Wednesday, February 25, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் - முதல் பாகம்

முதல் பாகம் - திரும்பிப் பார்க்கிறோம்:

தமிழகத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்த தமிழரசர்களின் ஆட்சி, தமிழகம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பிடியில் வீழ்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் தமிழர்களால் ஆளப்படாத நிலை, இடையே தில்லி சுல்தானின் பிரதி நிதியான மாலிக் கஃபூரின் படையெடுப்பு, ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த சரித்திரத் தொடர். இது வரை வந்த பகுதிகளின் சுருக்கம் கீழே தரப் பட்டுள்ளது.

===

காஞ்சிக் கடிகையில் பயின்ற மாணாக்கர்கள் பாண்டிய இளவல் வீர பாண்டியன், திருவெள்ளரையைச் சேர்ந்த இளவழுதி, ஹொய்சள நாட்டு இளவரசன் வல்லாளன், காடவ வமிசத்து கோப்பெருஞ்சிங்கன் மற்றும் ஹரிஹர ராயன், புக்க ராயன் ஆகியோர். கடிகையின் ப்ரதானாசாரியார் பாஸ்கராசாரியார். மாதவன் என்பவன் அங்கு துணை ஆசானாக இருந்து வந்தான். இவர்களுடைய வித்யாப்பியாச முடிவில் சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்த ஆசாரியார் பாதியிலேயே நிறுத்திக் கொள்கிறார். குழம்பிய மாணாக்கர்களுக்கு தில்லையில் இதைப் பற்றி சொல்வதாகக் கூறுகிறான் மாதவன்.

மதுரையில் குலசேகரப் பாண்டியரின் மகன்களான வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் அரியணைப் போட்டி இருந்து வருகிறது. அங்கு செல்ல விருப்பமில்லாத வீர பாண்டியன் இளவழுதியுடன் திருவெள்ளரை செல்கிறான். அங்கு இளவழுதியின் தந்தை மாராயர் மூலமாக சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூருடன் இணைந்து மதுரையைக் கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததைத் தெரிந்து கொள்கிறான். இடையில் இளவழுதியின் தங்கை கயல்விழியுடன் காதல் அரும்புகிறது. வீர பாண்டியனும் கயல்விழியும் மதுரை செல்கின்றனர். இளவழுதியும் தன் மாமன் மகள் தேன்மொழியின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான். தேன்மொழியின் மூலம்தான் சுந்தர பாண்டியன் மற்றும் மாலிக் கஃபூரின் சதி அம்பலமாகிறது.

மாராயர் இளவழுதியை திருவரங்கத்திற்கு அனுப்பி வல்லாளனைச் சந்திக்கும்படியும் அவனது உதவியை வீரபாண்டியனுக்காகக் கேட்கும் படியும் சொல்கிறார். அங்கு வேதாந்த தேசிகரது மடத்தில் , வல்லாளன் வீர பாண்டியனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். ஆனால் வல்லாளனை நம்ப வேண்டாமென்று தேசிகர் கூறுகிறார். இளவழுதியைக்கு மிக முக்கியமான பணி இருப்பதாகத் தெரிவிக்கிறார் தேசிகர்.

மாராயர் கொல்லிமலையில் ஒரு ரகசியப் படையைத் திரட்டி பயிற்சியளித்து வருகிறார். அந்தப் படைக்கு பயிற்சியளிப்பது தேன்மொழிதான் என்ற உண்மை இளவழுதிக்குத் தெரியவருகிறது. அங்கு சென்ற இளவழுதி படைக்கு மேலும் பயிற்சியளிப்பதுடன் தேன்மொழியுடனும் உல்லாசமாக இருக்கிறான்.

மதுரை சென்ற வீர பாண்டியன், குலசேகர பாண்டியரைச் சந்திக்கிறான். அவனது சகோதரன் சுந்தர பாண்டியன் மற்றும் மாமன் விக்ரம பாண்டியன் ஆகியோரோடு தற்காலிக சமரசம் ஏற்படுகிறது. மதுரைக்கு வந்த மாலிக் கஃபூரைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிடுகிறான் சுந்தர பாண்டியன்.

மார்கழித் திருவாதிரை அன்று வீர பாண்டியன் இளவழுதி, கோப்பெருஞ்சிங்கன் மற்றும் வல்லாளன் ஆகியோர் தில்லையில் மாதவனைச் சந்திக்கின்றனர். மாதவன் போர் முறைச் சக்கர வியூகம் குறித்து மிக விளக்கமாகத் தெரிவிக்கிறான்.

அதைக் கேட்டு வீர பாண்டியன், வல்லாளன் மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் மிக்க மகிழ்ச்சியடைந்து அவ்விடத்தை விட்டு அகல்கின்றனர். இளவழுதிக்கு மட்டும் ஆசாரியார் சொன்ன சக்கர வியூகம் அதுவல்ல என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதைத் தெரிந்து கொண்ட மாதவன் இளவழுதிக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக விளக்குகிறான்.


மதுரையில் குலசேகரப் பாண்டியருடைய உடல் நிலை திடீரென மோசமாகிறது. வீர பாண்டியன், சுந்தர பாண்டியன் மற்றும் விக்ரம பாண்டியன் ஆகியோரை அழைத்து அடுத்து வீர பாண்டியனே அரசாள வேண்டும் என்று கூறி உயிர் துறக்கிறார் குலசேகர பாண்டியர். ஆனால் சுந்தர பாண்டியன் மற்றவர்களை சரிக்கட்டி அவனே அடுத்த வாரிசு என்று எல்லோரையும் கூறும்படி செய்து விடுகிறான். ஒன்றும் செய்யவியலாத வீர பாண்டியனும், விக்ரம பாண்டியனும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

=====

இத்துடன் சக்கர வியூகத்தின் முதல் பாகம் நிறைவுறுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து.... மாலிக் கஃபூரின் அதிரடிகளுடன்

=====

இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் என்று உறுதியளிக்கிறேன்.

=====

3 comments:

CA Venkatesh Krishnan said...

test

☀நான் ஆதவன்☀ said...

இதுவும் நல்லதுதான். புதுசா படிக்கிறவங்களுக்கு...

(ஆணி அதிகம்னு எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா....)

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
இதுவும் நல்லதுதான். புதுசா படிக்கிறவங்களுக்கு...

(ஆணி அதிகம்னு எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்கப்பா....)
//

நாங்க சமாளிப்புத் திலகம்னு பட்டம் வாங்கினவங்க தெரியும்ல...