Wednesday, November 5, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...5

அத்தியாயம் 5 - தேன் மொழி

அன்று விடியலுக்கு முன்னரே புறப்பட்ட வீர பாண்டியனும், இள வழுதியும், மிக வேகமாக திருவெள்ளரை நோக்கி புரவிகளில் பயணித்தனர். கார் காலத்தின் துவக்கமாதலால் வெயிலின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாலும் இளவழுதியின் கவனம் பேச்சில் இல்லை என்பதை வெகு சீக்கிரத்திலேயே கண்டுகொண்டான் வீர பாண்டியன்.

'என்ன இளவழுதி, கவனம் இங்கில்லை போலிருக்கிறதே'

'ஆமாம் வீரா, ஊரில் அனைவரும் எனக்காகக் காத்திருப்பார்கள் அல்லவா? அதுதான்'

'எனக்கென்னவோ வேறு மாதிரி தோன்றுகிறது' என்றான் புன்முறுவலுடன்.

மேலும் ஏதேதோ பேசிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே, இறுதியில் 'சரியாகக் கணித்துவிட்டாயே வீரா. ஆமாம் என் மாமன் மகளைப் பார்க்கும் அவசரம்தான்' என்றான் வழிந்தவாறே.

'அதுதானே பார்த்தேன். சரி அவளைப் பற்றி சொல். போகும் வழியில் அலுப்பாவது தெரியாமல் இருக்கும்'

'என்ன கிண்டலா.. இப்பொழுது ஒன்றும் சொல்லமாட்டேன். நீயே நேரில் வந்து பார்த்துத் தெரிந்து கொள். அங்கு இன்னொரு முக்கியமான நபரும் உள்ளார். அவரிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். எங்கள் இல்லத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். அவரைப் பற்றியும் அங்கே வந்து தெரிந்து கொள்'

'என்ன வழுதி ஒரே புதிராக இருக்கிறதே. சரி சரி உன்னிஷ்டம்.' என்று நிறுத்திய பாண்டியன்

'வழுதி, உன் வீட்டினருக்கு நான் தான் வீர பாண்டியன் என்பது தெரியுமா?'

'என்னுடன் வீர பாண்டியன் பயிலுகிறான் என்பது தெரியும். ஆனால் உன்னை யாரும் பார்த்ததில்லை.'

'நல்லது. சில பல காரணங்களுக்காக என்னை வீர பாண்டியனாக அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆகவே என்னை மதுரை வணிகன் சாத்தனின் மகன் வீரன் என்று கூறிவிடு.'

சற்று யோசித்த இளவழுதி 'வீரா, நீ மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாய் என்று எண்ணுகிறேன். சரி, இனிமேல் நீ மதுரை வணிகன் சாத்தனின் மகன் வீரன்'

அதற்குப் பிறகு நண்பர்களுக்கிடையில் அதிக பேச்சுவார்த்தையிருக்கவில்லை. இளவழுதி மாமன் மகளின் நினைவுடனும், வீரன் மதுரை நிலையைப் பற்றிய சிந்தனையுடனும் மிகுதிப் பயணத்தைக் கழித்தனர்.

சரியாக மூன்றாம் நாள் காலையில் அவர்கள் திருவெள்ளரையை அடைந்தனர்.

====

திருவெள்ளரை சேந்தன் நக்கன் மாராயன் அப்பகுதியின் மிகப் பெரிய வேளாளர். மூன்றாம் ராஜராஜ சோழனின் படையில் பணி புரிந்ததற்காக மாராயன் பட்டம் பெற்றவர். மூன்றாம் ராஜராஜனின் கடைசிப் போருக்கு முந்தய காடவ கோப்பெருஞ்சிங்கனுடனான போரில்அவரது ஒரு கரம் துண்டிக்கப் பட்டிருந்தது.

சோழப் படையில் இருந்ததாலும், மிகப் பெரிய நிலக்கிழாராக இருப்பதாலும், அப்பகுதியில் சேந்தன் நக்கனுக்கு மிக நல்ல பெயரும், மரியாதையும் நிலவியது. திருவெள்ளரைக் கிழார் என்றும், சோழ மாராயன் என்றும் அறியப் பட்டவர். இவரது ஒரே புதல்வன் தான் நக்கன் இளவழுதி.

அன்று ஊருக்கு வந்த இளவழுதியை நலம் விசாரிப்பதிலும், அவனது அனுபவங்களைக் கேட்பதிலுமாக இருந்ததால் முதலில் யாரும் வீர பாண்டியனைப் பார்க்கவில்லை. அவனுக்கு அது நல்லதாகவே பட்டது. அனைவரையும் கவனிக்க முடிந்தது. சுற்றி முற்றும் பார்க்க முடிந்தது. அப்படிப் பார்க்கும் போதுதான் ஒரு சாரளத்தின் பின்னால் இரண்டு ஜோடிக் கண்கள் இளவழுதியைப் பார்ப்பதை அறிய முடிந்தது.

அது இளவழுதியின் மாமன் மகள் தேன்மொழியும், தங்கை கயல் விழியும் என்பதைத் தெரிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை வீர பாண்டியனுக்கு.

சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்ட இளவழுதி, அனைவருக்கும் வீரபாண்டியனை, மதுரை வணிகன் சாத்தன் மகன் வீரன் என்று அறிமுகப் படுத்தினான். அவன் தந்தையும், தேன்மொழியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திய பின், 'எங்கள் இல்லத்தின் முக்கியமான நபர் இவர்தான். பெயர் கயல்விழி. என் தங்கை. மற்றதெல்லாம் போகப் போகத் தெரிந்துகொள்வாய். இவளுக்குத் திருமணம் செய்துவிட்டால் எங்களுக்கு விடுதலை. இவளை மணப்பவன்தான் பாவம்.' என்றான் கிண்டலுடன்.

'அண்ணா, அவரைப் பார்த்தாலே நீ சொல்வதை நம்பாதவர் போல் தெரிகிறது. சற்று நிறுத்து' என்ற கயல்விழி, 'அய்யா, உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்குத் தேவையானதை என்னிடம் கேட்டுப் பெறலாம்' என்றாள் பாண்டியனைப் பார்த்து.

'நிச்சயமாக தேவையானதைக் கேட்டுப் பெறுவேன்.' என்றான் பாண்டியன் அர்த்த புஷ்டியோடு.

மறுபுறம், தேன்மொழியோடு பேச எவ்வளவோ முயன்றும் இளவழுதிக்குத் தோல்வியே கிட்டியது. அவன் தங்கை கயல்விழியும் அவன் கேட்டதை சட்டையே செய்யவில்லை. அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை.

'அம்மா நான் கோவிலுக்குச் சென்று வருகிறேன். வீரா நீ இங்கேயே ஓய்வெடுத்துக்கொள். உன்னைப் பிறகு கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன். சாவகாசமாகப் பார்த்தால் நிறைய தெரிந்து கொள்ளலாம்.' என்றான் சத்தமாக. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்திருக்கும்.

====

திருவெள்ளரை புண்டரிகாக்ஷப் பெருமாள் கோவில் குளக் கரையில் காத்திருந்தது வீண் போகவில்லை.

'அத்தான், நலமா. நான் தான் தேன் மொழி. ஞாபகமிருக்கிறதா' என்றாள் அங்கு வந்த அந்த பருவப் பெண்.

பெண்மையின் அத்துணை அணிகலன்களும் அவளிடம் பரிபூர்ணமாய் வியாபித்திருந்தன. அடடா அந்தக் கண்கள் ஒரு வினாடி ஓரிடத்தில் நிற்காமல் அலை பாய்கிறதே. அந்தத் துடிக்கும் அதரங்கள் ஏதோ சொல்லத்தான் அப்படித் துடிக்கிறதோ. அவள் பேசியது காதில் தேன் வந்து பாய்ந்தது போலல்லவா இருக்கிறது. அதற்கு மேலும் (அல்ல கீழும்) உள்ளவற்றை கவனிப்பதா, கண்களால் சுவைப்பதா, வர்ணிப்பதா. இத்துணை ஆண்டுகாலம் பள்ளியில் கழித்துவிட்ட இளவழுதியின் மனமும், கண்களும் கட்டவிழ்த்துவிட்ட காளைகளாக அலைபாயத் தொடங்கின.

அது ஆலயம் என்பதாலும், பொதுமக்கள் வந்து செல்லும் இடம் என்பதாலும் ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டான். இங்கே வரச் சொன்னோமே என்று தன்னையே நொந்து கொள்ளவும் செய்தான். இவ்வளவிலும் அவள் கேள்விக்கு விடையளிக்கவும் தவறவில்லை.

'இது என்ன வார்த்தை தேன்மொழி. மறந்தால் தானே நினைப்பதற்கு.'

'ஆமாம் அனைவரும் கூறுவதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். புதுமையாக ஏதாவது சொல்லுங்கள்'

'நீ மட்டும்தான் புதுமை. எனவே உன்னைத்தவிர அனைத்தும் பழமைதான். நான் என்ன சொன்னாலும் அது பழையதாகத்தான் இருக்கும்.'

'சரி சரி. விட்டால் பேசிக்கொண்டே இருப்பீர்களே. காஞ்சியிலிருந்து எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்'

'என்ன அப்படிக் கேட்டுவிட்டாய் தேன் மொழி, உனக்காக என்னையே கொண்டு வந்திருக்கிறேனே. இது போதாதா'

'அய்யோ, வழிகிறதே. சற்றுத் துடைத்துக் கொள்ளுங்கள்'

'நீதான் துடைத்து விடேன். உன் மேலாடையால்'

'நன்றாயிருக்கிறது. இது கோயில், பகல் என்பதை உணர்ந்துதான் பேசுகிறீர்களா'

'அப்படியானால் வீட்டில் இரவில் வைத்துக் கொள்வோமா. அதுவரை இப்படியே இருந்து விடுகிறேன்' என்றவன் அவள் கையைப் பற்ற முயன்றான்.

சற்று விலகிய அவள், 'காஞ்சிக்கு சென்றதன் பலன் கைமேல் தெரிகிறது. இதுதான் உங்கள் கடிகையில் கற்றுக் கொடுத்தார்களோ. இதெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்களுடன் வந்திருப்பவர் யார்'

'பிறகு எப்போது. இன்றுதானே.'

'சரி. பார்க்கலாம். முதலில் என் கேள்விக்கென்ன பதில்'

'மிக்க நன்றி, தேன்மொழி. அவனைப் பற்றிதான் எல்லோருக்கும் சொன்னேனே.'

'அது அனைவருக்கும் சொன்னது. என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள்'

'உண்மையா.'

'ஆம். அவர் வணிகரின் மகனல்ல. ஒரு அரச குலத் தோன்றல் என்பது தெள்ளத் தெளிவாக எனக்கும், உங்கள் தந்தைக்கும் விளங்கிவிட்டது. இனி அவர் யார் என்பதை நீங்களாகச் சொல்கிறீர்களா, இல்லை அதையும் நாங்களே அறிந்து கொள்ளட்டுமா'

'அடிப்பாவி, என் தந்தைக்கு இதெல்லாம் தெரியாதே, நீதான் ஏதோ
சொல்லியிருக்க வேண்டும்.'

'ஆமாம். அவருக்கு சின்ன சந்தேகம்தான். நான் தான் ஊதிப் பெரிதாக்கினேன்.'

'ஏன் அவ்வாறு செய்தாய். அவன் இங்கு வந்ததே மன நிம்மதியைத் தேடி. அதற்கும் இங்கே இடமிருக்காது போலிருக்கிறதே.' என்று கடிந்து கொண்டான்.

'எவருடைய மன நிம்மதியும் போகக் கூடாதென்றால், சில உண்மைகள் தெரிந்தாக வேண்டும். நீங்கள் இங்கு இல்லாத போது நடந்தவை உங்களுக்குத் தெரியுமா.'

'என்ன ஆயிற்று'

'அது மிகப் பெரிய ஆபத்து. உங்கள் தந்தை அதை உங்களிடம் எக்காரணம் கொண்டும் சொல்லக் கூடாது என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் என்னால் சொல்லாமல் இருக்க முடிய வில்லை. கேளுங்கள்.' ஒவ்வொன்றாகச் சொல்லத் துவங்கினாள்.

காதல் காட்சியை எதிர்ப் பார்த்து வந்த இளவழுதிக்கு அவள் சொன்ன செய்திகளின் மாட்சி கண் முன் விரிந்த போது, தெரிந்தது ஆபத்து, ஆபத்து. வீர பாண்டியனைச் சுற்றியும் அவன் தந்தை குலசேகரனைச் சுற்றியும் பின்னப் பட்டிருந்த கொடிய வலை. அது தமிழகத்தின் தலைவிதியை மாற்றியெழுதும் முயற்சியின் விதையாகப் பட்டது இளவழுதிக்கு. ஏனோ, ஆசாரியார் சொன்ன சக்கர வியூகம் நினைவிற்கு வந்ததை அவனால் தடுக்க முடியவில்லை.


(தொடரும்)

15 comments:

☀நான் ஆதவன்☀ said...

இது என்ன காதல் காண்டமா பல்லவன்? :-)
கதை சூடு பிடிக்க தொடங்கியது போல...
அருமையான நடை பல்லவன்.
அப்புறம் மீ த பஸ்ட்?

☀நான் ஆதவன்☀ said...

அட ஆமா..

Anonymous said...

சுபா,
கல்கியின் சரித்திர நாவல் படிப்பது மா திரி சுவாரஸ்யமாக இருக்கிறது.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
இது என்ன காதல் காண்டமா பல்லவன்? :-)
//
காதல் வீரம் இரண்டும் இருந்தால்தானே கதை சுவையாக இருக்கும் ;-)


//
கதை சூடு பிடிக்க தொடங்கியது போல...
//
இந்த சூடு போதுமா இன்னும் கொஞ்சம் கூட்டலாமா?
//
அருமையான நடை பல்லவன்.
அப்புறம் மீ த பஸ்ட்?
//
நன்றி, நன்றி, நன்றி.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
அட ஆமா..
//

ரிப்பீட்டு....

CA Venkatesh Krishnan said...

//
பெயரில்லா கூறியது...
சுபா,
கல்கியின் சரித்திர நாவல் படிப்பது மா திரி சுவாரஸ்யமாக இருக்கிறது.
//
நன்றி சுபா. அவரைப் படித்த பின் தான் கதை எழுதவேண்டும் என்று தோன்றியது.

Anonymous said...

Good going

Sathis Kumar said...

வணக்கம், மிக அருமையான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்து நாவல் படைத்து வருகிறீர்கள்.. உங்கள் முயற்சி வெற்றிப் பெற வாழ்த்துகள்.

முடிந்த மட்டும் எந்தவொரு எழுத்தாளரின் தாக்கமும் உங்கள் எழுத்துகளில் பிரதிபலிக்காமல், உங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதுவரையில் உங்கள் தொடர் சுவாரசியமாகவேச் செல்கிறது..

மீண்டும் வாழ்த்துகள் அன்பரே..

CA Venkatesh Krishnan said...

//
Venkatesh கூறியது...
Good going
//

Thanks venkatesh

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
வணக்கம், மிக அருமையான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்து நாவல் படைத்து வருகிறீர்கள்.. உங்கள் முயற்சி வெற்றிப் பெற வாழ்த்துகள்.

முடிந்த மட்டும் எந்தவொரு எழுத்தாளரின் தாக்கமும் உங்கள் எழுத்துகளில் பிரதிபலிக்காமல், உங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இதுவரையில் உங்கள் தொடர் சுவாரசியமாகவேச் செல்கிறது..

மீண்டும் வாழ்த்துகள் அன்பரே..
//

நன்றி சதீசு குமார்

தொடர்ந்து வாருங்கள்

narsim said...

கலக்கலாக போய்கொண்டிருக்கிறது.. தொடருங்கள்.. தொடர்கிறேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

Superrrrrrrrrrrrrrrrr

CA Venkatesh Krishnan said...

//
narsim கூறியது...
கலக்கலாக போய்கொண்டிருக்கிறது.. தொடருங்கள்.. தொடர்கிறேன்..
//

மிக்க நன்றி நர்சிம்.

உங்களுக்கும் தொடருங்கள். தொடர்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
உருப்புடாதது_அணிமா கூறியது...
Superrrrrrrrrrrrrrrrr
//

ரொம்ப நன்றி அணிமா.

என்ன ரெண்டு நாளைக்கப்புறம் வர்றீங்க.

thamilselvi said...

romba nandraha ulladu.melum tamil varalatru noval padikka nallador vaaippu. Thanx