Wednesday, January 28, 2009

சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் . . . 16

அத்தியாயம் 16 - எது சக்கர வியூகம்?

சக்கர வியூகத்தின் அமைப்பு இதுதான்.




அமைப்பைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள் வியூகத்தைப் ப்ரயோகிக்கும் முறையைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தார்கள். மாதவனும் தொடர்ந்தான்.

'நண்பர்களே, இப்போது வியூகத்தைப் ப்ரயோகிக்கும் முறையை கவனமாகக் கேளுங்கள். இது இரு வகைப் படும். ஒன்று அகண்ட சக்கர வியூகம். மற்றொன்று "த்விசக்கர" வியூகம்."

" முதலாவது அகண்ட சக்கரவியூகம், அதாவது பெரிய சக்கரம் போன்றது. எதிரி படை நடத்த ஆரம்பித்தவுடன், உள் ஆரம் ஒரு பக்கம் ஒதுங்கி எதிரியைச் சுற்றி வளைத்து மீண்டும் வெளி ஆரத்தோடு சேர வேண்டும். இப்படி செய்யும் போது எதிரியின் ஒரு பக்கத்தோடு மோத வேண்டியிருக்கும். இவ்வகை ப்ரயோகம், நாம் மேடான பகுதியிலும் எதிரி கீழான பகுதியிலும் அணிவகுத்து நிற்கும் போது செய்யப்படலாம்.

இவ்வாறு ஒரு பெரிய வட்டத்திற்குள் அதாவது சக்கரத்திற்குள் எதிரியின் படை சிக்கிக் கொள்ளும் போது அனைத்துத் திசைகளிலிருந்தும் தாக்கப்படுவான். எந்த இடத்தில் வியூகத்தை உடைக்கவேண்டும் என்று எதிரி நினைத்தாலும் அதற்கு அருகிலிருக்கும் படைகள் அதன் விலாவைத் தாக்கும் போது எதிரி செயலிழந்து விடுவான்.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் வியூகத்தை நடத்துவதுதான். எதிரியை சுற்றிக் கொண்டு வரும் வரை அவனை திசை திருப்ப வெளி ஆரத்திலிருந்து படைகள் தாக்க வேண்டும். அகண்ட சக்கரவியூகத்தின் ப்ரயோகம் கீழ்கண்டவாறு இருக்கும்."




"அடுத்தது , த்விசக்கர வியூகம். த்வி என்றால் இரண்டு. இரண்டு சக்கரங்களாக வியூகத்தை அமைப்பதுதான் த்வி சக்கர வியூகம். எதிரி மிகவும் வல்லவனாக இருந்து வலுவானவனாக இல்லாவிட்டால் இந்த வியூகம் மிகுந்த பயனைத் தரும்.

முதலில் எதிரியை நம் வட்டத்திற்குள் புகவிட்டு அவனைச் சுற்றி இரு ஆரங்களையும் இணைக்க வேண்டும். அப்போது எதிரியைச் சுற்றி இரு வளையங்கள் இருக்கும். உள் வளையத்தையும் வெளி வளையத்தையும் எதிரெதிர் திசையில் சுழல விட்டு எதிரியைத் தாக்க வேண்டும். ஒரே இடத்திலிருந்து இரு விதமான தாக்குதல்கள் எதிரியை நசுக்கி விடும். த்விசக்கர வியூகத்தின் ப்ரயோகம் கீழ்கண்டவாறு இருக்கும்."




"இவைதான் சக்கரவியூகமும் அவற்றின் ப்ரயோகங்களும். உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருப்பின் கேளுங்கள். அதை நீக்க முயல்கிறேன்" என்று நிறுத்தினான் மாதவன்.

மாதவன் சொல்லச் சொல்ல வல்லாளன், வீர பாண்டியன், கோப்பெருஞ்சிங்கன் ஆகியோரின் கண்கள் விரிவடைந்தன. அடடா இது முன்னமே தெரிந்திருந்தால் இப்போது ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவியிருக்கலாமே என்று எண்ணினார்கள். அவர்களின் அகக் குறிப்பை முகம் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியது. இளவழுதியின் முகத்தில் மட்டும் குழப்ப ரேகைகள். மாதவனை நோக்கி ஏதோ கேட்க வாயெடுத்தவனை சைகையாலேயே அடக்கினான் மாதவன். அவன் குறிப்பை அறிந்து கொண்ட இளவழுதியும் அமைதியானான்.

வல்லாளன்தான் தன் எண்ணவோட்டத்தை அப்பட்டமாக இயம்பினான், "அய்யா, இத்தகையதொரு வியூகம் மட்டும் முதலிலேயே தெரிந்திருந்தால், இந்த தேசத்தையே வென்றிருப்பேனே." என்றான் உணர்ச்சி பொங்க.

'மிக பயங்கரமான வியூகம். எதிரிக்கு அழிவு நிச்சயம்' இது கோப்பெருஞ்சிங்கன்.

"இதை ப்ரயோகித்தவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?" வினவினான் வீரபாண்டியன்.

'அமைதி கொள் வல்லாளா, அதற்குத்தான் இந்த வியூகத்தைப் பற்றி சொல்லத் துவங்கும் போதே நன்மைக்குத் தான் பயன்படுத்தவேண்டும் என்று உறுதி வாங்கிக் கொண்டேன். தேசத்தையே வெல்வது நன்மை ஆகாது. ஆகவே இதைத் தவறாகப் பயன் படுத்த எண்ணாதே, உன்னைத் தாக்க வருபவர்களுக்கு எதிராகப் ப்ரயோகம் செய்' என்று கண்டிப்புடன் கூறிய மாதவன், "வீர பாண்டியா நான் முன்பே சொன்னது போல் பாரதப் போரில் தான் இது ப்ரயோகம் செய்யப் பட்டது. அதற்குப் பிறகு வழி வழியாக சொல்லப் படுகிறதே தவிர பயன் படுத்தப் பட்டதில்லை. பாரதப்போரில் சக்கரவியூகத்தால் ஏற்பட்ட அழிவை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?" என்று நிறுத்தினான்.

சற்று நேரம் மௌனம் நிலவியது. இளவழுதி எதுவும் கேட்காமலேயே இருந்தான். "நல்லது வேறு கேள்விகள் ஏதும் இல்லாத பட்சத்தில் நாம் நமது வழிகளை நோக்கிச் செல்ல வேண்டியதாகிறது. நன்மைக்காகவே இதைப் பயன்படுத்துவோம் என்ற உங்கள் சத்தியத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன். வெற்றி உங்களுடையதாகட்டும்." என்று முடித்தான் மாதவன்.

"நிச்சயமாக அய்யா. என் மனதில் தோன்றியதைக் கூறியதால் நான் தவறாகப் பயன் படுத்துவேன் என்று எண்ண வேண்டாம். நான் துவார சமுத்திரம் செல்ல வேண்டியுள்ளது. வடக்கிலிருந்து பகைவர்களின் தொல்லை அதிகமாகிவிட்டது" என்று விடை பெற்றான் வல்லாளன். அவ்வாறே கோப்பெருஞ்சிங்கனும் வெளியேறினான்.

வீர பாண்டியன், இளவழுதி மற்றும் மாதவன் மட்டுமே இருந்தனர். "நன்றி அய்யா. நான் மதுரை செல்கிறேன். இளவழுதி என்னுடன் வருகிறாயா?" என்று வினவினான்.

இளவழுதிக்கு உண்மையிலேயே திருவெண்காட்டில் ஒரு வேலையிருந்தது. இடையில் மாதவனின் சைகை வேறு அவனை நிறுத்திவிட்டது "இல்லை வீரா, என் தந்தை திருவெண்காட்டிற்குச் செல்ல பணித்துள்ளார். ஆகவே அங்கு சென்று வர வேண்டும். நீ புறப்படு. நான் பிறகு மதுரைக்கு வந்து விடுகிறேன்." என்றான். வீர பாண்டியனும் தலையாட்டிவிட்டு கிளம்பினான். இளவழுதியும், மாதவனும் தனித்து விடப்பட்டனர்.

"இளவழுதி, இப்போது கேள் உன் சந்தேகத்தை" என்றான் மாதவன்.

"அய்யா, சக்கர வியூகத்தைப் பற்றி ப்ரதானாசாரியார் கூறும் போது மதங்களைப் பற்றி கூறினார். நீங்களும் போர் நிலை, பொது நிலை என்று இரண்டு வியூகங்களைப் பற்றி முதலில் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீங்கள் சொன்னது போர் நிலை மட்டும்தான். பொது நிலையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே."

"இளவழுதி நானும் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன், இந்த சந்தேகம் மற்றவர்களுக்குத் தோன்றாதது ஏன்?" என்று கேட்டான் புன்னகைத்தவாறே. இளவழுதிக்கு குழப்பம்தான் அதிகரித்தது. அதைப் புரிந்து கொண்ட மாதவன்.

"இளவழுதி, இதில் குழப்பத்திற்கு இடமில்லை. ஆசாரியார் எவ்வளவு தீர்க்க தரிசி. நான் உங்களுக்கு இதைப் பற்றி சொல்லப் போவதாக அவரிடம் தெரிவித்தேன். அவரது உபாயம்தான் இது. என்னை முதலில் போர் முறை பற்றி சொல்லி நிறுத்திவிடும் படியும், மேலும் தொடர்ந்து கேட்பவர்களுக்கு மட்டும் முழுமையாகச் சொல்லும் படியும் அதுவும் தனியாகக் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் படியே ஆயிற்று.

போர் முறையைப் பற்றி தெரிந்து கொண்டதும் அவர்கள் போர்க்களத்திலேயே மூழ்கிவிட்டார்கள். ஆகவே நான் சொல்லவந்ததும் மறந்து விட்டது. ஆசாரியார் சொல்லாமல் விட்டதும் மறந்து விட்டது. நீ மட்டும் தான் முழுமையாகக் கவனித்தாய். எனவே மிகுதியையும் தெரிந்து கொள்வதற்கு நீ மட்டும்தான் தகுதியானவன் ஆகிறாய். நீ அங்கேயே உன் சந்தேகத்தை எழுப்பியிருந்தால் மற்றவர்களும் சுதாரித்துக் கொண்டிருப்பார்கள். எனவே உன்னை எச்சரிக்கை செய்தேன். " என்று நிறுத்தினான் மாதவன்.

"அய்யா. அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் மறந்து போயிருக்கலாம் அல்லவா?"

"உணர்ச்சிகளுக்கு இடம் கொடாதவனாலேயே இந்த வியூகத்தை சிறப்பாக அமைத்து செயல்படுத்த முடியும். ஆகவே அவர்கள் இந்தத் தேர்வில் தவறிவிட்டார்கள். சக்கரவியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் தகுதியையும் இழந்து விட்டார்கள். சரி. உனக்கு முழுமையாகச் சொல்லி விடுகிறேன். பொது நிலை வியூகம் என்பது மக்களிடையில் ஏற்படுத்துவது..." என்று துவங்கிய மாதவன் சற்றொப்ப மூன்று நாழிகைகளுக்கும் மேலாக விளக்கினான். இடையிடையே இளவழுதி கேட்ட கேள்விகளுக்கும் விடையிறுத்தான்.

"இளவழுதி, இப்போது சக்கர வியூகம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டாய். உன்னால் இந்தத் திரு நாட்டிற்குப் பெரும் நன்மை நிகழப் போகிறது என்பது மட்டும் உறுதி. என் கணிப்பில் இறைவன் திருவுளப்படி இதன் ப்ரயோகத்தை விரைவிலேயே தொடங்க வேண்டும். உனக்குக் குறிப்பு வரும். நான் வட தேச யாத்திரை செல்கிறேன். மீண்டும் காஞ்சிக்குத் திரும்புவது கடினம்தான். ஆயினும் உன்னை தக்க சமயத்தில் சந்திக்க வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறேன். வெற்றி உனக்கே. ஜய விஜயீ பவ" என்று வாழ்த்தி சற்றும் தாமதிக்காமல் கிளம்பிச் சென்றான் மாதவன்.

முடிவில் இளவழுதியால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு பூதம் தன் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புகுந்துவிட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. அசையாமல் அமர்ந்திருந்தான் மாதவன் சென்ற திசை நோக்கி.

(தொடரும்)

13 comments:

Sathis Kumar said...

சக்கர வியூகம் பிரமாதம்..

☀நான் ஆதவன்☀ said...

சொல்ல வார்த்தைகள் இல்லை பல்லவன். அத்தனை சுவாரஸ்யம். தொடருங்கள்....

கேட்டுக்கொண்டதற்கிணங்க படங்கள் போட்டமைக்கு நன்றி

நசரேயன் said...

படங்களும் விளக்கங்களும் அருமை

ராபின் ஹூட் said...

அய்யா, சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பதையும் சொல்லுங்கள்.

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
சக்கர வியூகம் பிரமாதம்..
//

நன்றி சதீசு குமார்,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கின்றீர்கள்.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
சொல்ல வார்த்தைகள் இல்லை பல்லவன். அத்தனை சுவாரஸ்யம். தொடருங்கள்....

கேட்டுக்கொண்டதற்கிணங்க படங்கள் போட்டமைக்கு நன்றி
//

நன்றி ஆதவன்,

எல்லாம் உங்களைப் போன்றோரின் ஊக்கம் தரும் ஆக்கம் தான்!!

CA Venkatesh Krishnan said...

//
நசரேயன் கூறியது...
படங்களும் விளக்கங்களும் அருமை
//

நன்றி நசரேயன் !

CA Venkatesh Krishnan said...

//
ராபின் ஹூட் கூறியது...
//

வருகைக்கு நன்றி ராபின் ஹூட்.

//
அய்யா, சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பதையும் சொல்லுங்கள்.
//

நிச்சயமாக !!!

Anonymous said...

மிக அருமை.

Anonymous said...

சுபா கூறியது,
எனக்கு சரித்திர நாவல் பிடிக்காது.
நான் முதன் முதலில் படித்த சரித்திர நாவல் தங்களின் "சக்கர வியுகம்'.மிக அருமையாக உள்ளது.
அதுவும் இந்தவாரம் கண் எதிரில் திரைகாட்சி நகர்வது மாதிரி உணர்ந்தேன்.
பாரட்டுக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அனல் பறந்துக்கிட்டு இருக்கே...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
அய்யா, சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பதையும் சொல்லுங்கள்.
//

நிச்சயமாக !!!





இது கிருஸ்ணர், அஸ்வத்தாமன் , அர்ஜுன் போன்று ஒரு சிலருக்குத்தான் தெரியுமாமே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிலிஷ்லயும் சேர்த்துங்க பாஸ்...

இன்னும் நிறையப் பேர் படிப்பாங்க