Thursday, August 20, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 14

அத்தியாயம் 14: குவலாலா. . கோட்டைத்தலைவன்..

ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.

அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.

====

அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )

[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"

கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.

=====

குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.

குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.

திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.

அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.

"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.

"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,

"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.

"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"

"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"

"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.

அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.

"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.

(தொடரும்)

13 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன்//

அப்படி என்றால் இவனோடு அந்த வம்சம் ராஜ்யத்தை இழக்கப் போகிறதா தல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன.//

தங்கம் உள்ளே பொதிந்து கிடக்கும் இடமல்லவா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"ஆதவா, அங்கே பார்" //

அதுதானே எங்கே போனார் நான் ஆதவன்?

Sathis Kumar said...

ஹொய்சள வம்சத்தின் கடைசி வாரிசு?? முடிவை தெரிவிப்பதுபோல் அல்லவா இருக்கிறது?

☀நான் ஆதவன்☀ said...

நான் கேட்க வேண்டியத சுரேஷ்,ஒற்றன் இரண்டு பேரும் கேட்டுட்டாங்க பல்லவன்.

//"ஆதவா, அங்கே பார்" //
அடடா எனக்கும் ஏதோ ரோல் குடுத்திருக்கீங்க போல. பலே பலே :)

☀நான் ஆதவன்☀ said...

//அதுதானே எங்கே போனார் நான் ஆதவன்?//

தல நான் பல்லவனுக்கு பொட்டி கொடுத்தது வேலை செய்யுது தல....நீங்களும் முயற்சி பண்ணி பாருங்களேன் :)

CA Venkatesh Krishnan said...

Blogger SUREஷ் (பழனியிலிருந்து)..
//
அப்படி என்றால் இவனோடு அந்த வம்சம் ராஜ்யத்தை இழக்கப் போகிறதா தல...,//

ஆமா தல

CA Venkatesh Krishnan said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//"ஆதவா, அங்கே பார்" //

அதுதானே எங்கே போனார் நான் ஆதவன்?///

அவர் பிஸியாயிட்டார்...

CA Venkatesh Krishnan said...

/// ஒற்றன் said...

ஹொய்சள வம்சத்தின் கடைசி வாரிசு?? முடிவை தெரிவிப்பதுபோல் அல்லவா இருக்கிறது?///

வாங்க சதீசுகுமார்.. ப்ரொஃபைல் பேர மாத்தி வச்சிக்கிட்டீங்க போல இருக்கே!

இது ஹொய்சள வமசத்தின் முடிவுதான். சக்கரவியூகத்தின் முடிவு அல்ல. இந்தத் தகவலுக்கும் சக்கரவியூகத்தின் போக்குக்கும் தொடர்பு இல்லை!

CA Venkatesh Krishnan said...

//
☀நான் ஆதவன்☀ said...
நான் கேட்க வேண்டியத சுரேஷ்,ஒற்றன் இரண்டு பேரும் கேட்டுட்டாங்க பல்லவன்.
//

பதில் ஓக்கேவா ஆதவன்?

////
//"ஆதவா, அங்கே பார்" //
அடடா எனக்கும் ஏதோ ரோல் குடுத்திருக்கீங்க போல. பலே பலே :)
////

ம். வெயிட்டான ரோல். (ரோடு ரோலர விட வெயிட்ட்ட்ட்டா இருக்கும்!!)

CA Venkatesh Krishnan said...

/// ☀நான் ஆதவன்☀ said...

//அதுதானே எங்கே போனார் நான் ஆதவன்?//

தல நான் பல்லவனுக்கு பொட்டி கொடுத்தது வேலை செய்யுது தல....நீங்களும் முயற்சி பண்ணி பாருங்களேன் :)///

பொட்டி???

வாட் பொட்டி?
வேர் பொட்டி?
வொய் பொட்டி?
ஹவ் பொட்டி?
வாட் இஸ் இன் த பொட்டி??

இரவுப்பறவை said...

திரு இளையபல்லவன் அவர்களுக்கு...

சக்கர வியுகம் மிகவும் அருமை...
நேற்று மதியம் தொடங்கி இன்று காலைக்குள் இதுவரை வெளிவந்த அணைத்து(௨௪+௧௪) பாகங்களையும் படித்துவிட்டேன்...
கல்கியின் தீவிர ரசிகனான நான், பல இடங்களில் கல்கியையும் சாண்டில்யனையும் நினைவு படுத்திக்கொண்டே இருந்தேன்...(இது நிச்சயமாக உயர்வு நவிற்சி அணி அல்ல )

முதலில் இந்த கதையை பற்றி தன பின்னோட்டத்தில் கூறியிருந்த நரசிம் அவர்களுக்குதான் நான் நன்றி உரைக்க வேண்டும்.. இல்லை என்றால் இப்படி ஒரு வரலாற்று தொடரை இழந்திருப்பேன்..

ஏற்கனவே "மாறவர்மன்" படித்துவிட்டு நரசிம்-ன் அடுத்த பாகத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்...

இனி நம் சக்கர வியூகத்திற்காகவும்....

மிகவிரைவில் அடுத்த பாகம் வெளியிட்டு என் ஆவலை பூர்த்தி செய்யவும்...
என்னால் பொறுமை காக்க முடியாது...

இரவுப்பறவை

அகில் பூங்குன்றன் said...

அடுத்த பாகம் எப்போங்க வரும்......