Wednesday, November 26, 2008

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...7

அத்தியாயம் 7 - திட்டம்

மாலிக் கஃபூர் என்ற பெயரைக் கேட்டதும் இளவழுதியும், வீரபாண்டியனும் வாயைப் பிளக்கக் காரணமிருந்தது. அந்தக் காலத்தில் தில்லி சுல்தானின் படைத்தளபதியான மாலிக் கஃபூர் ஏற்கனவே ஒரு முறை தேவகிரி யாதவர்களைச் சிறை பிடித்துச் சென்றவன். ஆகவே அனைத்துத் தென்னிந்திய அரசுகளுக்கும் அவனிடம் ஒரு வித வெறுப்பும் எதிர்ப்பும் நிறைந்திருந்தன. அத்தகைய வேண்டா விருந்தாளி ஏன் இங்கு வரவேண்டும்? அதுவும் சுந்தர பாண்டியனுடன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி இருவர் மனதிலும் எழுந்தது.

மேலும் தொடர்ந்த மாராயர், 'அவர்கள் இருவரும் இந்தப் பக்கம் வந்ததோடல்லாமல் எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்' என்று அன்று நடந்த நிகழ்ச்சியை அசை போடலானார்.

=====

அங்கு அழைத்து வரப்பட்ட இருவரிடம் தென்பட்ட களைப்பும், அவர்களின் கிழிந்த உடையும் பல நாட்கள் சரியான உணவு உட்கொள்ளாமலும், வேறு உடை தரிக்காமலும் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியது.

மாலிக் கஃபூர் நல்ல தேகக்கட்டுடன் இருந்தாலும் அவனது உயரம் அவனை ஒல்லியாகக் காட்டியது. முகத்தில் கடுமையைத் தேக்கி நின்றாலும் பெண்மையின் நளினம் அவன் முகத்தில் அவ்வப் போது தாண்டவமாடியது. (மாலிக் கஃபூர் ஒரு திரு நங்கை). அவன் பிறப்பால் இந்து. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாகச் சேர்ந்து அவரது நேசத்தைப் பெற்று இஸ்லாத்தைத் தழுவியவன். மாலிக் கஃபூரின் திறமையைக் கண்ட அலாவுதீன் கில்ஜி அவனை படைத் தளபதியாக நியமித்து தக்காணத்தைப் பிடிக்க ஆணையிட்டார். அதைச் சிரமேற்கொண்டு தேவகிரியை அப்போதுதான் பிடித்திருந்தான் மாலிக் கஃபூர்.

சரியான உயரமும் அருமையான தேகக் கட்டும் படைத்த சுந்தர பாண்டியன் பெயருக்கேற்றார் போல் நன்றாகவே இருந்தான். மேலுக்குப் புன்முறுவலோடு அமைந்திருந்த அவன் முகத்தில் ஒருவித அமைதியின்மையும், குரோதமும் தாண்டவமாடியதைக் கவனிக்கத் தவறவில்லை மாராயர். கொல்லிமலை எல்லையில் வழி தெரியாமல் இருந்த இவர்களை இங்கு அழைத்து வந்தனர் மலை மக்கள். அவர்களுக்கு மாராயர் என்றால் நல்ல மரியாதை. ஆனால் இவர்கள் தான் மாலிக் கஃபூர் மற்றும் சுந்தர பாண்டியன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

'தங்களைப் பார்த்தால் வடதேசத்தவர் போல் தெரிகிறதே' என்று வினவினார் மாராயர்.

'ஆம் நான் வட தேசத்தவன் தான்' என்றான் மாலிக் சுத்தத்தமிழில்.

'நான் வட தேச யாத்திரை செய்து விட்டு வரும் வழியில் இவரை சந்தித்தேன். இவர் தென் தேச யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். நாங்கள் இருவரும் சில காலம் பழகியதில் என் மொழி அவருக்கும் அவர் மொழி எனக்கும் பழகி விட்டது. நாங்கள் மதுரை செல்ல எண்ணியிருந்தோம். நானும் இவரும் கொல்லிமலை வழியாக வரும் பொழுது வழி தவறி விட்டோம். ஒரு நாள் எங்கள் குதிரைகளும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டன. ஒரு வாரமாக மலையில் திரிந்த பின் இந்த மலை மக்கள் உங்களிடம் எங்களைச் சேர்த்தனர். தற்போது மிக அவசரமாக நாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டும். எங்களுக்கு மாற்று உடைகளும் குதிரைகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பணத்தைப் பற்றிக் கவலையில்லை' என்றான் சுந்தர பாண்டியன் அதிகார தோரணையோடு.

கேட்பது உதவியாயினும் இப்படி அதிகாரமாகக் கேட்டது மாராயருக்குப் பிடிக்கவில்லை. மனதிற்குள் கருவிக்கொண்டே, 'அதனாலென்ன. அப்படியே செய்து விடலாம். இருவரும் மிகவும் களைத்திருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டு செல்லலாமே.' என்றார்.

அனைவரும் அவ்வாறு கூறவே, பாண்டிய இளவலுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அவ்வூரின் முக்கியச் சத்திரத்தில் ஸ்நானபானங்களை முடித்துக் கொண்டு குதிரைக்காகக் காத்திருந்தனர் இருவரும். அவர்களுக்கு வேறு ஏதாவது தேவையிருக்குமா என்று அறிந்துவர தேன்மொழியை அனுப்பினார் மாராயர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த தேன்மொழி, உள்ளிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் மாலிக், மதுரை, சுந்தரன் என்ற பெயர் அடிபடவே சற்று நிதானித்தாள். அவர்கள் பேசுவதைக் கேட்கக் கேட்க அடக் கடவுளே, இது என்ன சோதனை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் பேசியது இது தான்.

'சுந்தரா, இப்போது கிளம்பினால் மதுரையை எப்போது அடையலாம்?'

'எங்கும் நிறுத்தாமல் சென்றால், ஐந்து ஜாமத்திற்குள் சேர்ந்து விடலாம்'

'மதுரையில் அதிக காலம் தங்க முடியாது சுந்தரா. இங்கு கொல்லி மலையில் சுற்றியதில் நமது திட்டத்தையெல்லாம் மாற்றவேண்டும் போலிருக்கிறதே.'

'கொல்லிமலை விஜயம் ஒருவிதத்தில் நன்மை என்றுதான் சொல்லவேண்டும் மாலிக். இது போன்ற ஒரு இடம் நமக்கு கடவுளாக அமைத்துக் கொடுத்தது. ஒரு வேளை நமது திட்டம் பாழ்பட்டால், நாம் வர வேண்டிய இடம் இதுதான்'

'உன் சகோதரன் எப்போது மதுரை வருகிறான்? அதற்குமுன் நம் காரியம் முடிய வேண்டும்'

'அவன் விஜயதசமிக்குப் பின்னர்தான் வருவான். அதற்குத்தான் இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே. ஏன் வீணில் அவசரப் படுகிறாய்?'

'இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'

'நீ வீணில் கற்பனை செய்கிறாய் மாலிக். இங்கிருப்பவர்கள் வட நாட்டவர் போல் அல்ல. இங்கு எண்ணித் துணிக கருமம் என்பதில் எண்ணுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள். நான் தான் சற்று வேறு பட்டவன்'

'சரி, மொத்தத்தில் நமது திட்டத்தை மீண்டும் ஒருமுறை விவாதிப்போம். எனக்கு தக்காணத்தில் அமைந்துள்ள ஹொய்சளர்களையும், காகதீயர்களையும் அடக்கி, சுல்தானிய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கட்டளை. இதில் காகதீயர்களை ஓரளவு அடக்கி விடலாம். ஹொய்சளர்கள் இரு அரசுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களில் உன் சகோதரனுடன் பயிலும் வீர வல்லாளனுக்கு தமிழகத்தின் மேல் எப்போதும் ஒரு கண். உன் பாட்டனார் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், ஹொய்சளத்திற்கே சென்று ஆட்சி புரிந்தாரல்லவா?


எனவே, மதுரையில் உன் ஆட்சியைத் துவக்கு. மதுரை பலவீனமடைந்தது போல மேலுக்குத் தோற்றத்தை ஏற்படுத்து. இதுதான் தருணமென்று வல்லாளன் இங்கு படையெடுத்து வருவான். அவனது வடக்கு எல்லை பலவீனப்படும். அது போதும் எனக்கு. அவனது பங்காளி அரசை அழித்து விட்டு, தக்காணத்தில் சுல்தானிய அரசை நிறுவி விடுவேன். அது மட்டுமல்லாமல் அவன் பின்னாலேயே தொடர்ந்து வந்து நசுக்கி விடுகிறேன். '

'மொத்தத்தில் மதுரை எனக்கு, தக்காணம் உனக்கு' - என்று எள்ளலாகச் சொல்லிச் சிரித்தான் சுந்தர பாண்டியன்.

அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டான் மாலிக் கஃபூர்.

(தொடரும்)

6 comments:

நசரேயன் said...

அருமையான நடை ரெம்ப நல்லா இருக்கு.
தொடர்ந்து எழுதுங்கள்

Sathis Kumar said...

மாலிக் கபூர் திருநங்கையா? ஆச்சரியம்!

☀நான் ஆதவன்☀ said...

//சதீசு குமார் சொன்னது…
மாலிக் கபூர் திருநங்கையா? ஆச்சரியம்!//

ஆம் சதீசு குமார். மாலிக் கபூரைப் பற்றி "வந்தார்கள் வென்றார்களில்" படித்ததாக ஞாபகம்...

கதை விருவிருப்பாக செல்கிறது பல்லவன். வாழ்த்துக்கள்

CA Venkatesh Krishnan said...

மிக்க நன்றி நசரேயன், சதீசு குமார், ஆதவன்.

Anonymous said...

Good going.

Anonymous said...

My Tamil Editor azhagi is not working today as my system got updated and I am unable to post the next episode.

Kindly bear for one day.

Thanks
Ilayapallavan