Monday, December 22, 2008

வேண்டாம் வரலாறு

வரலாறு என்ற பாடம் பள்ளிகளிலிருந்து நீக்கப் படவேண்டும். வாழ்க்கைக்கு உதவாத ஒரு பாடம் உண்டென்றால் அது வரலாறுதான். மற்ற பாடங்களிலாவது நமக்குத் தேவையானவை இருக்கிறது. அசோகர் மரம் நட்டார். அவர் குளம் வெட்டினார். இவர் கால்வாய் கட்டினார். இவர் அவரை வென்றார். அவர் இவரை கொன்றார் என்பதெல்லாம் படிப்பதால் என்ன லாபம்?

மேலே சொன்னவை என் நண்பர் ஒருவரின் கருத்துகள். அவர் மிகத் தீவிரமாக வரலாற்றை எதிர்த்தவர்.

சிலர் படிக்கும் போது பாஸ் செய்யவேண்டிய அளவுக்கு வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், வரலாறு மிக முக்கியமானது (நன்றி:இ.அ.இ.மூ.புலிகேசி). ஏனென்றால் இப்போது நாம் ஓரிடத்தில் இருக்கின்றோம், ஓர் திக்கை நோக்கிப் பயணிக்கின்றோம் என்றால், எங்கிருந்து வந்தோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். அந்த ஆர்வத்திற்கு தூபம் போடும் விதமாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளேன். அதாவது வரலாறு கேள்வி-பதில் தொடங்கியிருக்கிறேன். தமிழக / இந்திய / உலக வரலாற்றில் ஏதேனும் கேள்விகளோ, சந்தேகங்களோ இருந்தால், ஏதோ ஒருவிதமாகத் தேடிப்பிடித்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையலாம்.

===

முதல் பகுதியானதால் நானே கேள்வி, நானே பதில்.

1. இதைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? இதற்கு வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

வரலாற்றின் பால் பெரும்பான்மையோருக்கு ஒரு வித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதை மறுக்கவியலாது. ஆயினும், வரலாற்றை அறிந்து கொள்வதை மக்களிடம் பரவலாக்கி அதன் மூலம் நம் பெருமை அருமைகளை அனைவரும் அறிந்திடல் வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடே இந்தச் சிறு முயற்சி.

நன்முயற்சிகள் யாவிற்கும் வரவேற்பில் எவ்விதக் குறைவுமிராது என்ற நம்பிக்கையே இந்த முயற்சியின் அடித்தளம்.


2. வரலாறு என்றால் என்ன?

வரலாறு என்பது அரசுகள், வம்சங்கள் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற ஓயாப் பெரும்போர்களின் நாட்குறிப்பே என்ற தவறான புரிதல் அனைவருக்கும் உண்டு. புவியியல் சார்ந்த அரசியல் நிலப்பகுப்பில் இருந்த அரசுகள், மக்கள், பழக்க வழக்கங்கள், வணிகம், இலக்கியம், கலை மற்றும் பல விடயங்கள் அனைத்தும் வரலாறுதான். இங்கு புவியியலுக்கும், அரசியலுக்கும் வரலாற்றில் முக்கியப்பங்குண்டு. ஏனெனில் மேற்சொன்னவற்றின் வளர்ச்சி வீழ்ச்சிகளில் அரசியல் மற்றும் புவியியலின் தாக்கம் பெரும்பான்மையினது. ஆகவே அரசியல் முக்கியமாகவும் மற்றவை அதன் அடியொற்றியும் விவரிக்கப் படுகின்றன.

அஃதாவது சுருங்கக் கூறின், இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு.

3. வரலாறு எவ்வாறு அறியப்படுகின்றது?

வரலாறு இலக்கியங்கள் வாயிலாகவும், அரசு சாசனங்கள் வாயிலாகவும், பயணக்குறிப்புகள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியப் படுகின்றது. ஆகவே தற்போது நமக்குக் கிடைக்கும் வரலாறு ஒரு சராசரியே தவிர சரியானதன்று.

மேலும் இவற்றில் கிடைக்கும் தகவல்கள் மற்ற தகவல்களுடன் ஒத்துப் போகின்றனவா என்ற நோக்கிலும் சரிபார்க்கப் படுகிறது. ஒரே தகவல் பல்வேறு தரவுகளிலிருந்து கிடைக்குமாயின் அத்தகவல் உண்மைதான் என்று உறுதிப்படுத்தப் படுகிறது.


4. வரலாறு உண்மையானதா? புனைந்துரைத்ததா?

வரலாறு என்பது நிகழ்வுகளின் பதிவுகளன்று. அது வரலாற்றைப் புனைபவரின் பார்வையும் கருத்துமாகும் (History is not the listing of facts. It is full of reporter's views and perspectives).

ஆகவே வரலாறு எப்போதுமே ஒரு பக்கத்தைத் தாழ்த்தியும் மறு பக்கத்தை உயர்த்தியும் காட்டும். இதைச் சமன் செய்து பார்க்கவேண்டியது பயனீட்டாளர்களின் பணியாகிறது.

இவ்வகையில் நோக்குங்கால் வரலாறு பெரும்பாலும் புனைவேயென்பதும், அன்னப்பறவை நீர் விடுத்து பாலருந்தும் விதமாய் புனைவு நீக்கி உண்மை அறிதல் தேவையென்பதும் தெள்ளென விளங்கும்.


5. வரலாற்றைப் படிப்பதால் பயன் என்ன?

ஒரு நாகரீகமோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ செயல் படும் போக்கானது அதன் வரலாற்றைச் சார்ந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் தமிழரல்லாத தலைவர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றவிடங்களில் அவ்வாறன்றி பிற மொழியாளர்கள் சற்றும் மேலே வருவது காண்பதரிதாயிருக்கின்றது. இதன் காரணத்தை ஆய்வோமெனில் கடந்த 7 நூற்றாண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி தமிழரல்லாதோர் வசம் இருத்தல் காணலாம். இதனடிப்படையிலமைந்ததே நம் சக்கரவியூகம்.

இவ்வாறாக வரலாற்றைப் படிப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்குக் குறிப்பான தீர்வு காணுதல் இயலுமென்பதை சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்.

====

இப்படிதாங்க. பொதுவா கேக்கலாம். குறிப்பா கேக்கலாம். வரலாறு சம்பந்தமா இருக்கணும் அவ்வளவுதான். இனி நீங்க கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..

சரி இந்த நடை எப்படி இருக்கு? அதையும் சொல்லிட்டு போங்க.

தம்ஸ் அப்ல குத்துங்க. அப்பதான் எல்லாரும் வந்து கேள்விக்கணைகளத் தொடுக்கறதுக்கு வசதியா இருக்கும். என்ன நாஞ்சொல்றது?

18 comments:

Sathis Kumar said...

அருமையான பதிவு, இதனை நட்சத்திர வாரத்தில் போட்டிருக்கலாம்.. :)

☀நான் ஆதவன்☀ said...

நல்ல ஐடியா பல்லவன். சிறுவனான எனக்கு வரலாற்றில் பல சந்தேகங்கள் உள்ளன. இனி உங்களிடம் கேட்கலாம்.

தம்ஸ் அப் குத்திட்டேன் :-)

பாபு said...

நல்ல முயற்சி, பாராட்டுகள்

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் கூறியது...
//

நன்றி சதீசுகுமார் அய்யா,

என்ன செய்வது? இப்போதுதான் தோன்றுகிறது.

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் கூறியது...
சிறுவனான
//

சரி ஒத்துக்கொள்கிறோம். நீங்கள் சிறுவன் தானென்று;-)))

CA Venkatesh Krishnan said...

//
பாபு கூறியது...
//
நன்றி பாபு

நாஞ்சில் பிரதாப் said...

ஆஹா...சரியா மாட்டீனீங்க...உங்களைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்.
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நம் அக்பருக்கு ஆயிரம் பொண்டாட்டியாம்ல...உண்மையா???
எப்படிங்க???

எஸ்கேப் ஆகாம ஒழுங்கு மரியாதையா எனக்கு பதில் வேணும்.

இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க???

வெங்கட்ராமன் said...

நல்ல முயற்சி இளைய பல்லவன்.
நானும் சில சந்தேகங்களை கேட்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

//
நாஞ்சில் பிரதாப் கூறியது...
ஆஹா...சரியா மாட்டீனீங்க...
//

வாங்க நாஞ்சில் ப்ரதாப்,

எடுத்தவுடனே பவுன்சரா!!

கலக்குங்க. அடுத்த வாரம் வரை பொறுங்க.

நசரேயன் said...

நடையும் முயற்சியும் நல்லா இருக்கு

CA Venkatesh Krishnan said...

நன்றி வெங்கட்ராமன்
நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

5. வரலாற்றைப் படிப்பதால் பயன் என்ன?

ஒரு நாகரீகமோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ செயல் படும் போக்கானது அதன் வரலாற்றைச் சார்ந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் தமிழரல்லாத தலைவர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றவிடங்களில் அவ்வாறன்றி பிற மொழியாளர்கள் சற்றும் மேலே வருவது காண்பதரிதாயிருக்கின்றது. இதன் காரணத்தை ஆய்வோமெனில் கடந்த 7 நூற்றாண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி தமிழரல்லாதோர் வசம் இருத்தல் காணலாம். இதனடிப்படையிலமைந்ததே நம் சக்கரவியூகம்.

இவ்வாறாக வரலாற்றைப் படிப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்குக் குறிப்பான தீர்வு காணுதல் இயலுமென்பதை சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன். //

சரியான ஆய்வு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு சம்பவம் என்பது நேற்று


சரித்திரம் என்பது இன்று

அது சாதனை ஆவது நாளை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சரித்திரங்களை ஆராய்ந்தால் மட்டுமே சாதனைகள் உருவாக முடியும்

கபீஷ் said...

//வெங்கட்ராமன் கூறியது...
நல்ல முயற்சி இளைய பல்லவன்.
நானும் சில சந்தேகங்களை கேட்கிறேன்.
//

வழிமொழிகிறேன்.:-)

CA Venkatesh Krishnan said...

நன்றி குடுகுடுப்பை


//
SUREஷ் கூறியது...
சரித்திரங்களை ஆராய்ந்தால் மட்டுமே சாதனைகள் உருவாக முடியும்
//
உண்மை சுரேஷ்.இது பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.


நன்றி கபீஷ்

அமுதா said...

நல்ல முயற்சி. பாராட்டுக்கள். எனக்கு கூட ஸ்கூல் படிக்கும்பொழுது வரலாறு பிடிக்காது. பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்கள் படிக்கும்பொழுது தான் வரலாற்றின் மீது ஒரு பிடிமானம் ஏற்பட்டது. இப்ப என் பெண்ணுக்கும் வரலாறு பிடிக்கவில்லை. அதை சுவாரசியமாக மாற்ற முய்ற்சிக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

நன்றி அமுதா !