல இத்தகைய கற்பனைப் பாத்திரங்கள் மிகவும் அவசியம்.
மேலும் சில வரலாற்றுப் பாத்திரங்களும், கற்பனைப் பாத்திரங்களும் கதையின் வழியில் நம்முடன் இணைவார்கள்.

மொத்தத்தில், பாண்டியர்களின் உரிமைப் போரில் பிற தேசத்தவர் தலையீட்டையும், அதனால் தமிழகத்திற்கு விளைந்த தீங்குகளையும், பின்னர் விஜய நகர சாம்ராஜ்யம் நிறுவப் பட்ட வரலாற்றையும், சுவாரசியமாக விளக்கும் முயற்சியே இந்தப் புதினம்.

மேற்கண்ட தகவல்களுடன் இத்தொடரைப் படிப்பது சுவையாக இருக்கும் என்பது என் எண்ணம். இனி தொடர் தொடர்கிறது.

======

தன் அறைக்குத் திரும்பிய வீர பாண்டியன் சுரத்தின்றியே காணப்பட்டான். அவன் செய்கைகளைக் கண்ட நக்கன் இளவழுதி,

'என்ன வீரா, ஒரு மாதிரியாக இருக்கிறாயே? கடிகையை விட்டுப் போகிறோம் என்ற கவலையா அல்லது ஆசாரியர் சக்கர வியூகத்தைப் பற்றி சரியாகச் சொல்லவில்லையே என்ற எண்ணமா?'

'அதெல்லாம் ஒன்றுமில்லை இளவழுதி. எனக்குத்தான் தற்போது மதுரைக்குச் செல்ல விருப்பமில்லை. அங்கிருக்கும் நிலைமைதான் உனக்குத் தெரியுமே. சென்றால் வீணாக வம்பு வரும் என்று நினைக்கிறேன். இங்கேயே இருந்துவிடலாமா, அல்லது, மல்லையிலிருந்து கடல் மார்க்கமாக எங்காவது சென்றுவிட்டு வரலாமா என்று எண்ணுகிறேன்.

'சரிதான். அதனால் மனம் ஒடிந்து போய் விட வேண்டுமா. என்னுடன் திருவெள்ளரைக்கு வந்துவிடு. அங்கு சில காலம் தங்கியிருந்து உன் மனதை மாற்றிக்கொள். அருகே கொல்லி மலை இருக்கிறது. அங்கே சில ஆச்சரியமான விஷயங்களும் இருக்கின்றன. என்ன சொல்கிறாய்?'

'ஆம். அவ்வாறுதான் செய்ய வேண்டும். சரி உன்னுடனே வருகிறேன். மிக்க நன்றி இளவழுதி.'

'இதற்கெல்லாம் நன்றி சொல்ல ஆரம்பித்தால் அதற்கு முடிவே இருக்காது. சரி சரி, நாளை விடியும் முன்னரே கிளம்பி விடுவோம். அப்பொழுதுதான் களைப்பின்றி நீண்ட தூரத்தைக் கடந்து விடலாம். இப்பொழுது நிம்மதியாகத் தூங்கு.'

'நான் தூங்கி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்று உனக்குத் தெரியாது' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட வீரபாண்டியன் 'அவ்வாறே ஆகட்டும் இளவழுதி' என்றான்.

(தொடரும்)

12 comments:

☀நான் ஆதவன்☀ said...

மீ த பர்ஸ்ட்?? இருங்க கதையை படிச்சுட்டு வர்ரேன்

☀நான் ஆதவன்☀ said...

கதை நடக்கும் நூற்றாண்டை தெரியப்படுத்தியதில்லாமல் வேறு சில தகவல்களையும் கொடுத்ததற்கு நன்றி பல்லவன்.
உங்களின் கதையெழுதும் நடையைப் பார்த்தால் வரலாற்று கதைகளில் மிக்க கைதேர்ந்தவர் போலிருக்கிறதே!! பலே பலே!! (ஹி..ஹி..உங்க கதையைப் படிச்ச யெபக்ட்டு)

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
மீ த பர்ஸ்ட்?? இருங்க கதையை படிச்சுட்டு வர்ரேன்
//

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ஆதவன்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...

உங்களின் கதையெழுதும் நடையைப் பார்த்தால் வரலாற்று கதைகளில் மிக்க கைதேர்ந்தவர் போலிருக்கிறதே!! பலே பலே!! (ஹி..ஹி..உங்க கதையைப் படிச்ச யெபக்ட்டு)
//

ஆமாம் வரலாற்றுக் கதைகளைப் படிப்பதில் ;-)

//
(ஹி..ஹி..உங்க கதையைப் படிச்ச யெபக்ட்டு)
//

நல்ல யெபக்டு... தொடர்ந்து ரிப்பீட்டுங்க:-))

Anonymous said...

GOOD GOING

CA Venkatesh Krishnan said...

Thanks venkatesh

Anonymous said...

excellent

Anonymous said...

nice

CA Venkatesh Krishnan said...

//
பெயரில்லா கூறியது...
excellent

//

thanks பெயரில்லா

CA Venkatesh Krishnan said...

//
Ramesh கூறியது...
nice
//

thanks ramesh

Anonymous said...

very good going. keep it up.

CA Venkatesh Krishnan said...

//
suba கூறியது...
very good going. keep it up.
//