Saturday, July 11, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .4

நண்பர்களே! சென்ற பதிவுகளில் திரைக்கதையைப் பற்றி ஓரளவு அறிமுகப்படுத்திக் கொண்டோம். இனி தொடர்ந்து பார்ப்போம்.

சென்ற பதிவில் காமெடி, டிராஜெடி என்று இரு பிரிவுகளைப்பற்றி பார்த்தோம். காமெடி என்றால் சினிமா வழக்கில் நாம் நினைக்கும் காமெடி அல்ல. பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட மேம்பட்ட நிலையில் கதா நாயகன் இருந்தால் அது காமெடி படம்!

படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட கீழான நிலையில் அதாவது அவல நிலையில் படத்தின் முடிவில் இருந்தால் அது டிராஜெடி!

=====

சரி, சென்ற முறை த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் திரைக்கதை அமைப்பைப் பற்றி பார்த்தோம். இப்போது மற்ற முறைகளையும் பார்ப்போம்.

திரைக்கதை ஒரு ஹீரோவை மையமாக வைத்துத்தான் எழுதப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிவோமல்லவா? அந்த அடிப்படையில் கீழ்கண்ட திரைக்கதை அமைக்கும் முறைகள் உள்ளன.

1. கதா நாயகனின் பயணம்
2. சீக்வென்சிங்
3. ஸிட் ஃபீல்ட் மாடல்

இவையனைத்திற்கும் த்ரீ ஸ்ட்ரக்சர் தான் அடிப்படை. இனி இந்த திரைக்கதை அமைப்பு முறைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

=====

1. கதா நாயகன் பயணம்.

நமது கதைகள் பெரும்பாலும் கதா நாயகன் சார்ந்துதான் அமையப்பெற்றிருக்கும். அவனது சாதனைகளும் சோதனைகளும்தான் கதையை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் இந்தத் திரைக்கதை அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த மாதிரி திரைக்கதையை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அ. கதா நாயகனை எதிர் கொள்ளும் சவால்: இந்த சவால் அவனாகவே ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கலாம். அல்லது அவன் மீது திணிக்கப் படலாம். எது எப்படி இருந்தாலும், அமைதியான வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வை மையப்படுத்தும் பகுதி இது.


ஆ. அந்த சவாலை சமாளிக்கும் போது ஏதிர்படும் சங்கடங்கள்: சவாலை வென்றாக வேண்டிய சூழ்நிலையில் கதாநாயகன் என்னென்ன சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இந்தப் பகுதியில் தெரிவிக்கப் படும். சங்கடங்களின் தாக்கம் அதிகமாகும் போது ஹீரோ அதிக அளவில் மதிக்கப் பெறுகிறான்.


இ. இந்தப் பாதையில் கதா நாயகனுக்குக் கிடைக்கும் புதிய சக்தி அல்லது யுக்தி: சங்கடங்களை எதிர்கொள்ளத் தேவையான சக்தி சமயத்தில் கிடைக்கும் போது ஹீரோவின் பயணம் சற்று சுலபமாகிறது. இந்தப் பகுதி மிகஆழமாக அலசப்படும் போது ஹீரோவின் இமேஜ் அதிகரிக்கிறது. இந்தப் பகுதிதான் படம் பார்க்கும் மக்கள் தங்களை அந்தப் படத்துடன் ஒப்பிட்டுக்கொள்ள (ரிலேடிங் ஒன்செல்ஃப் டு தி மூவி) உதவுகிறது. எந்த அளவு ஒரு ரசிகன் தன்னைப் படத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறானோ அந்த அளவு அவன் அந்தக் கதையுடன் ஒன்றி விடுகிறான். ரசிகர்கள் கதையுடன் ஒன்றும் போது திரைப்படம் இயல்பாகவே வெற்றியடைகிறது!!


ஈ. புதிய சக்தி கொண்டு சவாலை முறியடித்தல் அல்லது வெற்றி பெறுதல்: இது க்ளைமாக்ஸ் எனப்படுகிறது. தனது அடிப்படைத் திறமை, சவால் காரணமாக தான் அனுபவித்த துன்பங்கள், புதிய சக்தி கொடுத்த நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், அவனது திறமை வெளிப்பட்டு சவாலை முறியடித்து வெற்றி பெறும் பகுதி இது. இதன் மூலம் கதா நாயகனின் பயணம் நிறைவு பெறுகிறது. அத்துடன் கதையும் முடிவடைகிறது.

இதுதான் கதா நாயகன் பயணம் என்ற முறையில் அமைக்கப் படும் திரைக்கதைகளின் அமைப்பு. இந்த வகையிலும் படம் பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? ஆனால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள் தான் நம் நெஞ்சில் நினைவாடும்!!!

===

இது த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது??

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில், சூழ் நிலையைப் புரியவைப்பது ஒரு பெரும் பகுதி.

ஆனால், அப்படித் தேவையில்லை. கதையுடனான போக்கிலேயே சூழலைப் புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் கதா நாயகனின் பயணம் என்ற முறை ஏற்பட்டது. சூழலை அதன் போக்கிலேயே காட்டி, மெல்ல மெல்ல நம்மை திரைக்கதைக்குள் இழுக்கும் முயற்சி இது.

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் ஹீரோ சவாலை நேரடியாக வெல்வதாகக் காட்டும் முயற்சி நடைபெறும். இங்கு அப்படியல்ல. ஹீரோ சாமானியமானவன். ஆனால் அவன் எதிர் கொள்ளும் சவாலைச் சமாளிக்க அவனுக்கு ஒரு புதிய சக்தி தேவைப் படுகிறது. அந்த புதிய சக்தி எப்படி அவனுக்குக் கிடைக்கிறது. அதை அவன் எப்படி பயன் படுத்துகிறான் என்பது போன்ற நிக்ழச்சிகள் விரிவாக அலசப்படும் போது அந்தத் திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது.

இதுதான் த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சருக்கும் ஹீரோ ஜர்னிக்கும் உள்ள வேறு பாடு. இந்த மாதிரி திரைக்கதைகளில் லாஜிக் அதிகமாக இருக்க வேண்டும். இது சூப்பர் ஸ்டார்களுக்கும் சூப்பர் ஸ்டாராக நினைப்பவர்களுக்கும் ஒத்துவராத மாடல். அதனால்தான் இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழில் வருவதில்லை.

===

இப்போது நாம் முதலில் பார்த்த கதையை இந்த முறையில் திரைக்கதையாக அமைத்துப்பார்த்தால்,

1. சவால் பகுதி: நேரடியாகவே கதா நாயகன் ஏமாற்றப்படும் காட்சிகளைக் காட்டிவிடலாம். அதன் ஊடாக களனை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் போது முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழும்.

2. சங்கடங்கள் பகுதி: அந்த சவால் காரணமாக அவன் நகரம் நோக்கி வந்த காரியம் நிறைவேறாமல் போகிறது. அல்லது அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது.

3. புதிய சக்தி: அந்த எதிரிகளை எதிர் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது. (அவர்கள் தொழிலில் போட்டியாக வருவது போன்றவை). மேலே சொன்னது போல் இங்கே லாஜிக் இடித்தால் அது த்ரீ ஆக்ட் ஆகிவிடும். இது எந்த அளவுக்கு மக்களைக் கவர்கிறதோ அந்த அளவுக்குத் திரைக்கததை வெற்றி பெறும்.

4. சவாலை முறியடித்தல் வெற்றி பெறுதல்: இது இறுதியான தீர்வாக அமைந்து, கதா நாயகனின் வாழ்க்கைப்பயணத்தில் அமைந்த தடைக்கற்கள் தகர்த்தெறியப்பட்டு அவன் வெற்றியுடன் மேலும் முன்னேறுகிறான் என்று நிறைவு செய்யும் பகுதி. இதை க்ரிஸ்ப் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். வசனங்களால் இழுக்காமல், காட்சியமைப்புகளால் மெசேஜ் சொல்லும் போது ரீச் அதிகமாக இருக்கும்.

இப்படியாக ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் ஒரு ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வருவதோடு மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்கவும் செய்வான்.

===

சரி நண்பர்களே, அடுத்த பகுதியில் மற்ற திரைக்கதை முறைகளையும் அலசுவோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவதன் மூலம் இந்தப் பதிவுத் தொடரை அனைவரும் படித்துப் பயனடையுமாறு செய்யலாம்.

நன்றி...

(தொடரும்...)

7 comments:

ஆ.ஞானசேகரன் said...

புரியும்படி இருக்கு வாழ்த்துகள்

CA Venkatesh Krishnan said...

சூடா பதிவிட்ட உடனே சூடா கருத்து சொன்ன ஞானசேகரனுக்கு நன்றிகள் பல !!!

Jackiesekar said...

ன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்

Jackiesekar said...

நன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்

☀நான் ஆதவன்☀ said...

தலைவரே உங்க தொடர்கள் எல்லாத்தையும் புத்தகமா போடலாம் போலயே!!

இரண்டு ஓட்டும் போட்டாச்சு பல்லவன். வாழ்த்துகள் :)

CA Venkatesh Krishnan said...

நன்றி ஜாக்கி சேகர்!

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன்.

அந்த முயற்சியிலயும் இறங்கிடலாம்!