Friday, March 6, 2009

சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 1

அத்தியாயம் 1 - த்வார சமுத்திரம்

நாம் சற்று தமிழகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கிறது. ஹொய்சள நாட்டின் தலை நகருக்கு நாம் நுழைவதை யாரும் தடுத்துவிட முடியாது. துவார சமுத்திரம் என்றும் தொர சமுத்திரம் என்றும் அழைக்கப் பட்ட இந்த இடம் இன்று ஹளபேடு என்று அறியப்படுகிறது.

தற்போது கன்னட நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது சற்று அவசியமாகிறது. நமக்கு அறிமுகமான முதல் கன்னட பரம்பரை கடம்பர்கள் ஆவார்கள். இவர்களது தலை நகரம் வைஜயந்திபட்டணம் எனப்படும் பனவாசி ஆகும். மயூரசன்மன் என்பவனால் நான்காம் நூற்றாண்டில் தோன்றிய இந்த ராஜ்ஜியம்தான் முதல் கன்னட ராஜ்ஜியம் ஆகும். இவர்களுக்குப் பிறகு, வாதாபியைத் தலை நகராகக் கொண்டு சாளுக்கியர்கள் ஆறாம் நூற்றாண்டில் தோன்றினார்கள்.

இந்தப் பரம்பரையின் இரண்டாம் புலிகேசி பல்லவ மகேந்திர வர்மரை வீழ்த்தி, ஹர்ஷவர்த்தனரை நர்மதைக்கு அப்பால் தடுத்து நிறுத்தியவன். பிறகு நரசிம்ம வர்ம பல்லவனால் தோற்கடிக்கப் பட்டு வாதாபி அழிக்கப் பட்டது நமக்கு நன்கு தெரிந்த வரலாறு. இவன் காலத்தில் சாளுக்கியர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர்.

ஆந்திர தேசத்தைச் சேர்ந்த பகுதிகளை கீழைச் சாளுக்கியர்கள் வேங்கி என்ற நகரைத் தலை நகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். பிறகு இவர்கள் சோழர்களுடன் திருமண உறவு பூண்டு அவர்களுக்கு உற்ற தோழர்களாக விளங்கினர். இவர்கள் வமிசத்தில் வந்த இரண்டாம் ராஜேந்திரன்தான் குலோத்துங்க சோழன் என்ற புகழ்பெற்ற அரசன்.

சாளுக்கியர்கள் மீண்டும் வலுப்பெற்று எட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் ராஷ்டிரகூடர்கள். இவர்கள் மாண்யகேதம் (மன்கேட்) என்ற இடத்திலிருந்து ஆட்சி செய்துவந்தனர். இவர்களால் தங்களுடைய தென் கன்னடப் பகுதிகளை சோழர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இவர்களுக்குப் பிறகு வந்த கல்யாணியைத் தலை நகரமாகக் கொண்ட மேலைச் சாளுக்கியர்களுக்கும் தென் கன்னடம் கானல் நீராகவே இருந்து வந்தது. இந்த கால கட்டத்தில் தென் கன்னடத்தில் புதிய பரம்பரை உருவெடுத்தது. இவர்கள்தான் ஹொய்சளர்கள்.

ஆக ஹொய்சளர்கள் காலம் வரை கன்னட தேசம் ஒரே அரசின் கீழ்தான் ஆளப் பட்டு வந்தது. ஹொய்சளர்களுக்குப் பின் தென் கன்னடம், வட கன்னடம் என்ற பிரிவு ஏற்பட்டு வலுவடைந்தது.

அவர்களது எண்ணம் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதே. சோழர்கள் வலுவிழந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும், பாண்டியர்களின் ஏற்றம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவ்ன் கொண்டு போன கதையாக, சோழர்களை அழித்து அவர்கள் நாட்டை எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தின் முதல் பகுதிதான் நடந்தது. இவர்களுக்கு முன்னமே பாண்டியர்கள் முந்திக் கொண்டனர். இவ்வாறாக, பாண்டியர்கள் மீது ஏற்கனவே தீர்த்துக் கொள்ள வேண்டிய பழி ஒன்று ஹொய்சளர்களுக்கு இருந்தது.

இந்த நிலையில் நாம் ஹொய்சளத் தலை நகருக்குள் நுழைகிறோம். அடடா என்ன விசேஷம் என்றே தெரியவில்லையே. எங்கு பார்த்தாலும் அலங்காரங்களுடன் நகரமே விழக்கோலம் பூண்டிருக்கிறதே. இப்போது ஒன்றும் ஸ்ரீ ராம நவமியோ, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியோ இல்லையே.

பிறகு ஏன் இவ்வளவு ஏற்பாடுகள்? சிறிது நேரம் கவனித்த பின்னரே நமக்கு விளங்குகிறது. ஆம் அன்று வல்லாளன் ஹொய்சள மன்னனாகப் பதவியேற்கிறான். அதுதான் இவ்வளவு அமர்க்களம் எல்லாம். இருக்க வேண்டியதுதானே. அரசனாயிற்றே !.

சரி அப்படியே அரண்மனைக்குள் சென்றால், முன் மண்டபத்தில் அனைவரும் பயபக்தியுடன் புதிய மன்னரின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. உள்பகுதியிலிருந்து வல்லாளன் பூரண அரச உடையணிந்து நனந்து வர, அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள். நல்ல நேரத்தில், வேத கோஷம் முழங்க, ஹொய்சள அரசனாக பதவியேற்றுக்கொண்டான் வல்லாளன்.

புதிய அரசனுக்கு வாழ்த்துக்களும், வாழ்த்து பொருட்களும் வந்த வண்ணமிருந்தன. ஒரு வழியாக இந்த வைபவம் முடிந்தபின் அவையோரை நோக்கி பேசத் துவங்கினார் ஹொய்சள அரசர் வல்லாள தேவர்.

"ஹரிஹி..எனதருமை மக்களே, இன்று என் வயதையும் பாராமல் இந்த ராஜ்ய பாரத்தை என் மேல் ஏற்றிவிட்டீர்கள். எனினும் அதற்காக கவலைப் படாமல் நல்லாட்சி தரவேண்டும் என்ற அடிப்படையில் மகுடம் சிரம் ஏற அனுமதித்தேன். இந்த அரசு அமைவதற்கு நம் முன்னோர்கள் எவ்வாறு கடஷ்டப்பட்ட்டிருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததோடு நின்று விடக்கூடாது."

"என் முன்னோர்களின் தீராத ஆசை ஒன்று உள்ளது. அதைத் தீர்த்து வைப்பதே என் ராஜ்யபாரத்தின் முதற்பணியாக இருக்கும். அப்போதுதான் அந்த வீரர்களின் ஆசிகள் இந்த தேசத்திற்கு பரி பூரணமாகக் கிடைக்கும்."

"அது என்ன என்பது உங்களுக்கு விரிவாக்ச் சொல்ல வேண்டுமென்பதில்லை. ஆயினும் சொல்ல வேண்டியது என் கடமையாகிறது." என்று நிறுத்தி அனைவரையும் ஒரு முறை நன்றாகப் பார்த்தான்.

"இந்த தேசத்தின் நலனையே விரும்புகின்ற நல்லவர்களே, கேளுங்கள். நம் தேசம், பல ஆண்டுகாலம் தமிழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. நாம் நினைத்தும் பல முயற்சிகள் எடுத்தும் அங்கே நம் அரசை நிலை நாட்ட முடியவில்லை என்பது வருந்தத் தக்கதுதான்"

"இப்போது சொல்கிறேன். என் ஆட்சி துவங்கியதின் பலன் தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் பாண்டியர்களை ஒழிப்பதுதான். இப்போது அவர்களுக்குள் சகோதரச் சண்டை மூண்டுள்ளது. இதை தக்க சமயத்தில் உபயோகப் படுத்திக் கொண்டு நம் அரசை தமிழகத்தில் விரிவு படுத்துவதே நம் நோக்கம். இதற்காக நம் உடல் பொருள் ஆவி ஆகியவற்றை செலவிட வேண்டும். செய்வீர்களா?" என்று கேட்டான்.

"ஆம்" என்ற பேராராவாரம் எழுந்தது அந்த மண்டபத்திலிருந்து.

(தொடரும்)

7 comments:

நட்புடன் ஜமால் said...

மீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றி

அப்பாலிக்கா படிக்கிறேன் ...

CA Venkatesh Krishnan said...

நட்புடன் ஜமால் கூறியது...
//
மீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றி
//
???,

//
அப்பாலிக்கா படிக்கிறேன் ...
//
?!?!?!?

☀நான் ஆதவன்☀ said...

//இப்போது அவர்களுக்குள் சகோதரச் சண்டை மூண்டுள்ளது. இதை தக்க சமயத்தில் உபயோகப் படுத்திக் கொண்டு நம் அரசை தமிழகத்தில் விரிவு படுத்துவதே நம் நோக்கம்.//

அடங்கொக்கா மக்கா.....

//இந்தப் பரம்பரையின் இரண்டாம் புலிகேசி பல்லவ மகேந்திர வர்மரை வீழ்த்தி//

தலைவரே இது உண்மையா?? சிவகாமியின் சபதத்தில் கல்கி கொஞ்சம் டீசெண்டா தோக்காத மாதிரி சொல்லியிருப்பாரே?

☀நான் ஆதவன்☀ said...

நல்லதொரு தொடக்கம் இரண்டாம் அத்தியாயத்திற்கு...

CA Venkatesh Krishnan said...

வாங்க ஆதவன்.

ஆமாங்க. இப்படி நமக்குள்ள அடிச்சிக்கிட்டதுனாலதானே வெளியேயிருந்து எல்லாரும் வந்து குந்திகினாங்க !!

என்ன இருந்தாலும் உண்மை உண்மைதானுங்களே!

சத்யாச்ரய புலிகேசி, உண்மையிலேயே சிறந்த அரசன். ஹர்ஷ வர்த்தனர் நமக்கேன் வம்புன்னு இவன் பக்கம் தலை வச்சுக்கூட படுக்கல. மகேந்திர வர்மர் கலைகள்ல ஈடுபட்டு அரசை விரிவாக்கம் செய்றதுல கவனம் செலுத்தல. அதனால ஈசியா காஞ்சியை கைப்பற்றிட்டான் புலிகேசி. பிறகு வந்த நரசிம்மர் வாதாபியை அழித்தது வரலாறு. காஞ்சியின் நிலைக்கு பழிக்குப் பழிதான் வாதாபி வதம். எனவே மகேந்திரவர்மர் தோற்றார் என்பதே உண்மை.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
நல்லதொரு தொடக்கம் இரண்டாம் அத்தியாயத்திற்கு...
//

அண்ணே, இது இரண்டாம் பாகம் அண்ணே!

CA Venkatesh Krishnan said...

7