Friday, January 2, 2009

டேய்ய்ய்....

எழும்பூர்... மதியம் 3.25.

அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.

இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.

அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,

'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.

'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...

பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.

'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.

'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.

வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....

'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.

அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.

'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.

பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...

இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள். அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.

எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.

விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.

'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.

'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.

'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.

'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'

அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.

'தாங்க்ஸ் சார்.' என்றாள்.

மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.

முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.

பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.

அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.

'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,

'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,
கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.

நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.

அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,

அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.

டேய்ய்ய்....

10 comments:

CA Venkatesh Krishnan said...

வாசகர்களின் ரசனைக்காக...இது ஒரு மீள்பதிவு. என் முதல் பதிவும் கூட.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழகான அற்புதமான......

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...
அழகான அற்புதமான......
//
நன்றி

☀நான் ஆதவன்☀ said...

ஏற்கனவே படிச்சது தான்..ஆனாலும் திரும்ப படிக்க நல்லாயிருக்கு பல்லவன்

நட்புடன் ஜமால் said...

\\"டேய்ய்ய்...."\\

மிரட்டும் அல்லது விரட்டும் தலைப்பு ...

நட்புடன் ஜமால் said...

\\அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.\\


ம்ம்ம் ... அருமை.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த ‘டேய்’ கேட்டுக்கொண்டிருக்குமோ, எனது செவியினிலும் ...

புருனோ Bruno said...

அருமையான நடை

CA Venkatesh Krishnan said...

நன்றி ஆதவன் !

நன்றி ஜமால் !

நன்றி டாக்டர் ப்ரூனோ !

குடுகுடுப்பை said...

மீள் பின்னூட்டம்

CA Venkatesh Krishnan said...

மீண்டும் நன்றி குடுகுடுப்பையார் அவர்களே !