Saturday, July 25, 2009

வானவில் 26.07.2009

அன்பு நெஞ்சங்களே! மீண்டும் ஒரு வானவில் பதிவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

====

1. மேட்டூர் விரைவாக நிரம்புகிறது என்பது மகிழ்ச்சிதரும் செய்தி. கே.பி.ஆரும், கபினியும் எஃப். ஆர். எல்.ஐ தாண்டிவிட்டதால், பெரியமனது பண்ணி தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள்.
இந்தத் தண்ணீர் வருவதைக் கருத்தில் கொண்டு மேட்டூரைத் திறந்து விட்டால், ஆடியிலேயே சம்பா சாகுபடியாவது டெல்டாவில் முழுமையாக நடக்கும் என்று நம்பலாம். இன்றைய செய்தித்தாளில் ஆடிப்பெருக்கைக் கருத்தில் கொண்டு மேட்டூர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இல்லையேல் சம்பாவும் சம்போதான்.

=====

2. கடந்த வாரம் மும்பை சென்றிருந்த போது அங்கு நல்ல மழை பெய்தாலும் அங்கிருந்தவர்கள் இந்த முறை மழை குறைவுதான் என்றார்கள். பி.எம்.சி. மராமத்துப்பணிகளை நன்றாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் அங்கே வெள்ளம் தேங்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, டிராஃபிக் ஜாம் ஆகி, லோக்கல் டிரெயின்கள் நின்றால்தான் நல்ல மழையாம்! அப்படி ஆனால் உடனே பி.எம்.சியைப் பிடித்து ஏறி விடுவார்கள்.

முன்னால் போனால் முட்டும், பின்னால் வந்தால் உதைக்கும்!!

====

3. போரூர் சந்திப்பு மிகக் குறுகலான ஒன்று. அதனாலேயே பெரும்பாலான சமயங்களில் டிராஃபிக் ஜாம் ஆகிவிடும். கத்திப்பாராவிலிருந்து போரூர் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து போரூர் வரையிலும், நான்கு வழிச் சாலை ஆகிவிட்டாலும், போரூர் ஜங்க்ஷன் சிறியதாகையால் ஜாம் தொடர்கதையாகிவிடுகிறது. இதைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது என்றும் ஆனால் வேலைதான் துவங்கவில்லை என்றும் சொன்னார்கள். நேற்று அந்தப் பகுதி கவுன்சிலர் பெண்மணி ஒருவர் ஒலிபெருக்கி மூலம் அனைவரையும் கையெழுத்து இயக்கத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார். பெரும்பாலானோர் தன்னார்வத்துடன் கையெழுத்திட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

நல்லது செய்து நல்லது நடந்தால் நல்லதுதானே!!

====

4. இன்றுள்ள நிலைமையில் சென்னையைத் தாண்டி சிங்கப்பெருமாள் கோவில், மரக்காணம், ஸ்ரீபெரும்புதூர் என்று மெகா ஹவுசிங் பிராஜக்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டிடத்தின் வரைபடங்களும் பிரமிப்பூட்டுகின்றன. ஆனால் எந்த அளவுக்கு இவை வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதில் இன்வெஸ்ட் செய்துள்ள சிறு முதலீட்டாளர்கள் உண்மையிலேயே ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எதிர் காலத்தில் மதிப்பு உயரலாம். எப்போது என்பது கேள்வி...

வருவது வரும் போவது போகும். வருவது போகாது. போவது வராது!!

===

5. நங்க நல்லூர் பகுதியில் புதிததாக உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது. நங்க நல்லூர் பேருந்து நிலையத்திற்குள் செயல்படுகிறது. பெரும்பாலும் மகளிர் சுய உதவிக் குழுவினர்தான் இதில் கடை வைத்துள்ளனர். மற்ற உள்ளூர் கடைகளை விட மிக மலிவான விலையில் கிடைக்கிறது. உண்மையிலேயே நல்ல முயற்சி. ஒரே குறை. சிறியதாக இருப்பது.

சிறுகக்கட்டி பெருக வாழ வேண்டும்!

===

6. ஆடித்தள்ளுபடி அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதிய விஷயமாக ஒரு பிராண்டட் சர்ட் வாங்கினால் இரண்டு இலவசம் என்ற அதிரடித் திட்டத்தை முதலில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் துவக்கியது. அவர்கள் சியாராம் பிராண்டு சர்டுகளை அளித்தனர். இப்போது சரவணா செல்வரத்தினத்தில் பீட்டர் இங்க்லாண்ட், லூயி பிலிப் கூட இந்தத் திட்டத்தில் அளிக்கிறார்கள். அப்போது இது வரை எம்.ஆர்.பி.யில் வாங்கியவர்கள் எல்லாம் கே...களா??

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் உண்டு.

====

7. சிறப்புக் கவிதை எழுதாவிட்டால் அது இந்த மாதிரிப் பதிவுகளின் இலக்கணத்தை மீறிய செயலாகும். அதை நான் விரும்பாததால் ஒரு கவிதை.

காலை முதல் மாலை வரையிலும்
மாலை முதல் காலை வரையிலும்
எப்போது பார்த்தாலும்
எங்கு பார்த்தாலும்
நீ
புதிதாகவே இருக்கிறாய்...

====

மீண்டும் மற்றுமொரு வானவில்லில் சந்திப்போம்.

வானவில்

8 comments:

☀நான் ஆதவன்☀ said...

பச்ச மிளகாய் மாதிரி சிறுசா இருந்தாலும் விசயம் எல்லாம் காரம் அதிகம் பல்லவன். கடைசியில(கவிதை) உப்பு மட்டும் நமக்கு ஒத்துக்கல :)

தொடரட்டும் உங்கள் வானவில்..

☀நான் ஆதவன்☀ said...

ஒட்டு போட்டாச்சு :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//லோக்கல் டிரெயின்கள் நின்றால்தான் நல்ல மழையாம்!//

அது....!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எதிர் காலத்தில் மதிப்பு உயரலாம். எப்போது என்பது கேள்வி...//

ஆஹா...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அப்போது இது வரை எம்.ஆர்.பி.யில் வாங்கியவர்கள் எல்லாம் கே...களா??//

அதானே...

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்!!

CA Venkatesh Krishnan said...

நன்றி தல!!

CA Venkatesh Krishnan said...

வந்தவங்களுக்கு நன்றி~~